Saturday, February 9, 2019

மீண்டும் அபூ தர் ... II

   மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்

அத்தியாயம் 2

        
         நிறைந்து கவிந்திருக்கும் ஒடுக்கும் இரவின் கும்மிருட்டில், வைகறை, மற்றொரு சூரிய உதயத்தின் செல்வாக்கால் பீடிக்கப்பட்டிருந்தது; இவ்வுலகம், அது புயலுக்கு முன் இருக்கும் அமைதியில் இருந்தது; மேலும் வரலாறு, அது உலகக் கடவுள்கள், அதன் நிழல்கள், அடையாளங்களுக்கு எதிராகவும் பரலோகக் கடவுள்களுக்கு எதிராகவும் - பல தெய்வக் கொள்கைக்கு எதிராகவும் - வரவிருக்கும் ஒரு பெரும் கலகம் குறித்த ஆழ்ந்த யோசனையில் இருந்தது.

         மனசாட்சிகளின் ஆழத்தின் மீது படரும் 'இறை நாட்ட'த்தின் நிழலிலும், மானிட இருப்பின் சாராம்சத்துடன் மேம்போக்காகவேனும் தொடர்புகொண்டிருக்கும் ஆதி இயற்கைச் சுபாவங்களின் மறைவான நிலையிலும் விவரிக்க இயலாத, வினோதமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. புயலின் வருகையை உணர்ந்துகொண்டு, அவசர அவசரமாக, தங்கள் வாழிடத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து செல்லும் காட்டுப் பறவைகளுக்கு, மோப்பச் சக்தியினூடாக ஏற்படக்கூடிய புதிரான உணர்வுபோல, அல்லது, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னரே விழிப்படைந்துகொண்டு கடிவாளத்தை அறுத்தெறிந்துவிட்டு தங்கள் எஜமானனின் வீட்டைவிட்டு வெளியேறி, சேணமற்ற, ஓட்டுநரற்ற நிலையில் பாலைவனம் நோக்கிச் செல்லும் உஷாரானக் குதிரைகளின் பூடகமான உள்ளுணர்வுபோல, தனித்திருக்கும் ஆன்மாக்களும் ஏதோ வினோதமான, மிகப் பெரிய விஷயம் நடக்கப்போகிறதென்பதை உணர்ந்துகொள்கின்றன! சில நேரங்களில் ஒரு மனிதனே ஓர் உலகம்; ஒரு தனிநபரே ஓர் சமூகம்!

         குறைஷிகளின் வணிகம்சார் கேரவான்களின் பயணத்துக்கும் கஃபாவுக்கான யாத்திரைக்கும் பயன்படும் வழிப்பாதையில் அமைந்துள்ள, மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடைப்பட்ட பாலை வனாந்தரமான ரபாதாவின் வறுமைப் பிடித்தாட்டும் ஒரு கோத்திரமான கிஃபாரைச் சேர்ந்த பாலைவன நாடோடி ஜுனாதாவின் மகன் ஜுன்துபும் அவருடன் இருந்த ஏனைய நெஞ்சுரம் மிக்கவர்களும் சம்பிரதாயங்களையும் நியதிகள்-சட்டதிட்டங்களையும் துணிவுடன் எதிர்கொண்டனர். விளைவாக, அத்தகைய ஏற்பாடுகள், முறைமைகளிடத்தில் தஞ்சம் புகுந்துகொண்டு அவற்றின் தயவிலும், பாதுகாப்பிலும் செளபாக்கியத்துடன் வாழ்ந்துவந்தவர்களின் கண்களுக்கு இவர்கள் தீவினைகளுக்குப் பேர்போனவர்களாகவும் காட்டான்களாகவும் கேடுகெட்டவர்களாகவும் அறம் தவறியவர்களாவும் காட்சியளித்தனர்! இங்கே அறம் என்பதற்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றி நடப்பதும், நியதிகளுக்குக் கீழ்ப்படிவதுமே பொருள். பிரத்தியேக மரியாதைக்கும் சிறப்பந்தஸ்துக்கும் உத்தரவாதம் வழங்கும் பாதுகாப்பு அரண்களே இவையெல்லாம். உரிமைகள், ஒழுங்குமுறை, பாதுகாப்பு எல்லாம் எதற்காகவென்றால், அப்பொழுதுதான் இந்த மனிதனால் உலகாயத பசிகொண்ட ஒரு கூட்டத்துக்கிடையே ஓகோவென்று தான் நடத்தும் விருந்தோம்பல்களில் நன்கு புசிக்கவும் உல்லாசம் அனுபவிக்கவும் முடியும்.

         
கிஃபார்: தீய செயல்களுக்குப் பேர்போன ஒரு கோத்திரம்; வழிப்பறி கும்பல்! வர்த்தகக் கேரவான்களிலிருந்து சரக்குகளையும் அடிமைகளையும் கொள்ளையடித்துச் செல்லும் திருட்டு கும்பல்; காட்டான்கள்; நான்கு புண்ணிய மாதங்களின் புனிதத்தைக்கூட கட்டிக்காக்க இயலாதவர்கள். இந்த நான்கு மாதங்கள் முழுக்க அரேபிய தீபகற்பத்தில் அமலில் இருக்கும் கட்டுக்காவலையும்கூட இவர்கள் தொந்தரவு செய்வார்கள். யாத்திரைக்கான இந்த மாதங்களில், ரோம், மக்கா, ஈரான் ஆகிய பகுதிகளுக்கிடையில் மதத்தின் பாதுகாப்பில் வலம்வரும் வர்த்தகக் கேராவான்கள், ரபாதாவின் ஆபத்தான பகுதியைக் கடந்து செல்கையில் அங்கே அவர்கள் கிஃபாரைப் பார்ப்பார்கள்; வாள்களைத் தலைக்கு மேலாகச் சுழற்றிக்கொண்டு, அவரவர் மறைவிடங்களிலிருந்து தங்களை நோக்கிப் பாய்ந்துவரும் கிஃபாரை.

         கிஃபாரின் மக்களான இந்த ஏழைகள், பாவிகள், பொல்லாத மக்கள் வர்த்தகக் கேராவான்களை நோக்கி பிச்சைப் பாத்திரத்தைப்போல தங்கள் கைகளை நீட்டுவதற்குப் பதிலாக, தங்கள் வாள்களை எஜமானர்களுக்கு எதிராக நீட்டுகின்றனர்!

         இவர்களில் ஒருவர்தான் ஜுன்துபின் மகனும். இதன் காரணத்தால்தான், அவர் அபூ தர்ராக மாறிய பின்னாளில் வயிறுகாய்ந்த ஒரு மனிதர் தனது வீட்டில் ரொட்டியில்லாமல் இருப்பதைப் பார்க்க அவருக்கு மலைப்பாக இருந்தது, "மக்களுக்கு மத்தியிலிருந்து கிளர்ந்தெழுந்து, உருவிய வாளுடன் இவர் ஏன் கிளர்ச்சி செய்யாமல் இருக்கிறார்."

         கொடுங்கோல் முறைமை ஒன்றில், ஒவ்வொரு சட்டதிட்டம், நியதி, சம்பிரதாயம், அறம், ஒழுங்குமுறை, பாதுகாப்பு ஆகிய அனைத்தும் கொடுங்கோன்மைக்கான பாதுகாப்பு அரண் என்பதும், அதற்குக் கீழ்ப்படிதல் மடமை என்பதும், ஏனைய கிஃபார் மக்களைப் போல ஜுன்துபின் மகனான ஜுனாதாவுக்குத் தெரியும். ஆனால், இவர் ஓர் எட்டு அதிகமாக எடுத்துவைத்தார், ஓர் இறுதி எட்டு; மற்றெவரையும்விட அதிக தூரம் செல்லும் வகையில். ஆளும் மதம் இங்கே ஓர் பாரிய பங்களிப்பு செலுத்திக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். ஆதலால், அதற்குக் கீழ்ப்படிதல், குஃப்ர்!

         அப்படியென்றால் சிலை? என்ன இது? வணங்குதல், வழிபடுதல், விரதம் ஏற்றல், தேவைகளை முன்வைத்தல், கிஃபார்களுக்கு மரண மிரட்டல் விடுத்துவந்த பஞ்சம், வறட்சியிலிருந்து தங்கள் உயிர்காக்கும் மழைக்காகக் கெஞ்சுதல் ஆகியவற்றுக்கான ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் துடிதுடிப்புடனும் உற்சாகத்துடனும் அவரது கோத்திரம் ஓர் இரவில், கிஃபாரின் (கடவுள்) சிலையான மனாத்தை தரிசிப்பதற்காக யாத்திரை சென்றிருந்தது. இந்தத் தருணத்தில் சந்தேகம் ஒன்றின் புனிதச் சுடர், அவரது நிச்சயத் தன்மையின் அடிஆழத்தில், அவரை நெருடுகிறது.

         கோத்திரமெல்லாம் அயர்ந்து உறங்கிய பிறகு, தீவிர யோசனையின், ஆழமான, இடையறாத பரிசீலனைகளின் தென்றலால் இந்த ஞானத்தின் சுடர் மேலும் மூட்டிவிடப்படுகிறது. அந்த மயான அமைதியில், பாலை வனாந்தரமும் இரவு வானத்தின் அடர் இருளும் கைகோத்திருந்த மனாத் சிலையின் சுற்றுப்புறத்தில் அவர் கூடாரம் ஒன்றை அடித்திருந்தார். அதிலிருந்து ஓசைப்படாமல் எழுந்துநின்று, கல் ஒன்றை எடுத்துக்கொண்டு, நிச்சயமற்ற தன்மையிலும் சந்தேகத்துக்கும் நிச்சயத் தன்மைக்கும் இடையே ஊசலாடிய நிலையிலும் முன்னகர்கிறார்; தன் காலத்து தெய்வத்தின் கண்களையே வெறித்துப் பார்த்தபடி ஒரு கணம் நிற்கிறார். பார்வையற்ற இரு கண்களைத் தவிர வேறெதையும் அவர் பார்க்கவில்லை. அறியாமையைக் கொண்டும் கொடுங்கோன்மையைக் கொண்டும் கடைந்தெடுக்கப்பட்ட, கல்லால் ஆன அந்தச் சிலையை தனது முழுக் கோபத்தில், வெறுப்பில் தாக்குகிறார்.

         கல்மீது கல் படும் சத்தம் ... பிறகு, ஒன்றுமில்லை. நூற்றாண்டுகளாக தனது ஆன்மாவைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்பட்ட சங்கிலிகள், தளைகள், விலங்குகளிலிருந்தெல்லாம் ஒரே சமயத்தில் விடுதலை பெற்று, முழுமுதல் கடவுளை நோக்கி விமோசனத்துடன் திரும்பிக்கொண்டிருந்த அவர், படைப்புகள் தோன்றிய நாளிலிருந்து தன்னைச் சிறைப்படுத்தி வைத்திருந்த ஓர் ஆழமான கிணற்றிலிருந்தும் குறுகலான, இருண்ட ஒரு குகையிலிருந்தும் - தனிமையிலும் யாருக்கும் தெரியாமலும் - தான் வெளியேறி விட்டிருப்பதை உடனடியாக உணர்ந்துகொள்கிறார். கரைதட்டாத ஒரு பெருங்கடலான வனாந்தரத்தையும் அதிலிருந்து தெரியும் தொலைதூர, விசாலமான எல்லைகளையும் வானத்தையும் அவர் பார்க்கிறார்! மகிமையால் சூழப்பட்ட அவை ரம்மியமாகவும் ஆழமாகவும் புதிராகவும் இருந்தன ... அப்பொழுதுதான் அவற்றை முதல் தடவை பார்த்ததுபோல, பார்ப்பதுபோல, இருந்தது அவருக்கு.

         நம்பிக்கை மற்றும் நிச்சயத் தன்மையினூடாக விடுதலையையும் ஓர் வெறுமையையும் அவர் எட்டிவிட்டிருந்தார். மேலும் இப்பொழுது, சிறுகச்சிறுக, நம்பிக்கை மற்றும் நிச்சயத் தன்மையின் புதிய, ஆனால் தெளிவான, பெரிதான, ஆழமான, பிரக்ஞைபூர்வமான விளிம்புகளை நோக்கி, தானே தேர்வுசெய்யப் போகும் விஷயத்தை நோக்கி அவர் நகர்ந்துகொண்டிருந்தார்!
 
         மேன்மேலும் உக்கிரம் அடைந்துவரும் இடையறாத சிந்தனை மழையின் கீழ், இருண்டு கிடக்கிற, வறண்டுபோன, தவிக்கிற தனது அகப் பாலைவெளியில் நீரூற்றுகள் தனக்காகப் பீறிடுவதை அவர் உணர்ந்துகொள்கிறார். இப்பொழுது, 'தண்ணீர் ஊறும் சத்தம்!' ஒவ்வொரு கணமும் வேகவேகமாக; அதன் மட்டம் அதிகரித்துக்கொண்டே சென்று அவரது அகத்தை முற்றாக மூழ்கடிக்கிறது; அதைக்கொண்டு அவர் நிரம்பியிருந்தார். அவஸ்தையான வீக்கமும் வேதனையுடன்கூடிய உற்சாகமும் நிறைந்த பிரசவித்தல் ஒன்றை இவ்வுலகில் தனிமையில் எதிர்கொள்ளும் பெண்போல, நிழல் மட்டுமே எஞ்சியிருந்த பாலையில், சாமத்தில், பாலைவனத்தின் முற்றும் அறிந்த வானத்தின் கீழ், தான் உயிர்த்திருப்பதற்கு ஆதாரமான எல்லா அணுக்களும் 'அவனை' நோக்கித் திரும்புகின்றன! உடனடியாக அவர் புழுதியில் விழுகிறார், நெற்றியை பூமி மீது பதித்தவராக. நிதானமின்மையின், தொன்மையான உணர்ச்சிகளின் சத்தமெல்லாம் பீறிட்டுக்கொண்டு வருகிறது, அழுகை!

          இதுதான் அபூ தர்ரின் முதல் உண்மையான வழிபாடு. "அல்லாஹ்வுடைய தூதரைச் சந்திப்பதற்கு முந்தைய மூன்று வருடங்கள், நான் இறைவனை வழிபட்டுக்கொண்டிருந்தேன்."

"எந்தத் திசை நோக்கி நீங்கள் திரும்பினீர்கள்?"

"எந்தத் திசையில் அவனை நான் உணர்ந்துகொள்ளும்படி செய்தானோ அதே திசையை நோக்கி."

         மக்களின் மதங்களைப் பரிகசிக்கிற; மக்களின் புனித விஷயங்களை 'போலி' என்று விளிக்கிற; கஃபாவின் பெரும் சிலைகளை எல்லாம், 'ஊமையான, அடிமுட்டாள் கற்கள்' என்று பெயர் சொல்லி அழைக்கிற; அனைவருடைய கடவுள்களுக்குப் பகரமாகவும் ஒரே கடவுளை நிலைநிறுத்தியிருக்கிற ஒரு மனிதர் மக்காவில் முளைத்திருக்கிறார் என்பதை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கேள்விப்படுகிறார்.

         மதத்துக்கும் அரபு நெறிமுறைக்கும் நேர்ந்துவிட்ட ஓர் அவலம் என்பதுபோல கிஃபார் வழிப்போக்கர்களும் பிரயாணிகளும் இந்தச் செய்தியைப் பார்த்தனர். அவர்கள் கேலியும் வெறுப்பும் தொனிக்கும் வார்த்தைளில் அவரைப் பற்றிப் பேசினர். ஆனால் ஜுன்துபோ இவற்றுக்கிடையில் தொலைந்துபோன தனது சுயத்தைக் கண்டார். தங்கள் பல தெய்வக் கொள்கையையும் மாசுபடிந்த, அஞ்ஞான மூடநம்பிக்கைகளையும் சிலை-அழிப்பாளரான ஆபிரஹாமுடன் தொடர்புபடுத்தும் இந்த ‘மிச்சசொச்சத்தின்-வணங்கிகள்’ இதனை எப்படிக் கண்டித்தாலும் இதனை குஃப்ர் என்று அழைத்தாலும் இதனை சமூகத்தில் ஏற்பட்ட பூசல்; நம்பிக்கைகளின் மந்தநிலை; இளைஞர்களது சிந்தனையின் பிறழ்வு; சமூகத்தின் கடைநிலை மக்களின் துணிச்சல்; அறத்தின், நம்பிக்கையின் அடித்தளத்தில் ஏற்பட்ட அதிர்வு; சிறுவன், சிறுமிக்கு இடையிலும், அவனது அல்லது அவளது  தாய், தந்தைக்கு இடையிலும் ஏற்பட்ட அவநம்பிக்கைக்கும் பிரிவுக்குமான காரணம்; மேல்தட்டு மக்களும் இதர பெருமைகளும் மதம்சார் ஆளுமைகளும் இகழப்படுவதற்குக் காரணம்; புராதனங்கள் மீதான மரியாதை மறைந்துவிடுதல்; மூதாதையர்கள், பாட்டன்மார்களின் பண்டைய தொன்மங்களின், சம்பிரதாயங்களின் நம்பகத் தன்மை கேள்விக்கு உள்ளாகுதல் ... முதலியவற்றுக்கான காரணமாக அர்த்தப்படுத்தினாலும், இவை அனைத்தும் மோட்சம்-தரும் புரட்சி ஒன்றுக்கான தெளிவான சமிக்ஞைகள் என்பதையும், தெய்வீக உண்மைக்கான அடையாளங்கள் என்பதையும் அவர் நன்றாக அறிந்திருந்தார்.

         மேலும், துடிப்புமிக்க, புரட்சிகர ஆன்மாக்களில் ஒருவரும் சமூக, பூர்வீக மரபுகளின் குறுகிய வார்ப்புகளால் இறுக்கமானவராக, கல்-போன்றவராக ஆகிவிடாதவரும் இயக்கம், படைப்பாற்றல், மாற்றத்துக்கான திறன், பரிணமித்தல், தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் ஆகியவற்றில் பின்தங்கியிராதவருமான ஜுன்துப் ஏதோ நிகழவிருப்பதை உணர்ந்துகொள்கிறார்; துல்லியமாக இதைத்தான் அவரது எழுத்தறிவு அற்ற ஆன்மாவும் விடுதலையடைந்த சிந்தனையும் பாலைவனத்தின் ஏகாந்தத்தில், அவரது உள்ளூர தனிமையில், கண்டடைய முயன்றது.

         இந்த 'செய்தி'க்கு முன்னால் அவர் பாராமுகமாக இருக்கவில்லை. கடமையுணர்வு அவரை தனது தேட்டத்தைத் தொடங்கும்படியும், சுயநலக்கார மேல்தட்டு மக்களால் வடிவமைக்கப்பட்டு தரங்கெட்ட மக்களால் பரப்பப்படும் வதந்திகள், பிரச்சாரங்கள், பொய்கள், அவமதிப்புகள், தொடர் பொய்ப்பித்தல்கள் ஆகியவற்றை தனது நம்பிக்கை மற்றும் மதிப்பீட்டுக்கான அடிப்படையாகக் கொள்ளாமல் தானே கிளம்பிப்போய் விசாரித்தறியும்படியும் அவரைப் பணித்தது. ஏனெனில், ஒரு மனிதன் செய்யும் மதிப்பீடு என்பது அவனது அல்லது அவளது ஆளுமைக்கான தலைசிறந்த குறியீடாக இருக்கிறது. எவர்கள் ஒரு மனிதன், ஒரு கருத்து, ஒரு செயல்பாடு, ஒரு இயக்கம் ஆகியவற்றுக்கு எதிராகவும், இன்னும், ஒவ்வொரு உண்மைக்கு எதிராகவும் மற்றவர்கள் கூறியதை அடிப்படையாகக்கொண்டு தீர்ப்பளிக்கிறார்களோ அவர்கள் மடமையிலும் நியாயமற்ற முறையிலும் ஓர் உண்மையைக் கண்டிப்பதற்கு முன்னால், அவர்களது பூரா சிந்தனைக்கான, தீர்ப்புக்கான மூலாதாரம் என்பது, 'இன்னார் சொல்கிறார் ...' என்கிற ஏதோ ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. தங்கள் காலகட்டத்து அதிகாரங்கள், மூடநம்பிக்கை-உருவாக்கிகளான எஜமானர்கள், வெளிப்படையானதும் மறைவானதுமான அவர்களின் பிரச்சார வசதிகள் ஆகியவற்றின் அறிவுசார் தளைகளுக்குள் தங்களைத் தாங்களே பழித்துக்கொண்டு கிடப்பவர்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மேலும், எதிரிகள் போடும் விசேஷ கட்டளைக்கு இணங்க வதந்திகளையும் அவமதிப்புகளையும் பொய்களையும் பரப்பிவிடும் கையாலாகாத 'வதந்தி-பரப்பிகள்' இவர்கள் என்பதை அதன்மூலம் இவர்கள் வெளிப்படுத்திவிட்டார்கள். நயவஞ்சகர்கள் வடிவமைக்கிறார்கள், வார்த்தைஜாலக்காரர்கள் பரப்பிவிடுகிறார்கள், வெகுமக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்!

         ஆனால், ஜுனாதாவின் மகன் தனது சகோதரர் அனீஸை மக்கா அனுப்பிவைக்கிறார். பொய், புத்திபேதலிப்பு, சூனியம், கவிதை, குஃப்ர் ஆகியவற்றுக்காகக் கண்டனத்துக்கு உள்ளாகிவரும் இந்த மனிதரை, கடவுளுடைய வீட்டின் கெளரவத்தைச் சீர்குலைப்பதற்கும், சமூக ஒற்றுமையை மோதலாகவும் பூசலாகவும் மாற்றுவதற்கும், இன்னும், குடும்பக் கட்டுக்கோப்பை பிளவாகவும் விரோதமாகவும் மாற்றுவதற்கும் வந்திருப்பவர் என்று அவர்கள் கூறும் ஒருவரைப் பக்கத்தில் பார்த்து, அவரது வார்த்தைகளைச் செவிமடுத்து, அவரது செய்தியைக் கிரகித்துக்கொண்டு அவரிடம் (அபூ தர்ரிடம்) திரும்பி வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக.

         அனீஸ் மக்கா வருகிறார். அம்மனிதரை அவர் பார்க்கவில்லை. பெயரற்ற, இருப்பிடமற்ற அந்த அயலானை எவருமே அவருக்கு அடையாளம் காட்டவில்லை. நம்பிக்கை இழக்காமல் நகரம் முழுவதும் தேடுகிறார். வசை, பரிகாசம், வெறுப்பு, காழ்ப்பு ஆகியவற்றைத் தவிர அந்த மனிதரைப் பற்றி வேறெதையும் அவர் கேட்கவில்லை. எல்லா இடங்களிலும், மசூதியில், கடைத்தெருவில், தனிப்பட்ட முறையில், குறிப்பாக, 'மரியாதைக்கு உரிய நபர்கள்', 'பேர்போன ஆளுமைகள்', 'மதத்தின், இவ்வுலகின் பெரும்புள்ளிகள்', கூடவே, 'விசுவாசம்மிகு வணக்கசாலிகள் மற்றும் மதப் பாரபட்சம் கொண்டோர்', 'ஆபிரகாமின் ஐதீகங்கள் மீதும் ஆபிரகாமின் வீட்டின் மீதும் விசுவாசம் கொண்டோர்' எல்லோரும் அவரைப் பற்றிய ஒத்த வார்த்தைகளையும் வதந்திகளையும்தான் மாறிமாறி சொல்லிக்கொண்டிருந்தனர். அது ஒரே கோர்வையாக நிகழும் நிலையை எட்டிவிட்டிருந்தது.

அவர் ஒரு பைத்தியக்காரர்; சூனியக்காரர். அவரது வார்த்தைகளின் வசீகரத்துக்குத் தூதுச் செய்தியின் ஈர்ப்பு விசை காரணம் அல்ல; அது சித்துவேலை; அது யதார்த்தத்தின் அழகு அல்ல, கவிதை; தனது வார்த்தைகளை அவர் ஜிப்ரீலிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை; அவை தனது சொந்த வார்த்தைகளும் அல்ல; அவர் என்ன கூற வேண்டுமென்பதை வெளியூர் அறிஞர் ஒருவர் அவருக்கு அந்தரங்கமாகச் சொல்லிக் கொடுக்கிறார்; கிறிஸ்தவத் துறவி ஒருவரிடமிருந்து, ஓர் ஈரானிய அறிஞரிடமிருந்து, அவற்றைப் பெற்றுக்கொள்கிறார்; ஆபிரகாமின் உம்மத்தில் வந்து தோன்றியிருக்கும் அவர் ஓர் பேரவலம்; மசூதியின் மாண்பு, கடவுளுடைய வீட்டின் புனிதத்துவம், யாத்திரையின் பாரம்பரியம், கடவுளர்களின் வழிபாடு, அற நெறிகளின் உண்மைத்தன்மை, குடும்பங்களின் மரியாதை, இன்னும், நமது மூதாதையரின் எல்லா கெளரவங்கள், விழுமியங்களையும் அவர் காற்றில் பறக்க விடுகிறார்.

தொடர்ச்சி மூன்றாம் அத்தியாயத்தில் ...

No comments:

Post a Comment