Sunday, July 17, 2016

முஸ்லிம் மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல்



முஸ்லிம் மனதைக் காலனித்துவ நீக்கம்செய்தல்

தமிழில்: உவைஸ் அஹ்மது

இன்று 'மூன்றாம் உலகு' என்றழைக்கப்படும் நிலப்பகுதிகளை ஐரோப்பிய-அமெரிக்க சக்திகள் பலாத்காரமாக பெளதிகரீதியில் பிடித்துவைத்து, அவற்றின் வளங்களை நம்பவொண்ணா அளவில் சுரண்டிவந்த ஒரு வரலாற்றுக் காலகட்டமே 'காலனித்துவம்' என்று பெரும்பாலும் தற்போது புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது.

மேற்கத்திய சக்திகளின் இந்த அமைப்பு ரீதியான கொள்ளை ஸ்பெயினிலிருந்து துவங்கியது. அந்தலூஸியாவில் இருந்த இஸ்லாமிய கிலாஃபத்தை அழித்து அதனிடமிருந்து களவாடிய தங்கத்தையே அமெரிக்க கண்டங்கள் நெடுகிலுமான தனது சாகசங்களில் ஸ்பெயின் முதலீடு செய்தது. (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: 'இஸ்லாமிய கிலாஃபத்' என்ற சொல்லாடலைக் காட்டிலும் 'முஸ்லிம் மன்னராட்சி' என்பதே இங்கு பொருந்துகிறது). ஸ்பானிஷ் காலனித்துவம் விரைவிலேயே மற்ற காலனித்துவ சக்திகளின் தோற்றத்திற்கு வழிகோலியது.

இவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எல்லாம், உலகின் பெரும்பகுதி பெளதீக ரீதியில் ஐரோப்பாவினாலும் அமெரிக்காவினாலும் காலனியாதிக்கச் சுரண்டலுக்கு ஆட்பட்டு விட்டது. (அமெரிக்காவும் கூட, ஒரு பிரிட்டிஷ் காலனியாக இருந்து, பிறகு தானுமோரு காலனித்துவ சக்தியாக உருவெடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது).

நேரடியாகவும் எளிமையாகவும் கூறுவதென்றால், கொள்ளையடித்தல் தான் எப்போதும் காலனித்துவத்தின் பிரதான வினையூக்கியாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், காலனித்துவத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் தனிப்பட்டளவில் அதுவே முதன்மைக் காரணமாக இருந்திருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. பேராசையும் இனவெறியும் அதில் மாறாது இடம்பெற்றுள்ளன; அறுதி நோக்கமாக கொள்ளையடித்தல் இருந்தது, என்றாலும், இவையல்லாத பிற காரணிகளும் அதில் முக்கியப் பாத்திரத்தை வகித்துள்ளன.

கிறிஸ்தவ மிஷனரிகளைப் பொறுத்தவரை, அதற்கு முன்பு அணுகவியலாது இருந்த 'மிலேச்சர்களை' அணுகிடும் வழியினை காலனித்துவம் ஏற்படுத்தித் தந்தது. இம்மிலேச்சர்கள் மேற்கத்திய பாணி கிறிஸ்தவத்தின் 'நாகரிகப்படுத்தும்' இலட்சியப் பணிக்கு மிகப் பொருத்தமானோராகக் கருதப்பட்டனர்.

சாகசப் பயண விரும்பிகளைப் பொறுத்தவரை, காலனித்துவ திட்டவிளக்க அறிவிப்பின் முக்கிய அம்சமாக இருந்தது 'சாகசப் பயணம்' ஆகும். (அது இன்று 'இன்பச் சுற்றுலா' - Tourism என்று அறியப்படுகிறது).

உண்மையில், வெவ்வேறு காலப்பிரிவுகளில் வெவ்வேறு காலனியவாதிகளின் செயல்பாடுகளுக்கு வெவ்வேறு செயல்நோக்கங்கள் இருந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, அவை அனைத்தையும் 'காலனித்துவம்' என்ற ரீதியில் மாத்திரம் பேசுவது பிழையான முடிவுகளுக்கு இட்டுச்செல்வதாக அமைந்துவிடக் கூடும். (எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் அவை ஒரேவிதமாக இருக்கவில்லை) காரணம், யதார்த்தத்தில் காலனித்துவத்தைப் பல்வேறு காலஇடச் சூழமைவுகளில் வைத்துப் பரிசீலிக்க முடியும்.

உதாரணமாக ஜப்பானை எடுத்துக் கொண்டால், அது காலனித்துவ ஆட்டத்தில் தாமதமாகவே வந்திணைந்தது. அது மட்டுமின்றி, காலனியத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் அது ஒரு விதத்தில் வித்தியாசமான வழிமுறையைக் கொண்டிருந்தது. (அவ்வழிமுறை கொடூரத்திலொன்றும் குறைந்ததாக இருக்கவில்லை என்பது தனிக்கதை). மற்ற காலனித்துவச் சக்திகளோடு ஜப்பான் மேற்கொண்ட போட்டிதான் இரண்டாம் உலக யுத்தத்தின் (1939-1945) கிழக்காசியக் களமாக மாறவிருந்ததன் முக்கிய அம்சமாக இருந்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற இரு பேரழிவு 'உலக யுத்தங்கள்' ஐரோப்பாவையும் ஜப்பானையும் ஏறத்தாழ முற்றாகத் தரைமட்டமாக்கி காலனித்துவச் சக்திகளை நலிவடையச் செய்தன. (அமெரிக்கா மட்டும் இதற்கு விதிவிலக்கு; உண்மையில் அமெரிக்கா இந்த யுத்தங்களால் வலுவடைந்தது என்றே கூறவேண்டும்; மேலும் நீண்டதொரு காலம் அதனால் தனது காலனித்துவ அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது).

1945-க்குப் பிறகு, 'விடுதலை' இயக்கங்களின் ஓர் அலை எழுச்சிபெற்றது. காலனித்துவ சக்திகள் பெளதீக ரீதியில் அகன்று சென்ற காலமே 'விடுதலை' என்று பொதுவாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. எனினும் சுகாதாரம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், சட்டம் மற்றும் பிற துறைகள் என அனைத்திலும் காலனியவாதிகள் என்னென்ன அமைப்புமுறைகளை ஏற்படுத்தி வைத்திருந்தார்களோ அவற்றையே இவ்விடுதலை இயக்கங்களும் தக்க வைத்துக் கொண்டன. 

முன்னர் காலனியப்பட்டிருந்துவிட்டு இப்போது புதிதாகச் 'சுதந்திரம் பெற்றிருக்கும்' மக்கள், முன்னர் காலனியவாதிகள் எதை நோக்கமாகக் கொண்டிருந்தனரோ அதற்கு வெகுமாற்றமாக எதையும் செய்துவிடக் கூடாது என்பதை அவை இதன் மூலம் உத்தரவாதம் செய்து கொண்டன.

இதனூடாக, 'மூன்றாம் உலகு' தொடர்ந்தும் மேற்குலகுக்கு கீழ்ப்படிவானதாகவே இருக்கும்படி செய்யப்பட்டது, துவக்கத்தில் 'மூனறாம் உலகு' மீது நேரடிக் காலனியத்தின் கீழ் திணிக்கப்பட்ட கொள்கைகளையும் வாழ்முறைகளையும் அப்படியே தொடர்ந்திடச் செய்யும் இத்தகைய சூழலே பொதுவாக 'மனோவியல் காலனித்துவம்' என்றழைக்கப்படுகிறது.

இக்கட்டுரையின் தலைப்பு கூகி வா தியாங்கோ என்ற கென்ய கல்விப்புலச் செயல்பாட்டாளரின் நூற்தலைப்பிலிருந்து ("மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல்") எடுக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்க இலக்கியச் சூழலில் காலனித்துவப் பிரச்சினையை இனம்கண்டு, உள்ளூர் மொழிகளையும் அறிவையும் புத்தாக்கம் செய்வதற்காக உழைத்தவர் இவர், கூகி 1950-கள் முதல் 1970-களின் இறுதி வரையான காலப்பிரிவில் வளர்ந்தெழுந்த பரந்த காலனித்துவநீக்க இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தவர்.

அக்காலப்பிரிவினை தேசிய விடுதலை இயக்கங்களின் உச்சகட்டம் எனலாம், அக்காலப்பிரிவைச் சேர்ந்த பல்வேறு நூல்கள் இன்றும் பொருத்தப்பாடு மிக்கவையாகவே நிலைத்திருக்கின்றன. அல்ஜீரிய மனோவியல் நிபுணரான ஆல்பர்ட் மெம்மி எழுதிய 'காலனியப்படுத்துவோரும் காலனியப்படுவோரும்' என்ற நூல் பின்வருமாறு வாதத்தை முன்வைக்கிறது:

"காலனித்துவம் உண்மையில் காலனியப்படுத்துவோர் - காலனியப்படுவோர் இரு சாராரையும் அழித்துவிடுகிறது. இறுதியில் அதனால் ஒருவருக்கும் பயனிருப்பதில்லை."

ஜலால் ஆலே அஹ்மதின் செவ்வியல் ஆக்கமான 'ஆக்ஸிடென்டோஸிஸ்' ('மேற்கு மோகம்') எனும் நூல் [1], மனோவியல் காலனித்துவத்தின் ஒரு வடிவமென நோக்கத்தக்க விடயம் பற்றி விவரிக்கிறது. 'மூன்றாம் உலக' மக்கள் தமது சொந்த வரலாறு, கலாச்சாரம், மனோபாவம், மரபுகள் ஆகியவற்றைப் பலிகொடுத்து மேற்குலகின் மோகவலையில் தம்மை வீழச்செய்யும் ஒரு நோயினால் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் அல்லது பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் எனுமொரு கருத்தினை அவர் அந்நூலில் ஈரானியச் சூழமைவில் வைத்து விருத்தி செய்திருக்கிறார்.

அக்காலப்பிரிவைச் சேர்ந்த இதையொத்த இன்னபிற பல ஆக்கங்கள் அனைத்தும் 'மனோவியல் காலனித்துவம்' என்றழைக்கத்தக்க விடயம் குறித்து விளக்குபவையாக அமைந்துள்ளன. அந்நூல்கள் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் விளக்கியுரைத்தவற்றுள் பெரும்பாலானவை இன்றும் பெரிதாக மேம்பட்டுவிடவில்லை. சிலவோ முன்பிருந்ததைக் காட்டிலும் மோசமடைந்திருக்கின்றன. அவ்வாக்கங்களுள் சிலவற்றைப் படிப்பதற்கு ஆர்வமிருந்தும் அவற்றை அணுக வழியில்லாத வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி: மல்டிவெர்ஸிடி குழும வலைத்தளத்தில் அவற்றுள் சிலவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காலனித்துவம் என்பது (முஸ்லிம் உலகினை உள்ளடக்கி) 'மூன்றாம் உலகு' என்று இன்று அழைக்கப்படுவதன் நலங்களுக்கு உகந்ததல்ல என்று நம்பும் அனைவருக்கும், 'மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல்' என்பது முக்கியத்துவம் வாய்ந்தவொரு செயற்பாடாக இருக்கிறது.

எனினும், வேறொரு வகையினர் இருக்கின்றனர்; அவர்களுக்குக் காலனித்துவம் குறித்து எவ்வித முறையீடுகளும் இல்லை - பிரிட்டிஷ் - அமெரிக்க வடிவிலான காலனித்துவமாயினும் அல்லது பிற வடிவங்களில் அமைந்த காலனித்துவமாயினும் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, இம்முழு விவாதமும் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

இதுவும் காலனித்துவத்தின் ஒரு சாதனை தான். அதாவது காலனித்துவம் உள்ளூர் மேட்டுக்குடிகளைத் தன்வயமாக்கிக் கொண்டு 'சுதந்திரத்திற்கு' பிறகு, "சுதேசிகளின் நலங்களைப் பேணுதல்" எனும் போர்வையில் அம்மேட்டுக்குடிகள் அதிகாரத்தைக் கைப்பற்றும்படி செய்திருக்கிறது. கடந்த காலத்தைப் போன்றே இன்றும் தமது முன்னாள் காலனிகளின் வளங்களைத் தொடர்ந்து சூறையாடி வரும் காலனியவாதிகளின் நலன்களைப் பாதுகாப்பதைத் தான் இம்மேட்டுக்குடிகள் செய்துவருகின்றனர் என்பதே உண்மை.

இக்கொள்ளையில் உள்ளூர் மேட்டுக்குடிகளும் பலனடைவதால் காலனித்துவ நீக்கம் செய்வதற்கான குறைந்தபட்ச நியாயம் கூட அவர்களுக்குப் புலப்படுவதில்லை. எனினும் ஒருவர் இன்றைய உலகு மீதொரு பார்வை செலுத்துவாரெனில், மற்றொரு காலனித்துவ நீக்கப் பேரலை தோன்றி மேற்குலகுக்கு முன்னால் கடினமான அறைகூவல் விடுத்துக் கொண்டிருப்பதை காண்பார்.

மேற்குலகு "முன்னேற்றம்", "நாகரிகம்" போன்றவற்றை கொண்டு வருவதாக கூறிவந்தது. எனினும் உண்மையில் அது கொண்டு வந்ததென்னவோ, மூன்றாம் உலகு மீது தனது மேலாதிக்கத்தை உத்தரவாதப்படுத்திக் கொள்ளும் அமைப்புமுறையை மட்டும் தான். காலனித்துவம் உள்ளூர்க் கலாச்சாரங்களையும் மருத்துவம், வேளாண்மை, கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய வாழ்தல் மற்றும் அறிதலின் உள்ளூர் வழிமுறைகளையும் அழித்து நாசமாக்கியது.

இன்று மூன்றாம் உலக மக்கள் தமது பூர்வீக அமைப்புகளைப் பதிலீடு செய்திருக்கும் காலனித்துவ அமைப்புமுறைகளைச் சவாலுக்குள்ளாக்கி தமது சொந்த அறிவமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிவகைகளைத் தேடிவருகின்றனர். இது புதியதொரு இயக்கமல்ல; உலகில் இன்று நடைபெற்றுவரும் காலனித்துவ நீக்க இயக்கம், உண்மையில் வெகுமுன்னரே துவங்கியதொரு தோற்றப்பாடு என்பதை நினைவில் இருத்துவது முக்கியம்.

இது பலவிடங்களிலும் 'உள்ளூரை' (Local) நோக்கியவொரு இயக்கமாகவே இருக்கிறது. இந்த உலகமய யுகத்தில் எதுவொன்றும் முற்றாக உள்ளூர் இயல்பினதாக இருக்க முடியாது என்பது உண்மைதான். எனவே, அதுவோர் பரந்த நோக்கைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். உண்மையில், உடலையும் மனதையும் காலனித்துவ நீக்கம் செய்வதைத் துவங்குவதற்கான நிச்சயமானதொரு வழிமுறை யாதெனில், 'தேசிய அரசுகள்' - 'தேசிய விடுதலை' போன்றவற்றின் பொறியில் சிக்காமல் அவற்றுக்கு அப்பால் நின்று சிந்திப்பதாகும்.

காலனியவாதிகளிடம் இருந்து பெளதிக ரீதியில் விடுதலை அடைந்த பிறகு புதிய 'சுதந்திர' அரசுகள் பெரும்பாலும் காலனியவாதிகள் நிறுவிய அதே கோட்டிலேயே பயணிக்கின்றன என்பதே வரலாறு காட்டிநிற்கும் பாடமாகும். இதைத் தான் ஜான் மோஹாக் எனும் பூர்வீகக்குடி அமெரிக்க (செனிகா) மெய்யியலாளர் விளக்கி உரைத்திருக்கிறார்.

அதாவது, குடிமைத்துவம் மூன்று தரங்களில் அமைகின்றது.

முதல் தரத்தினர் 'நல்ல அடிமைகள்'; காலனியவாதிகளால் திணிக்கப்பட்ட சிந்தனைகளையும் செயல்பாட்டு முறைகளையும் கேள்வியின்றி அப்படியே பின்பற்றுபவர்கள்.

அடுத்த தரத்தினர் 'கெட்ட அடிமைகள்'; இத்தகையவர்கள் காலனித்துவப் பிடியிலிருந்து பெளதிக ரீதியில் விடுதலை கோருவார்கள், எனினும், அவர்கள் அதிகாரத்திற்கு வரும்வேளை பெருமளவு காலனியவாதிகள் ஏற்படுத்தித்தந்த முறையிலேயே சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்; காலனியத்தின் கீழ் திணிக்கப்பட்ட அதே அறிவியல், பொருளாதார, சுகாதார, கல்வி அமைப்புமுறைகளையே பயன்படுத்துவார்கள். அநேக தேசிய விடுதலை இயக்கங்களும் இவ்வகைப்பாட்டின் கீழேயே வருகின்றன. அவற்றின் இலக்கு இது தான்: கட்டுப்பாட்டை வென்றெடுத்தல், கொஞ்சம் குறைகூறுதல், எனினும், உண்மையில் பெரிதாக எதிலும் மாற்றம் ஏற்படுத்தாதிருத்தல்.

இறுதியாக, 'அடிமை-அல்லாதோராக' மாறுவதற்கு - அதாவது மேற்கத்தியச் சட்டகத்திற்கு வெளியே, காலனித்துவத்துக்கு வெளியே சிந்திக்கவும் செயல்படவும் - நமக்குள்ள வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியப்பாடுகளை மோஹாக் கண்டுணர்த்துகிறார். இவ்வழிமுறைகள் மேற்குலகுக்கு வேண்டுமானால் விளங்காதவையாக இருக்கக்கூடும்; இதையொரு நேர்மறைப் பண்பாகவே மோஹாக் காண்கிறார்.

முதலிரு சாத்தியப்பாடுகளும் மேற்குலகைச் சுற்றிப் பரிணமிப்பவையாக இருக்கும் அதே சமயம், மூன்றாவதோ தனது சொந்தக் கோளத்திற்கு உள்ளாகப் பரிணமிக்கிறது.

காலனியப்பட்ட மனங்களைத் தொடர்ந்தும் அவ்விதமே வைத்துப் பேணுவதில் மேற்கத்தியக் கல்வி முக்கியமானதொரு காரணியாகத் திகழ்கிறது. எந்தளவுக்கெனில், ஒரு முறைசார் மேற்கத்தியக் கல்வி இல்லாமல் உயிர்வாழ்வதை கற்பனைசெய்வது கூட மக்களுக்கு மிகக் கடினமானதாக, அசாத்தியமானதாக மாறியிருக்கிறது.

இங்கு கேட்கப்பட வேண்டிய அதிமுக்கியக் கேள்வி யாதெனில், "கல்வியின் குறிக்கோள் என்ன?" இக்கேள்விக்கு விடையளிக்க முனைந்தால், "நான் எத்தகையதொரு மனிதனாக இருக்க விரும்புகிறேன்?" என்பது போன்ற இன்னும் பெரிய கேள்விகளுக்கு அது இட்டுச்செல்கிறது. சிலர் அமெரிக்கராகவோ பிரஞ்சுக்காரராகவோ பிரிட்டானியராகவோ இருக்க விரும்புகின்றனர். எனவே, அக்குறிக்கோளுக்கு பொருத்தமானதொரு பள்ளிக்கல்வி வடிவத்தை அவர்கள் தெரிவுசெய்கின்றனர். அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அது நற்பலன் அளிக்கக் கூடுமென்றாலும், மற்றவர்களின் நலன்களுக்கும் அதுவே உகந்ததாக இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை.

அதற்கும் அப்பால், மேற்குலகில் ஒருவர் பெறும் பள்ளிக்கல்வியானது பிறவிடங்களில் உள்ள கல்வியைக் காட்டிலும் ஏதோவொரு வகையில் சிறந்தது என்ற கற்பிதமும், நிச்சயமாக காலனியத்தின் அழுத்தமான மாயையே அன்றி வேறில்லை.

கல்வியின் குறிக்கோள் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது, "மேற்கு தான் சிறந்தது" (West is Best) என்ற காலனிய மந்திரத்திற்கு அப்பால் பார்வையைச் செலுத்துவதற்கு உதவக் கூடும். மேலும், பின்வருவதே உண்மையில் நிகழ்ந்திருக்கிறது என்ற மெய்யுணர்தலுக்கும் அது பெரும்பாலும் இட்டுச்செல்லக் கூடும்.

அதாவது அறிவு, புரிதல் ஆகியவற்றின் அனைத்துப் பிற வடிவங்களையும் காலனித்துவம் திட்டமிட்ட முறையில் பெறுமதியிழக்கச் செய்திருக்கிறது; இதனாலேயே, காலனியப்பட்ட மக்களால் அறிவையும் அகப்பார்வையையும் மேற்குலகில் தேடுவதைத் தவிர வேறு வாய்ப்புகள் ஏதுமிருப்பதாக காணமுடிவதில்லை.

காலனியப்பட்ட மனதுடன் வாழும் சூழலை நிலைபேறுடையதாக ஆக்குவதில் பல்வேறு 'தகவல்தொடர்பு' ஊடகங்களும் முக்கியப் பாத்திரம் வகிக்கின்றன. அவை பொதுவாக இரண்டு காரியங்களைச் செய்கின்றன:
ஒன்று - காலனித்துவத்தின் கீழ் இவ்வுலகை ஆண்ட சிந்தனைகளையும் அசமத்துவங்களையும் நிலைபேறுடையவையாக ஆக்குவது;

இரண்டு - காலனித்துவத்தைப் புதிய வடிவங்களில் அறிமுகப்படுத்துவது. இப்புதிய வடிவங்கள் காலனியத்தின் பூர்வீக வடிவங்களோடு குறைவாகவே நேரடித் தொடர்பு கொண்டவையாக இருந்தாலும், அவற்றுக்குச் சற்றும் சளைக்காத விதத்தில் சேதம் விளைவிப்பவையாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு, ஊடகம் நுகர்வியத்தை அறிமுகப்படுத்துகிறது. அது காலனியத்தின் மற்றுமொரு வடிவமேயன்றி வேறில்லை. எப்படியென்றால், நுகர்வியமானது உலகக் கார்பரேட்டுகளுக்கு நலன்பயக்கும் ஒரு பொருளாதார அமைப்பை அறிமுகம் செய்கின்றது. பெரும்பாலான பெருவர்த்தக நிறுவனங்கள் முன்னாளையக் காலனித்துவ அதிகாரக் கட்டமைப்பின் மீதே நிறுவப்பட்டுள்ளன.
அது மட்டுமின்றி, பல்வேறு வழிகளிலும் அவை இன்றைய காலனித்துவத்தின் முகவர்களாகவும் மாறியிருக்கின்றன. எனவே, ஒருவர் ஊடகத்தையும் காலனித்துவத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஊடகம் எவ்வாறு இன்று நுகர்வியத்தையும் கார்பரேட் அதிகாரத்தையும் ஊக்குவிக்கிறது என்பதையும்; நுகர்வியம் எவ்வாறு பெரும்பாலும் கார்பரேட்டுகளின் ஊடாக முன்னாள் காலனித்துவச் சக்திகளுக்கு நலன்பயக்கிறது என்பதையும்; மேலும், அது எவ்வாறு பிறரையும் - மிகவும் வரையறுக்கப்பட்ட, போலியான முறையில் - இந்நலன்களில் பங்கெடுத்துக்கொள்ளத் தூண்டுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு குறிப்பிட முடியும்.

அனைத்திற்கும் முதலாக: அல்-ஜஸீரா, அல்-அரபிய்யா போன்ற பிராந்திய 'சுதந்திர' செய்தி ஊடகங்கள் தமது மேற்கத்தியச் சரிநேர் இணைகளான CNN, BBC ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க விதத்தில் மாறுபட்டவை என்பது பிழையான கற்பிதமே அன்றி வேறில்லை.
இப்பிராந்திய ஊடகங்கள் அடிப்படையில் 'கெட்ட அடிமைகள்' வகையைச் சேர்ந்தவை. அதாவது, இவை காலனியத்தைக் கொஞ்சமாகக் குறைகூறும் அதேசமயம், அதன் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன.

இந்த ஊடகங்கள் உருச்சிதைக்கப்பட்ட முஸ்லிம் உடல்களின் படிமங்களை மேற்கத்திய ஊடகங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் காண்பிக்கக் கூடும்; மேற்கத்திய ஊடகங்கள் அவற்றின் இருப்பையே கூட ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை என்பது உண்மை தான். எனினும், இறுதியில் இவையும் தொலைக்காட்சியின் ஊடாக உலகைப் பார்க்கின்ற முறையையும்; பேச்சு மற்றும் உரையாடலின் பாணி, வடிவம் என அனைத்திலும் மேற்கத்திய ஊடகத்தை ஏறத்தாழ அச்சுஅசலாக ஒப்பிப் பின்பற்றுவதையுமே நிலைபேறுடையதாக்குகின்றன.

இவை தெரிவுசெய்யப்பட்ட உள்ளடக்கங்கள் சிலவற்றில் மட்டுமே அவ்வப்போது வேறுபடுகின்றன. இது காலனித்துவம் இல்லையா? செய்திகளையும் தகவல்களையும் வேறு வழிகளில் எத்திவைப்பதற்கான சாத்தியப்பாட்டை இது நீக்கிவிடுவதில்லையா? வேறு வடிவங்களில் அமைந்த தகவல்தொடர்புகளை வெகுஜன ஊடகங்கள் இன்று பதிலீடு செய்திருக்கின்றன என்பது உண்மை இல்லையா?

பொழுதுபோக்கு விளம்பரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இவ்வெகுஜன ஊடகங்கள் மக்களின் "மனோவியல் சூழலின்" பிரிக்க முடியாத பகுதியாக அமைந்துள்ளன. அடிப்படையில் மற்றெல்லா முறைகளையும் பலிகொடுத்து ஒற்றை முறையில் சிந்திக்கும் சில சக்திகளாலேயே இம்மனோவியல் சூழல் கட்டுப்படுத்தவும் வடிவமைக்கவும் படுகின்றது. இது தான் காலனித்துவம்.

முஸ்லிம் உலகு அடங்கலான முன்னாள் 'மூன்றாம் உலகை' இன்று ஆட்சிசெய்யும் பெரும்பாலான 'சுதந்திர' அரசுகள் தம்முடைய இளைஞர்களின் மனங்கள் மீது ஊடகங்களால் நிகழ்த்தப்பெறும் காலனிய மயமாக்கத்தில் பங்காளிகளாகவே இருக்கின்றன. தொலைக்காட்சி, அச்சு ஊடகம் போன்றவற்றின் வழியாக மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதைக் கொண்டு மனோவியல் சூழலை நிறைப்பதை அவை அனுமதித்து வருகின்றன.

வடஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, பாகிஸ்தான், மலேசியா மற்றும் இன்னபிற இடங்களில் வாழும் முஸ்லிம் சமூகங்கள் உட்பட, உலகம் நெடுகிலும் ஊக்குவிக்கப்படும் சிற்றின்ப வேட்கை கலாச்சாரத்தை தடுப்பதற்கான அதிகாரம் இவ்வரசுகளுக்கு இருப்பதில்லை.

இன்னும் வருந்தத்தக்கது என்னவென்றால், முஸ்லிம் இளைஞர்கள் இன்று பாடகர்களையும் நடிகர்களையும் பற்றி சகலத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், ஓயாமல் தொடரும் ஃபலஸ்தீனப் போராட்டம் பற்றியோ, அல்லது ஈராக் மீதான காலனித்துவ ஆக்கிரமிப்பு பற்றியோ பெரிதும் அலட்சியம் காட்டுபவர்களாகவோ அல்லது குறைவாக அறிந்து வைத்திருப்போராகவோ தான் இருக்கின்றனர்.

எனினும், இப்பிரச்சினைகளின் தீர்வுகளுக்காக நாம் அரசுகளை நோக்குவதும் கூட பிரச்சினையின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும். காரணம், இன்றைய அரசுகளில் ஏறத்தாழ அனைத்துமே ஒன்று நல்ல அடிமைகளாக, அல்லது கெட்ட அடிமைகளாகவே இருக்கின்றன. அதாவது, காலனிய அமைப்பின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன.

இவ்வாறிருக்க, 'அடிமை-அல்லாதோர்' மீது மட்டுமே நம்பிக்கை எஞ்சியிருக்கிறது. இன்றைக்கு மேற்கு அல்லாத சமூகங்களை ஆக்கிரமித்திருக்கும் காலனித்துவம், நவீனத்துவம், உலகமயமாக்கம் உள்ளிட்ட சகல அமைப்புமுறைகளின் ஆதிக்கத்தையும் தாண்டிச் சிந்திக்கவும் செயல்படவும் திறன்படைத்தது அவர்கள் மாத்திரமே.

எனினும், இராணுவத்தையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் இவ்வரசுகள் ஓரளவு அதிகாரத்தை தம் கரங்களில் வைத்துள்ளது உண்மை தான். எனவே, அவற்றை நம்மால் முற்றாக அலட்சியம் செய்துவிடவும் முடியாது.

எனினும், உள்ளூர் அரசுகள் வரையறுக்கப்பட்ட ஜனநாயகத்தை நோக்கி நகருகின்ற போதும், வெகுஜன அரசியல் பங்கெடுப்பின் புதிய வகைகள் தோற்றம்பெறுகின்ற போதும், அவை தமது பொருளாதார அமைப்புக்கு அர்த்தம் மிகுந்த வகையில் சுதந்திரமாகத் தீர்மானங்கள் எடுக்கமுயலும் வேளைகளிலும் காலனித்துவம் 'பொருளாதார உலகமயம்' என்ற வடிவில் இத்தேசிய அரசுகளுக்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் தவறாமல் ஈடுபட்டு வருகின்றது.

இது காலனித்துவத்தின் ஒரு கொடூர நகைமுரணே அன்றி வேறில்லை.

மனோவியல் காலனித்துவத்தில் மொழிகென்று ஒரு பாத்திரமுண்டு. இதனைக் கையாளுவது சற்று கடினமானதொரு பிரச்சினையாகும். இன்று காலனித்துவத்துடன் பெருமளவில் இணைத்துப் பார்க்கப்படும் மொழியாக இருப்பது ஆங்கிலம். எண்ணற்ற உள்ளூர் மொழிகளைப் பலிகொடுத்து அது இன்று அதிவேகமாக ஓர் 'உலக மொழியாக' மாறிவருகிறது.

எல்லா மொழிகளும் சடப்பொருட்களையும் வாழ்வனுபவங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உருவக அணி, சொல்லாட்சிக் கலை ஆகிய கட்டமைவுகளைப் பயன்படுத்தி யதார்த்தத்தை தமக்கே உரிய விதத்தில் உருமாற்றுகின்றன. இதில் ஆங்கிலமும் மாறுபட்டதில்லை. ஒருவர் முற்றாகக் காலனித்துவ நீக்கம் அடைய வேண்டுமெனில், அவர் ஆங்கிலமல்லாத மற்றொரு மொழியைக் கற்கவோ அல்லது மீள்கற்கவோ வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே இதனை மெய்யுணர்ந்த கூகி வா தியாங்கோ, ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு தனது மக்களின் உள்ளூர் ஆப்பிரிக்க மொழிகளில் எழுதுவது என்று தீர்மானித்தார். கென்யாவில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கும் பள்ளிகளை நிறுவுவதிலும் ஈடுபட்டார்.

அன்றைய கென்ய அரசு தனது முன்னாள் காலனிய எஜமானர்களிடம் இருந்து "சுதந்திரம்" அடைந்துவிட்டிருந்த போதும், கூகியின் இவ்வியக்கத்தை தமது தேசிய மேலாதிக்கத்துக்கு எதிரானவோர் அச்சுறுத்தலாகவே பார்த்தது. எனவே, அவர் சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.

அவரது கதையிலிருந்து இரண்டு விடயங்கள் தெரியவருகின்றன.

ஒன்று: அறுதியில் மொழி, காலனித்துவத்தின் ஒரு முக்கிய அம்சம் என்பதை அங்கீகரித்து அதன் மீது செயலாற்றத் தீர்மானம் கொண்டோர் சிலர் இருக்கவே செய்கின்றனர்.

இரண்டு: தேசிய அரசுகள் உண்மைக் காலனித்துவ நீக்கம் குறித்து அஞ்சுகின்றன -  அவை 'சுதந்திர' அரசுகளாக இருப்பினும் சரியே.

உதாரணமாக, முஸ்லிம்கள் வாழும் நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்களின் எதேச்சதிகார விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு விழுந்தடித்துக் கொண்டு உள்ளூர் மொழிகளையும் கலாச்சாரங்களையும் பலிகொடுக்கும் விதமாகப் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் திருத்தங்களைச் செய்துவருகின்றன; மூடத்தனமான பொழுதுபோக்குகளை ஊக்குவித்து வருகின்றன. இது இன்று மிகவும் கவலைக்குரியதொரு வகையில் தெள்ளத்தெளிவாகி வருகின்றது.

ஒரு விதத்தில் கூறின் நமது பூமிகள் ஆக்கிரமிப்பின் கீழிருப்பது போன்றே நமது மனங்களும் ஆக்கிரமிப்பின் கீழிருக்கின்றன. இது மாறாத விழிப்புடன் கவனித்துவர வேண்டியதொரு பிரச்சினையாகும். இது குறித்து நித்தம் சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டியுள்ளது.

நமது மனங்களைக் காலனித்துவ நீக்கம் செய்வதை நோக்கிய ஒரு முக்கிய காலடி என்னவென்றால், சகல மதங்களும் போதிக்கும் உயர் மெய்மைகளை நோக்கி நமது கவனத்தைக் குவிப்பதாகும்.

ஏனெனில், இவ்வுலக வாழ்க்கையே ஆகப்பெரிய காலனியவாதியாக இருக்கிறது. எளிமையாகக் கூறுவதெனில், ஒரு காலனியப்பட்ட மனது இவ்வாறு சிந்திக்கிறது: உலகை ஆட்டுவித்துக் கொண்டுள்ள பேராசை பிடித்த மேட்டுக்குடிகளின் நலன்களாக எவை இருக்கின்றனவோ அவைதாம் உண்மையில் மற்றெல்லோரது சிறந்த நலன்களாகவும் இருக்கின்றன.

இச்சிந்தனை உலகாசை என்ற கதவின் ஊடாகவே முதலில் நுழைகிறது. இந்நலன்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைத் தடமறியவும், அவற்றின் கவர்ச்சிகளை விட்டுத் தவிர்ந்து கொள்ளவும் உள்ள மிக எளியதொரு வழி என்னவென்றால், நமது மிகச் சாதாரணமான நடவடிக்கைகளிலும் கூட உண்மையில் இதில் "நலனடைவது யார்?" என்ற எளிய கேள்வியைக் கேட்டுப் பார்ப்பதாகும். இக்கேள்வியினை பல வழிகளில் கேட்கவும் பதிலளிக்கவும் முடியும்.

பல மதங்களிலும் பொதுக்கருவாக அமைந்திருக்கும் 'அறுதி மோட்சத்தை' நாம் அடைவதனை நம்முடைய அன்றாடச் செயல்கள் எங்கனம் பாதிக்கின்றன என்பதை நுணுகிப் பார்ப்பது அதிலொரு வழியாகும்.

இதில் நாம் பழங்குடி மக்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். அவர்களும் இப்பிரச்சினையைப் புரிந்து வைத்துள்ளனர். சில பூர்வகுடி அமெரிக்க இனக்குழு மக்கள் மத்தியில், பின்வருமாறு கேட்டுக்கொள்வது முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. (உதாரணமாக, நியூயார்க் மற்றும் ஓன்டாரியோவைச் சேர்ந்த ஹோடெனோசானீ இனக்குழு மக்கள்):

"எனது இன்றைய செயல்கள், இன்றிலிருந்து ஏழு தலைமுறைகளுக்குப் பின்னால் வாழப் போகின்றவர்களை எவ்வாறு பாதிக்கும்?"

மறுஉலகின் மோட்சமோ, இவ்வுலகில் எதிர்காலத் தலைமுறைகளின் நல்வாழ்வோ - குறிக்கோள் எதுவாக இருப்பினும் - நமது காலனியப்பட்ட மனங்களை மீள்ஒருமுகம் செய்தல் என்ற சவாலை நாம் எதிர்கொள்வதற்கு பயன்மிக்க வழிகளாக இக்கேள்விகள் அமைகின்றன.

தமது மனங்களைக் காலனித்துவ நீக்கம் செய்வதற்கு அவசியமான விதத்தில் முஸ்லிம்கள் உள்ளிட்ட 'மூன்றாம் உலக' மக்களால் சிந்திக்க முடியாததற்குள்ள ஒரு காரணம், அவர்கள் தமது சொந்த மரபுகளையே பின்பற்றுவது இல்லை; அவற்றை மதிப்பதும் கூட இல்லை. இது பகுதியளவு காலனித்துவத்தால் விளைந்தவொரு விளைபலனே.

பிற்போக்குவாதிகள், காட்டுமிராண்டிகள், வன்முறையாளர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நம்மை நோக்கிக் கும்பலாக இடையறாது கூறப்பட்டு வருவதன் காரணத்தால் நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டிருக்கிறோம்; நம்மை குறித்து நாமே நிச்சயமற்றவர்களாகி விட்டிருக்கிறோம். நாம் யார் என்பது குறித்து நாமே வெட்கம் கொள்வோராக மாறிப்போயிருக்கிறோம்.

எனினும், இத்தகு குற்றச்சாட்டுகளைக் கூறுபவர்கள் யார்? மேற்கத்திய 'நாகரிகத்தை' முன்மொழிபவர்களைக் காட்டிலும் அதிகப் பிற்போக்குத்தனமான, ஒடுக்குமுறை இயல்பு கொண்ட, வன்முறைக் குணமிக்கவர்கள் எவரும் மனிதகுல வரலாற்றில் இருந்தது கிடையாது.

எனினும், அவர்கள் தான் இன்று நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர். கடந்த நூற்றாண்டில் அவர்கள் நடத்திய உலக யுத்தங்களில் அவர்கள் கொன்றொழித்த மக்கள் தான் எத்தனை பேர்? 100 மில்லியன்? 150 மில்லியன்?

முஸ்லிம்கள் மீது ஏதேனும் குற்றம் சாட்டுவதற்கு முன்னர், அவர்கள் ஒருமுறை இன்னும் கவனமாகத் தம்மைத் தாமே பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும். அதை அவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, நாம் செய்தாக வேண்டும்.

பெரும்பான்மை முஸ்லிம்கள் அறிந்துவைத்துள்ளது போல், இஸ்லாம் என்பது ஓர் வாழ்வியல் நெறியாகும்; அது ஓர் அறவியல் நியம முறையாகவும், ஓர் சட்டத் தொகுப்பாகவும் இருக்கிறது; வெறுமனேயொரு 'மதம்' அல்ல அது. காலனித்துவ நீக்கம் பெற்றதொரு வாழ்வின் பகுதியாக இருக்கவல்ல பல்வேறு அம்சங்களை அது தன்னில் கொண்டிருக்கிறது.

எனினும், - அவப்பேறான வகையில் பல்வேறு முஸ்லிம்களும் செய்துள்ளது போன்று - அதையொரு எளிய தஃவா நோக்கில் அறிவுறுத்தல்களின் தொகுப்பாகவோ அல்லது ஹலால்-ஹராம் என்ற ரீதியில் மட்டுமோ நாம் முன்வைக்க முயலக் கூடாது.

மேற்கூறிய சூழமைவுகளுக்கு வெளியே, காலனித்துவ நீக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பயணிக்கு வழங்குவதற்கென்று இஸ்லாத்திடம் நிறைய இருக்கிறது. எடுத்துக்காட்டாக நாம் உண்ணும் முறை, உடுத்தும் உடைகள், வசிக்கும் வீடுகள் ஆகியவற்றை உற்று நோக்குங்கள். ஹலால்-ஹராம் நோக்கில் பார்த்தால் அவை முற்றிலும் ஏற்கத்தக்கவையாகக் காட்சிதரக் கூடும்.

எனினும், ஒரு நம்பிக்கையாளருக்கென இஸ்லாம் பரிந்துரைத்துள்ள வாழ்க்கை வழிமுறைக்கு இந்த உணவுகளும், உடைகளும், வீடுகளும் எத்துணை நெருக்கமாக அமைந்துள்ளன? ஹலால்-ஹராமுக்கு அப்பால், தனிமனிதர்களும், குடும்பங்களும் இன்றைய உலகில் முஸ்லிம்களாக இருத்தல் என்பதற்குப் பொருளென்ன?

நாம் காணும் எந்தவொரு சூழலுக்கும் ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொண்டு, அதனை நியாயப்படுத்தும் நோக்கில் சில ஹதீஸ்களை இழுத்துக்கொண்டு வருவது தான் அதற்குப் பொருளா? அல்லது 'நவீனத்துவம்', 'நாகரிகம்', 'முன்னேற்றம்' என்பவை குறித்து மெய்யாகவே ஒரு நீண்ட தீவிரப் பார்வையைச் செலுத்தி, நாம் இஸ்லாமிய ஞானத்தின் ஒட்டுமொத்த அமைப்புமுறையின் அடிப்படையில் வைத்து அவற்றைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டுமா?

மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல் என்பது மிகப் பரந்தவொரு பணித்திட்டமாக இருக்கமுடியும். எனவே, பல்வேறு உத்திகளை வளர்த்துருவாக்குவதும்; ஒவ்வொருவரும் தம்மால் இயன்றதைத் தம்மாலான வழிகளில் செய்வதும் அவசியமாகின்றது.

இதில் அரசுகளோ இன்னபிற பெரிய நிறுவனங்களோ உதவ முடியுமெனில் மகத்தானது; அவ்வாறு முடியாதெனில், அவை பாதையை விட்டு விலகிக்கொள்ள வேண்டும். இந்நிலையில், நாம் சாத்தியமானளவு அவற்றை அலட்சியம் செய்துவிட வேண்டும்.

உதாரணத்திற்கு, உணவு-உடை பற்றி மீள்சிந்திப்பது காலனித்துவ நீக்கம் நோக்கிய பாதையில் பயணத்தைத் துவங்குவதற்கு ஒரு முக்கிய வழிமுறையாக அமையும். காரணம், பல்வேறு சிந்தனையாளர்களும் நிரூபித்துக் காட்டியிருப்பது போல் நாம் எதை உண்கிறோமோ, எவ்வாறு உடுத்துகிறோமோ அது நம்முடைய மனோவியல், பெளதிக, ஆன்மிக நலவாழ்வில் தூக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், காலனித்துவ நீக்கம்பெற முயன்ற பிறருடைய அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வதும், நம்முடைய செயற்பாடுகளின் ஊடாக நாம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதும் முக்கியம். இதற்கும் கூட முதன்மையாகத் தஃவாவை நோக்கமாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மாறாக, அகம் நோக்கிக் காண்பதற்கும்; தாமிருக்கும் சூழலைப் புரிந்து கொள்வதற்கும்; வெவ்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மரபுகள் ஆகியவற்றைச் சேர்ந்த சகபயணிகளோடு முஸ்லிம்கள் தம்மை இணைத்துக் கொள்வதற்கும் உதவுவதையே அது நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

மனதை காலனிய நீக்கம் செய்வது ஓரிரவில் வெற்றிபெரும் ஒரு காரியமல்ல. எனினும், பிரச்சினையின் உண்மை இயல்பைப் புரிந்துகொண்டால் உடனடியாகச் சில காரியங்களைச் செய்யமுடியும். எனவே, என்னால் இயன்ற மட்டும் பிரச்சினையை இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட முயலுகிறேன்:

உலகளாவிய மேட்டுக்குடிகளின் சிறு குழுவொன்று பயன்பெறும் வழிகளிலேயே நாம் அனைவரும் அல்லது நம்மில் பெரும்பாலானோரும் தொடர்ந்து சிந்திக்கிறோம், செயல்படுகிறோம்; அவை நாசகரமான வழிகள்; தர்க்கபூர்வமானவையும் கூட அல்ல.

காலனியம் லாபமடைய வேண்டுமென்பதற்காக நாம் காலனியப்பட்டோராகவே நிலைத்திருப்பதை நிர்பந்திக்கும் வகையில் 'முன்னேற்றம்', 'நாகரிகம்', 'உலகமயமாக்கம்' போன்றவற்றிலும் இன்ன பிற கவர்ச்சி மொழிகளின் பெயராலும் நாம் நமது மானுடம், சுற்றுச்சூழல், மரபுகள், மதங்கள் ஆகியவற்றை விட்டு அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

இப்பிரச்சினையின் இயல்பையும் நமக்கும் நமது சமூகங்களுக்கும் இழைக்கப்பட்டுள்ளவற்றின் பாரதூரத்தையும் நாம் புரிந்துகொள்ளாது இருப்பதானது, உலகளாவிய மேலாதிக்க மேட்டுக்குடிகளுக்கே நலனாக அமைகின்றது. எனவே, காலனித்துவம் எவ்வாறு உங்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கிறது என்பதை அடையாளம் காணக் கற்றுக்கொள்வதே முக்கியமான முதற்படியாகும்.

·         குறைவாகத் தொலைக்காட்சி பார்ப்பவராகவும், அதிகமதிகம் கதை கூறுபவராகவும் மாறலாம்;
·         அதிகம் இயற்கை உணவுகளை உண்பவராகவும், இயன்றவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்துக் கொள்பவராகவும் ஆகலாம்;
·         கைத்தறி ஆடைகளை அணிபவராகவும் நவநாகரிகப் பித்துக்களைத் துறந்தவராகவும் ஆகி விடலாம்;
·         கணிணியின் முன்னால் அமர்ந்தவண்ணம் எழுதுவதன் மூலமோ, வகுப்பறையின் முன்னால் நின்றவண்ணம் மக்களைக் காலனித்துவப் பேருறக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தவோ செய்யலாம்;
·         கூட்டுச் செயற்பாடுகளை முன்தெரிவு செய்வோர் சுற்றுச்சூழலுக்காகவோ, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவோ செயலாற்றும் ஏதேனுமொரு இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

செய்ய வேண்டியவை ஏராளம். எவரொருவரும் அனைத்தையும் செய்வதென்பது இயலாத காரியம்.
எனினும், குறைந்த பட்சம் ஏதேனுமொரு செயற்பாட்டை தெரிவுசெய்து, அதனைத் துவக்குவதும் முழுமனதோடு அதற்கு அர்ப்பணித்துக் கொள்வதும் அவசியம்.

காலனியப்பட்ட மனங்களைக் கொண்டோருக்குப் பின்வரும் விடயத்தை உள்வாங்கிக் கொள்வது கடினமாக இருக்கலாம்: எனினும், காலனித்துவ நீக்கத்தை நோக்கிய மற்றொரு முக்கியக் காலடி யாதெனில், உங்கள் குழந்தைகளை இயன்றமட்டும் விரைவாகப் பள்ளிகளிலிருந்து வெளியில் எடுப்பதாகும். "பள்ளிக்குச் செல்வதன்" மூலம் "அறிவைத் தேடுதல்", "கல்வி கற்றல்" போன்ற சகல கற்பனைவாத வீணுரைகளையும் மறந்து விடுங்கள். இவை அறிவைத் தேடுவதற்குள்ள மிக வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மட்டுமே. பலர் ஏற்கனவே இதனை உணர்ந்து விட்டிருக்கின்றனர்.

உதாரணமாக, இன்று "பள்ளி வெளிநடப்பு" எனப்படுமோர் இயக்கம் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. அது பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள மல்டிவெர்ஸிடி குழும வலைதளத்தைப் பார்வையிடுங்கள்; மேலும், இவ்வியக்கத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பான இராஜஸ்தானில் உள்ள ஷிஷந்தர் அமைப்பின் வலைதளத்தையும் பார்வையிடுங்கள்.

"சமூகத்தைப் பள்ளிநீக்கம் செய்தல்" என்ற இச்செயல்முறை, இவான் இல்லிச் இதே பெயரிலமைந்த தனது முதல்தர நூலில் கூறியது போல் நம்முடைய மானுடத் தன்மையை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டோரிடம் இருந்து அதனை மீட்டெடுப்பதில் இன்றியமையாதவோர் அம்சமாகும். நாம் அவர்களது பள்ளிகளிலும் நிறுவனங்களிலும் முகப்புக் கூடங்களில் அலைந்து கொண்டிருக்கையில், அவர்களோ நமது வளங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர்.

சுகாதார மற்றும் நல்வாழ்வு உணர்வை மீளப்பெறுதல் என்பது மனங்களைக் காலனித்துவ நீக்கம் செய்வதில் ஆர்வமுடையவர்கள் முன்புள்ள மற்றுமொரு முக்கியப் பணியாகும். உதாரணமாக, ஹோமியோபதியிலும் மரபு மருத்துவத்தின் குறிப்பிட்ட சில வடிவங்களிலும் இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், ஏன் புற்று நோயையும் கூட குணப்படுத்த முடிவதைக் காணமுடிகின்றது. இவ்வாறிருக்க, இன்று நாம் மருத்துவரிடம் ஓடிச்சென்று மருந்துச் சீட்டு பெற்றுவரும் நாளாந்திர வலிகள்-நோவுகள் பற்றித் தனியே கூறத் தேவையில்லை.

அதே சமயம், உயர் தொழில்நுட்ப மேற்கத்திய மருத்துவமோ இன்று பல்லாயிரம் கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளவோர் உலக வியாபாரமாக மாறியிருக்கிறது. எனவே, இந்த கார்பரேட் நலன்கள் எவ்வொரு மாற்று மருத்துவத்தையும் - அதுலும் குறிப்பாக அது மலிவாகவும் எளிமையாகவும் இருக்கும் பட்சத்தில் அதனை - ஆதரிக்குமெனத் தோன்றவில்லை. தமக்குப் பணம் ஈட்டித் தருபவற்றையே இந்த கார்பரேட் நலன்கள் எப்பொழுதும் ஆதரிக்கும்.

அதுமட்டுமின்றி, ஐரோப்பாவிலும் பாரசீக வளைகுடாவிலும் உள்ள பணம் படைத்தவர்கள் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளையும் பிற சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்வதற்கென்று இன்றுவோர் உலகச் சுற்றுலாத் துறையே இயங்கிவருகிறது. பெரும்பாலான வேளைகளில், அதிகம் செல்வம் படைத்தவர்களே மனது, உடல் இரண்டிலும் அதிக நோயுற்றோராக இருக்கின்றனர் என்பதற்கான ஒரு பயனுள்ள செய்முறைக் காட்சி என்பதைத் தவிர, அந்த வியாபாரம் நம்மோடு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல.

எஞ்சிய நாம் உலகக் கார்பரேட்டுகளின் செல்வாக்குக்கு அப்பாற்பட்ட ஏதேனுமொரு மாற்று மருத்துவம் அல்லது ஹோமியோபதி அல்லது மரபுவழி சிகிச்சை முறையை நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த மரபுகளையும் மருந்துகளையும் துஷ்பிரயோகத்தில் இருந்தும், தனிக்காப்புரிமையில் இருந்தும் பாதுகாப்பதும் கூட இதைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவை பற்றி மூன்றாம் உலக அறிஞர்கள் பலரும் மிகக் கவனமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

உதாரணத்திற்கு இந்தியாவின் வந்தனா ஷிவாவைக் குறிப்பிட முடியும். ஆர்வமுள்ள வாசகர்கள் 'மூன்றாம் உலக வலையமைப்பு', 'பினாங் நுகர்வோர் கூட்டமைப்பு' (மலேசியா) போன்றவற்றில் இருந்து இத்தகு செயற்பாடுகள் பற்றி இன்னுமதிகம் தெரிந்து கொள்ளலாம். இவ்விரண்டு அமைப்புகளும் மனங்களைக் காலனித்துவ நீக்கம் செய்வதற்கான பயன்மிக்க கருவிகளாக அமையத்தக்க பலவிதமான நிகழ்ச்சிகள், பிரசுரங்கள் ஆகியவற்றைத் தயாரித்துள்ளன.

அல்லாஹ், அல்லாஹ்வின் தூதுர், திருக்குர்ஆன், இஸ்லாமிய மரபு ஆகியவற்றின் வழியாக நாம் நமக்கெனச் சுயமாகச் சட்டங்கள், கோட்பாடுகள், அறநெறிகள், முன்னுரிமைகள் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறோம். இவ்வாறிருக்க, ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களுக்கும் தீர்மானங்களுக்கும் நாம் அதீத முக்கியத்துவம் அளிப்பதைக் காணும் ஒருவர் வியப்புக்கே ஆளாவார். நாம் காலனியப்பட்ட மனங்களுடன் வாழ்ந்து வருவதன் பிறிதொரு அறிகுறியே இது.

எனினும், எல்லோருமே முஸ்லிம்களாய் இல்லாதவொரு உலகில் - முஸ்லிம்கள் எல்லோருமே தமது சொந்த ஞானத்தைப் பின்பற்றாதவொரு உலகில் - ஐக்கிய நாடுகள் சபையும் பிற பன்னாட்டு அமைப்புகளும் உலகளாவிய செயற்பாட்டுக்கான சில வாய்ப்பு வளங்களைத் தம் கரங்களில் வைத்திருக்கின்றன என்பதில் உண்மை இல்லாமலில்லை. ஏறத்தாழ எப்போதுமே காலனித்துவ சக்திகளின் நலன்களுக்கு மட்டுமே சேவையாற்றும் பாதுகாப்புச் சபையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுகையில், அவை இன்னுமதிகம் பயன்தருபவையாக மாறக்கூடும்.

ஐக்கிய நாடுகள் சபை பல சமயங்களில் இஸ்லாத்தின் எதிரிகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது; 'மூன்றாம் உலக' நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனினும், 1960-களிலும் 1970-களிலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏறத்தாழ முழுக் கட்டுப்பாடும் 'மூன்றாம் உலகின்' கரங்களில் வந்ததென்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமானதொரு விடயமாகும். வினைத்திறன் மிக்க உலகளாவிய இஸ்லாமிய ஒழுங்கமைப்புகள் இல்லாதவொரு சூழ்நிலையில் முஸ்லிம்கள் சிலர் இவ்வாறு நம்புகின்றனர்.

"அமைப்பு ரீதியான பன்னாட்டு நிறுவனங்கள் - அவற்றுள் ஒன்றுதான் ஐக்கிய நாடுகள் சபை - தமது குறிக்கோள்கள் என எவற்றை முழங்கி வருகின்றனவோ அவற்றுக்கு ஏற்ப என்றாவது ஒருநாள் செயற்படத் துவங்கக் கூடும்; இன்று அவை அமெரிக்கா உள்ளிட்ட காலனிய லும்பன்களால் மிகத் தீவிரமாக முடமாக்கப்பட்டிருந்த போதிலும் சரியே"

முஸ்லிம்கள் உள்ளிட்ட மத நம்பிக்கையாளர்கள் பலரும் "உலக அழிவு நாள் நெருங்கிவிட்டதோ" என்று வியப்புக்காளாகி வருவது பற்றி இறுதியாக சில வார்த்தைகள்:

"உலக அழிவு" பற்றி பல்வேறு தரப்புகளில் இருந்து ஏராளமான கணிப்புகள் இன்று இணையத்தில் வலம்வந்து கொண்டுள்ளன. எனினும் வரலாற்று ரீதியில் பார்க்கின், மக்கள் எப்போதும் தமது பிரச்சினைகளை 'உலக அழிவு நாளுக்கான' தெளிவான அறிகுறிகள் என்றே எண்ணி வந்துள்ளனர் எனத் தெரிகிறது. அந்த நாள் எப்போது வரும்; வாக்களிக்கப்பட்ட மீட்பர் அல்லது மீட்சி எப்போது வருமென்று அல்லாஹ் மட்டுமே அறிவான் என்பது மட்டும் தான் இதில் நம்மால் அறுதியிட்டுக் கூறமுடிகிற ஒரே விடயம்.

ஈராக்கிலும் ஃபலஸ்தீனிலும் 'மேற்கத்திய நாகரிகத்தின்' காட்டுமிராண்டித்தனம் அதன் குற்ற உடந்தையின் ஊடாகவும், நேரடிக் குற்றச் செயல்களின் ஊடாகவும் அம்பலப்பட்டிருக்கிறது; உலகப் பொருளாதாரம் சரிந்து வருகிறது; அமெரிக்கர்கள் தாமொரு இழுவுதரும் போலீஸ் அரசின் கீழ் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணரத் தொடங்கியுள்ளனர் என்பதால் மட்டுமே இவை மற்றெல்லோருக்குமான (அல்லது, உண்மையில் மற்றெவருக்குமான) உலக அழிவாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.

இது நமது காலனியப்பட்ட மனங்களுக்கான தெளிவானதொரு அறிகுறியே அன்றி வேறில்லை. உண்மையைக் கூறினால் இது மயக்கும் மேற்குலக செல்வாக்கு எல்லைகள், குறிப்பாக அதன் எல்லையில்லாப் பிரச்சினைகள் அனைத்துக்கும் வெளியே நம்கெனக் காத்துக் கிடக்கும் மாற்றீடுகளையும் நம்பிக்கையையும் தேடிச்செல்வதற்கான மிகவும் வாய்ப்பானதொரு சந்தர்ப்பமாகவே இருக்கிறது.

நன்றியுரை:

காலனித்துவம் என்றாலே, நம் சிந்தயினுள் இன்று சடுதியாக ஊடுருவிச் செல்லும் விஷயம் யாதெனில், ஏறக்குறைய எழுபது, எண்பது ஆண்டுகளுக்கும் முன்னர் அகன்றுவிட்ட ஆங்கிலேயர்களின் பௌதிகரீதியிலான காலனியாதிக்கம் ஒன்றுதான். அவர்கள், நம் நாட்டை விட்டும் நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டனர் என்றும், இன்று நாமெல்லாம் காலனியவாதிகளின் பிடிகளினின்றும் விடுபட்ட ஓர் சுதந்திர ஜீவிகள் என்றும், இதன் நீட்சியாக வாழ்வின் அனைத்து தளங்களிலுமான அதன் சகல விவகாரங்களில் நம் விருப்புவெறுப்புகளின் அடிப்படையிலே செயல்படுவதற்கும், நமது அபிலாஷைகளை இடையீடுகள் இன்றி நடைமுறைப்படுத்துவதற்கும் நமக்கு சகல உரிமைகளும், முழுமையான சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் நம்மில் பெரும்பாலானோர் எண்ணிகொண்டிருக்கிறோம். இத்தகைய வாதங்கள் அனைத்தும் சடரீதியில் வேண்டுமானால் ஏற்புடையதாகத் தோன்றலாம். யதார்த்தத்தில் அவை, உண்மைக்கு முரணான ஒரு கற்பிதமாகத்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கின்றன.

இன்றைய காலச்சூழலில், சுதந்திர அரசுகள் என்று பரவலாக அறியப்படும் முன்னாள் காலனிகள், பௌதிகரீதியில் சுதந்திரம் பெற்றிருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. என்றாலும், அவ்வரசுகளின் உயர்மட்டத்திலிருக்கும் யதேச்சதிகார ஆட்சியாளர் துவங்கி சமூகப் படிநிலையின் கீழ்த் தட்டிலுள்ள சாமானியன்வரை, அனைத்து மனிதர்களையும், உளவியல்ரீதியாகவும் மனோவியல்ரீதியாகவும் இன்றும் காலனியவாதிகள் கட்டுப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். இதுவே நவ-காலனித்துவம் என்று புத்திஜீவிகளால் பரவலாக வரையறுக்கப்படுகின்றது.

சமகால முஸ்லிம் அறிவுஜீவிகளுள், முன்னோடியாகத் திகழ்ந்த காலம்சென்ற கலாநிதி கலீம் சித்திகி, நவ-காலனித்துவம் தொடர்பிலான தனது கருத்துகளை பின்வருமாறு முன்வைக்கிறார்: "மிகப்பெரும் முஸ்லிம்களின் வாழிடமாய்த் திகழும் தற்கால தேச-அரசுகள், யதார்த்தத்தில் சிறைக்கூடங்களே அன்றி வேறில்லை. அவற்றுள், தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டும், தங்கள் வாழ்வாதாரத்துக்காக உழைத்துக்கொண்டும் இருக்கும் முஸ்லிம்கள், ஆக்கபூர்வமான புதிய எண்ணங்கள், புதிய தலைமைத்துவத்தின் எழுச்சி ஆகியவற்றுக்காகக் காத்திருக்கின்றனர். இந்தச் சிறைக்கூடங்களின் சிற்பிகள், அதாவது, இவற்றைத் துல்லியமாக நிர்மாணித்த நிபுணர்கள், 'சுதந்திரம்' என்ற பெயரிலே தங்கள் ஒட்டுமொத்த மேலாதிக்கத்தின்கீழ் தொழிற்படும் ஒருவித சுயாட்சி அரசாங்கத்தை, அதாவது, கைப்பாவை அரசாங்கத்தை நமக்கு வழங்கியுள்ளனர். முழுமையானதும் நிறைவானதுமான இந்த ஏற்பாட்டை நவ-காலனித்துவம் என்றும் அழைக்கலாம். இந்த சுயாட்சிக்கான பொதுவான ஓர் அம்சம் யாதெனில், செயலற்ற இத்தகு 'சுதந்திர' நாடுகளின் அரசியல் சிந்தனையும் தலைமைப் பீடத்தின் வெற்றிடமும் இதுகாறும் காலனித்துவ எசமானர்களாலேயே நிரப்பப்பட்டுவருகின்றன" [2].

"சுதந்திர அரசுகள்" என்று தங்களுக்குள்ளாக மார்தட்டிக்கொள்ளும் தற்கால கைப்பாவை அரசாங்கங்களின் ஆளுகைக்குட்பட்ட இன்றைய பிரதேசங்களைவிட்டும் தங்கள் சொந்த பிரதேசங்களை நோக்கி விரைந்துகொண்டிருந்த காலனியவாதிகள், பல பத்தாண்டுகளாக தாங்கள் கட்டிக்காத்துவந்ததும், வாழ்வின் அனைத்துத் தளங்களையும் உள்ளடக்கியதுமான விசாலமானதொரு வாழ்க்கைத் திட்டத்தை, பௌதிக காலனியத்தினின்றும் விடுபட்ட கைப்பாவை அரசாங்கங்களின் நிர்வாகப் பின்புலத்தில் விட்டுவிட்டே சென்றனர். இதனூடாக, சுதேசிகளின் மரபுரீதியான கலாச்சாரம், பாரம்பரியம், பழக்கவழக்கம், வழக்காறுகள், மொழித்திறன் முதலிய எண்ணற்ற உள்நாட்டுக் கூறுகளை காலனியவாதிகள் நசிவுக்கு ஆட்படுத்தினர். இந்த அந்நிய வாழ்க்கைத்திட்டத்தை எதிர்ப்பதையிட்டு, அக்காலகட்டத்தில், தனிப்பட்ட ஆளுமைகள் மற்றும் வெகுஜன மக்களின் பல்துறைக் கிளர்ச்சிகள் ஆங்காங்கே பெருமளவில் பிரவாகமெடுத்தன. நம் இந்தியத் திருநாட்டின் சமகால வரலாறே இதற்கான முதன்மைச் சான்று.

நிலைமை இப்படியிருக்க, நடந்தேறிக்கொண்டிருக்கும் இத்தகு நாசவேலைகள் குறித்த குறைந்தபட்ச தன்னுணர்வோடாவது சமகால முஸ்லிம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனரா என்று கேட்டால், 'இல்லை' என்றுதான் கூறவேண்டும். மாறாக, இச்செயல்முறைத்திட்டத்தின் ஒட்டுமொத்த இருப்பையே மறுதலிக்கும் அல்லது கேளிக்கூத்தாக்கும் மனநிலையில்தான் நம்மவர்கள் இன்று சஞ்சரித்துக்கொண்டிருக்கின்றனர்.

காலனியவாதிகளின் இச்செயல்முறைத்திட்டத்தில் மின்னணு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், தொலைத்தொடர்புச் சாதனங்களின் பங்களிப்பானது அளப்பரியது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சி இதற்கு மேலும் உரமூட்டுகின்றன.

இன்று, நாம் உண்ணும் உணவில் துவங்கி உடுத்தும் உடை, கல்வி, கற்கைநெறி, பாடத்திட்டம், பொருளாதார அமைப்புமுறை, சமூக-அரசியல் செயல்பாடுகள், வேலைவாய்புகள் என அனைத்துமே காலனியவாதிகள் விட்டுச்சென்ற ஆதர்சப் படிநிலையின் விதிமுறைப்படியே தொழிற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

நிர்வாகத்துறை

உதாரணமாக, நிர்வாகத்துறையை எடுத்துக்கொள்வோம். கிழக்கிந்திய கம்பெனியின் நடைமுறைகளிலிருந்து பெறப்பட்டதுதான் நம் இந்திய நாட்டு நிர்வாகங்களின் தற்போதைய அமைப்புமுறை. அதன் நிர்வாகம், இந்தியாவின் செல்வத்தைப் பிடுங்கவும் உள்ளூர் மக்களை அடக்கி ஒடுக்கவும் பயன்பட்டது. மக்களை நோக்கிய அதன் நடத்தையில் இதுகாறும் மாற்றம் எற்படவில்லை.

இன்றைய மாவட்ட ஆட்சியர்களின் நிலையிடத்தை அன்றைய கலெக்டர்கள் நிரப்பியிருந்தனர். ஆங்கிலேயர் காலத்து கலெக்டர்கள், வரிவசூலையும் சட்ட ஒழுங்கையும் பராமரித்துவந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், மேற்படி செயல்முறையானது உள்ளபடியே தொடர்கிறது. 'பணமே பிரதானம்' என்ற பூடகக் கொள்கைதான் இந்திய அரசின் நிர்வாக அடித்தளம். ஏனெனில், லாபம் ஒன்றுதான் கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கமாக இருந்தது. கம்பெனி நிர்வாகத்தின் பணம்பிடுங்கும் போக்குக்கு இதுவே காரணம். அதன் நிர்வாகக் கட்டமைப்பில் நிதி மேற்பார்வையானது, வணிகநோக்கத்தின் அடிப்படையில் வேரூன்றியிருந்ததே தவிர ஒழுக்கம், கண்ணியம் போன்ற ஆக்கக்கூறுகளின் அடிப்படையில் வேரூன்றியிருக்கவில்லை [3]. இவ்வாறு, நாட்டின் நிர்வாகப் பின்புலத்தில் காலனியாதிக்க அதிகார வர்க்கத்தின் மரபுகளை உள்ளபடியே தக்கவைத்திருப்பதன் விளைவுகள், சாமானியர்களான நம் தலைமீதுதான் இப்போது நிர்த்தாட்சண்யமின்றி விடிந்துகொண்டிருக்கின்றன.

உணவுப் பழக்கவழக்கம்

அடுத்து, அன்றாட வாழ்வில் நாம் உட்கொள்ளும் உணவுவகைகள், மனித சமூகத்தின்மீது அது ஏற்படுத்தியிருக்கும் அபரிமிதச் செல்வாக்கு, சுதேசிகளின் மரபுரீதியான உணவுப் பழக்கவழக்கங்களை வழக்கொழியச்செய்த அதன் வீச்சு ஆகியவை குறித்து நான் வாசிக்கநேர்ந்த கட்டுரையின் பகுதியொன்றை இங்கே பகிர்ந்துகொள்ள விளைகிறேன்.

மிகச்சமீபமாக, 'தாராளம் தந்த உணவு மாற்றம்' எனும் கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. நிகழ்ந்துவிட்டுள்ள உணவு கலாச்சார மாற்றங்கள்குறித்து கட்டுரை ஆசிரியர் அதிலே குறிப்பிடும்பொழுது, "மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்றாலோ அல்லது சிறியதொரு விருந்து என்றாலோ, உடனடியாக பீட்சா, பர்க்கர், கே.எஃப்.சி, மெக்டொனால்ட் என்று கிளம்பிவிடுகிறது ஒரு பட்டாளம். முந்தைய நாள்களில், இட்லி, தோசை போன்ற உணவுகள் பண்டிகைகளுக்கான சிறப்பு உணவாக இருந்தன. இன்றோ, இந்தியாவின் சிறிய நகரங்களில்கூட சாண்ட்விட்ச் என்பது சர்வசாதாரணமாகக் கிடைக்கிறது. இந்த உணவு கலாசார மாற்றம் என்பது சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இதன் பின்புலத்தில், சர்வதேசப் பொருளாதாரத் தொடர்புகள் இருப்பதுதான் உண்மை. நமது உணவுப் பழக்கவழக்கம் மாறியுள்ளதுடன், நுகர்வின் விகிதமும் அதிகரித்துள்ளது. இந்த உணவு மாற்றத்தில், சிறப்புமிக்க பல்வேறு சிறுதானியங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.... இளையோர்களின் மிகப்பெரும் விருப்ப உணவாக உள்ள நூடுல்ஸ்க்கு இந்தியாவில் சுமார் ரூ.2000 கோடிக்குச் சந்தை வாய்ப்பு உள்ளது" என்கிறார் [4].

மேற்படி வாக்கியங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மீதான காலனியவாதிகளின் தற்காலச் செல்வாக்கை ஓரளவுக்கேனும் தோலுரிக்க முற்படுகிறது. இதனூடாக, மேற்படி (அந்நிய) உணவு வகைகளை உட்கொள்வதைவிட்டும் நாம் அறவே தவிர்ந்திருக்க வேண்டும் போன்ற பொருண்மையற்ற வாதத்தை முன்னிறுத்த நான் முயலவில்லை.

காலனியவாதிகள் விட்டுச்சென்றதும் பன்முகப் பரிமாணங்களை உள்ளடக்கியதுமான விசாலாமான வாழ்க்கைத் திட்டத்தின் ஒரு சிறிய பரிமாணம்தான் இந்த உணவுப் பழக்கவழக்கங்கள். அவை, நம்மவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள அதீத தாக்கம் அல்லது காலனியவாதிகளின் குறிப்பிட்ட சில உணவு வகைகள் மீதான நம்மவர்களின் எல்லையற்ற மையல் ஆகியவைகுறித்த ஒரு சிறிய விழிப்புணர்வுக்காகவே அன்றி இத்தகவலை நான் பகிர்ந்துகொள்ளவில்லை. கட்டுரையின் கருப்பொருளுக்கு இது ஏற்புடையதும்கூட.

உணவு உட்கொள்வதில் - அது ஹலாலான உணவாக இருக்கும்பட்சத்தில் - நமக்கு முழுமையான சுவாதீனம் வழங்கப்பட்டிருக்கிறது. மார்க்கத்தின் வரையறைக்கு உட்பட்டு, உங்களுக்குப் பிடித்தமான எந்த உணவையும் நீங்கள் உட்கொள்ளலாம். எனினும், அத்தகைய உணவுகள் மீதுள்ள அதீத பிரியத்தால் அவற்றுக்கு ‘அடிமையாகும்’ புள்ளியிலிருந்துதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.

இன்றையச் சூழலில், இவ்வுணவுப் பழக்கவழக்கங்கள்மீதும் குறிப்பிட்ட சில உணவு வகைகள்மீதும் ஏற்பட்டுள்ள கட்டுமீறிய போதை; உணவு வேளைகளின்போது குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் தெரிவுசெய்து அதனை ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாகக் கபளீகரம்செய்தல்; குறிப்பிட்ட சில மேல்நாட்டுக் குளிர்பானங்களின்றி உணவு உட்கொள்ள மறுத்தல் போன்ற அடுகடுக்கானச் செயல்பாடுகள், காலனியவாதிகளின் பெருநிறுவனங்களுக்கே அனுகூலத்தைப் பெற்றுத்தருகின்றன.

இவ்வாழ்க்கைப் போக்கு, அறுதியாக உங்களை குணப்படுத்த இயலாத நோய்களின் கரங்களிலும் அகப்படவைக்கிறது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கட்டுரையின் இப்பகுதி பற்றிய விழிப்புணர்வை நம்மால் கூறமுடியாது என்றாலும், மனதைக் காலனித்துவ நீக்கம்செய்ய முற்படும் ஒவ்வொருவரின் சிந்தையிலும் மேற்படி விவரங்கள் குறித்த பிரக்ஞை இழையோடிக்கொண்டிருப்பது உகந்தது.

ஆங்கில மோகமும் கல்வித்துறையும்

அடுத்து, கல்வித்துறையை எடுத்துக்கொள்வோம். உதாரணமாக, குழந்தைப் பிறந்து மூன்று, நான்கு வயதை எட்டியவுடன் கல்விக்கூடத்தில் சேர்க்கிறோம். இத்துவக்கப் புள்ளியிலிருந்தே, அந்தக் குழந்தையின் பிஞ்சு மனத்தில் வெறுப்புக்கான விதைகளை விதைக்கவும் ஆரம்பித்துவிடுகிறோம். அது என்ன வெறுப்பு? உங்கள் உள்ளூர் அல்லது பிராந்திய மொழி மீதான வெறுப்பே அது.

"ஆங்கிலத்தை முறைப்படி கற்றுக்கொண்டால் மட்டுமே வாழ்வில் மிகப்பெரும் பதவியையும் அந்தஸ்தையும் உன்னால் அடையமுடியும்; ஆங்கிலம் ஒன்றுதான் உனது எதிர்காலத்தின் உயிர்நாடி; அதுதான் மக்களுக்கு மத்தியிலே பகாசுர அந்தஸ்தையும், நிரந்தரப் புகழையும் உனக்குத் தேடித்தரும்; உள்ளூர் மொழியைக் கொண்டு ஆகவேண்டிய காரியம் ஒன்றும் இல்லை." என உள்ளூர் மொழிகளுக்கு எதிரான காழ்ப்பின் வார்த்தைகளைக் கொண்டு அந்தப் பிஞ்சு உள்ளத்தை நிரப்பிவிடுகிறோம்.

இது, வெளியுலகம் பற்றிய அக்குழந்தையின் பார்வையை வெகுவாக பாதிப்படையச்செய்கிறது. உள்ளூர் மொழிக் கல்வி மீதான வெறுப்பு; மேட்டுக்குடி மக்களோடு ஏற்படும் சந்திப்பு-சம்பாஷணைகளின்போது, உள்ளூர் மொழியைப் பிரயோகிப்பவர்கள் மீதான வெறுப்பு; உள்ளூர் ஒருங்குதிரள்களிலே ஆங்கில மொழிப் பிரயோகத்திற்குக் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம்; உள்ளூர் மொழிப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் மீதான வெறுப்பு என இந்த வெறுப்பின் வீச்செல்லை விரிந்துகொண்டே செல்கிறது.

ஒரு வாதத்துக்கு, நமது தமிழ் மொழியையே எடுத்துக்கொள்வோம். தமிழகத்தில் தமிழின் நிலையில் கடுமையான போதாமைகள் நிலவுகின்றன என்ற ஒரு பரவலான கருத்து மக்கள் மத்தியில் புழக்கத்திலிருக்கின்றது. தமிழ் மொழியின் இந்தக் கையறுநிலையை தமிழகத்தின் பிரசித்தமான ஒரு எழுத்தாளர் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்: "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளூர் மொழியையே படிக்காமல், ஒருவர் முனைவர் பட்டம் வரை வாங்கக்கூடிய கல்விமுறை இருக்கிறது." [5]. என்றால், இது சிந்திக்கவேண்டிய விஷயமில்லையா?

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலெல்லாம், இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் தமிழ் பயிலுகிறார்கள். கனடாவில் மட்டும் 6000 மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள். இத்தகைய தகவல்கள் நமக்கு உணர்த்திநிற்பது, 'ஆங்கில மோகம்' அல்லது 'மேற்கு மோகம்' என்ற தொற்றுநோய் நம்மத்தியிலே அதிவிரைவாகப் பரவிவருகிறது எனும் பேருண்மையைத்தானே? நவ-காலனியத்தின் இருப்பை உறுதிசெய்யும் சமிக்ஞை இல்லையா இவைகளெல்லாம்?

அவ்வெழுத்தாளர் மேலும் கூறுகையில், "இந்தியாவிலும், இலங்கையிலும் கல்விமுறை மாறிவிட்டது. ஆங்கில மோகம் உச்சத்துக்குப் போயிருக்கிறது. அடுத்த தலைமுறை தொடர்ந்து முனைப்புடன் தமிழ் இலக்கியம் படைக்குமா என்பது சந்தேகம்தான்." என்கிறார் [6].

பரவலாக அறியப்படுகிற தமிழ் செய்தித்தாள் ஒன்றின் பத்தி எழுத்தாளர், 'ஆங்கில மோகம்' தொடர்பில் தனது வாழ்வில், தான் கடந்துவந்த சில நிஜஉலக நிகழ்வுகளை கோவையாக இணைத்து கட்டுரைப் படைத்திருந்தார். அதிலே அவர், உள்ளூர்வாசிகள் மீதான ஆங்கில மோகத்தின் பாதிப்புகள் பற்றிக் குறிப்பிடுகையில்: "சென்னை வந்த புதிதில்.... போகப் போக எங்கு பார்த்தாலும் இடங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடுவதைக் கேட்க கேட்க வெறும் சூழல் பழக்கம் மட்டுமே அல்ல அது; இதில் உள்ளார்ந்த ஒரு உவகையும் அவர்களுக்கு இருக்கிறது என்பது புரிந்தது. இது அடிமைத்தனத்தின் எச்ச ருசி!... இன்றைக்கு நாம் சுமக்கும் நிறைய இழிவுகளுக்கான காரணங்களை வரலாறு, பண்பாடு, கலாசாரம் எனும் சொற்களின் பின்னணியிலே பதுக்கிப் பாதுகாக்கிறோம். இழிவுகளிலிருந்து விடுதலையடைய முதலில் உணர்வுத் தளைகளிலிருந்து விடுதலையடைதல் அவசியமாகிறது." என்கிறார் [7].

நமது நினைவலைகளைப் புரட்டிப் பார்த்தால், எங்கோ ஓர் மூலையில், இதனை ஒத்த ஏதோ ஓரிரு சம்பவங்களை நாமும் அனுபவித்துத்தான் வந்திருக்கிறோம் என்பது புலப்படும். இத்தகு பாதிப்புகள், ஒரு குறிப்பிட்டப் பிராந்தியத்துக்கு மட்டுமே உரித்தானதல்ல. மாறாக, வெவ்வேறு பகுதிகள், பிராந்தியங்கள், மாநிலங்களில்கூட இன்றளவிலும் அவை பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

உலகமய யுகம் கோலோச்சிக்கொண்டிருக்கும் இச்சூழலில், ஆங்கிலத்தின் தேவை என்பது இன்றியமையாததுதான். ஆங்கில மொழிப் புலமை என்பது சமகால உலகமய, விஞ்ஞான, தொழில்நுட்ப யுகத்தில் இயல்பாக ஏற்படக்கூடியதுதான். எனினும் அம்மொழி எங்கே, எவ்வாறு, எதற்காக, எந்நோக்கத்தின் அடிப்படையில் பிரயோகிக்கப்படுகிறது என்பதுதான் நம்முன் இருக்கும் உன்னதக் கேள்வி. ஆங்கிலக் கல்வி பயில்வதன் நோக்கம் என்ன? நீங்கள் காலனியவாதிகள் விட்டுச்சென்ற முன்மாதிரி அமைப்புமுறையின் செல்தடத்திலே பயணப்பட எத்தனிக்கின்றீர்களா அல்லது உங்கள் இலட்சியங்கள், குறிக்கோள்களை நோக்கிய ஓர் உன்னதப் பாதையில் பயணப்பட எத்தனிக்கின்றீர்களா? இதுவும்கூட நவ-காலனித்துவத்தின் ஓர் வடிவம்தான்.

‘மேற்கு’ மோகமும், ‘மத்தியக் கிழக்கு’ மோகமும்

காலனியமயமாக்கப்பட்ட பெற்றோர்களின் மனநிலை பிள்ளைகளுக்கும் சென்றுசேர்கிறது. இவை இத்தோடு நின்றுவிடுவதில்லை. பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பின்னரே நவ-காலனியத்தின் பால்ய வடிவம் பரிணாம வளர்ச்சியடைகிறது. பொதுவாகக் கூறுவதெனில், பெரும்திரள் மக்கள் மத்தியில் ஊடாடி நிற்கும் "மேற்கு மோகம்" போன்று, நம்மவர்கள் மத்தியிலும், அதன் கிளையமைப்புகளுள் ஒன்றான "மத்தியக் கிழக்கு மோகம்" ஆழமான முறையிலே வேரூன்றியிருக்கிறது. பொருளாதார விருத்தியைக் கருத்தில்கொண்டு, சமீப காலமாக இவ்விரண்டு மோகங்களும் "ஆப்பிரிக்க மோகம்"-ஆக பரிணமிக்கத் துவங்கியுள்ளன.

உள்ளூர் மொழி மீதும், அம்மொழிசார் மக்கள் மீதும் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி இப்போது, மத்தியக் கிழக்கின் எண்ணெய்ப் பொருளாதாரத்தை சிறிதளவு ஈட்டிய பின்னர், பொருளாதாரத்தில் பின்தங்கிய, உள்நாட்டில் பணிபுரிகின்ற மக்கள் மீதும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, உள்நாட்டில் பணிபுரிவதைப் பற்றிச் சிந்திப்பதுகூட வெறுப்பாக மாறிவிடும் அவலநிலையை இன்று நம்மால் பரவலாக அவதானிக்க முடிகிறது. இதன்மூலம், மத்தியக் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளில் பணிபுரியும் முஸ்லிம்களில் நூறு விழுக்காடு மக்களின் மனநிலையும் ஒட்டுமொத்தமாக இக்கோணத்திலேயே சிந்திக்கிறது என்ற எதிர்மறைக் கருத்தை உயர்த்திப்பிடிக்க நான் முற்படவில்லை. அப்படிச் செய்வது கள-யதார்த்தத்துக்கு முரணான ஒரு கருதுகோளாகவே அமையக்கூடும். மாறாக, சமூகம் எனும் பாலை வெளியிலே விழுதுவிட்டு விரவிநிற்கும் பெரும்பான்மை வெகுஜன அபிப்பிராயத்தைத்தான் எனது வாதம் இங்கே பிரதிபலிக்கிறது.

ஆக, மேற்படி விஷயங்கள் குறித்துப் பேச ஆரம்பித்தாலே முகம் சுழிக்கும் மக்களிடம்தான் (குறிப்பாக முஸ்லிம்களிடம்) நாம் அன்றாடம் உறவாடிக்கொண்டிருக்கிறோம். இது, காலனியப்பட்ட மனங்களின் சிந்தனை உறைநிலைப் பிரதிபலிப்பே அன்றி வேறென்ன?

மத்தியக் கிழக்கு நாடுகள் அல்லது ஐரோப்பிய நாடுகளை நாம் ஒட்டுமொத்தமாக வெறுக்க வேண்டும் அல்லது அந்நாடுகளுக்குச் செல்வதைவிட்டும் நாம் முழுவதுமாக தவிர்ந்திருக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள். நான் முன்னர் கூறியதுபோல, இவ்விடங்களுக்குச் செல்வதன் பின்னணியில் மறைந்திருக்கும் உங்கள் நோக்கம்தான் என்ன? அதனால் நன்மைகளை ஈட்டப்போவது யார்? உங்கள் இலட்சியங்களுக்கு இவை எவ்வகையில் உறுதுணையாக இருக்க முடியும்? என்பன போன்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

நுகர்வியம்

அடுத்து, நுகர்வியத்தை (Consumerism) எடுத்துக்கொள்வோம். நவ-காலனியத்தின் மற்றுமொரு சிறப்புக்கூறுதான் இந்த நுகர்வியம். விஞ்ஞான, தொழில்நுட்ப யுகம் என்று பரவலாக அறியப்படுகிற இன்றைய காலகட்டத்தில், மனிதனின் பெறுமதி என்பது அவனது அற-விழுமியங்கள், நன்னடத்தை, மெச்சத்தகுந்த பண்புநலன்கள், நீதியை நிலைநிறுத்தப் போராடும் மனப்பாங்கு முதலியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்படுவதில்லை. மாறாக அது, அவன் அணிந்துள்ள ஆடை அணிகலன்களில் துவங்கி அவனது வெளித்தோற்றம், வெற்றுப் படாடோபம், அவன் பயன்படுத்தும் வாகனம், கைபேசி, தொழில்நுட்ப வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் இன்னபிற அதிநவீன சாதனங்கள், பொருளாதாரப் பின்புலம் முதலிய சடவாதக் காரணிகளின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றது.

தொற்றுநோய்க் கிருமிபோல் முஸ்லிம் சமூகத்தினுள் அதிவேகமாகப் பரவிக்கொண்டுவரும் மேற்படி அணுகுமுறையில் நவ-காலனித்துவத்தின் பங்களிப்பானது அளப்பரியது. விளைவாக, காலனியப்பட்ட மனத்திற்குச் சொந்தக்காரரான ஒருவர், எவ்வொரு பொருளை விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் அதன் இடையறாத பயன்பாடு, தரம், நம்பகத்தன்மை, வினைத்திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முற்றிலுமாக அசட்டைசெய்கிறார். மாறாக, சமூகத்தில் அதற்கான பெறுமானம், அதன் வெளிப்புற அலங்காரங்கள், நிறுவனப் பெயர் பொதிந்த அதன் இலச்சினை (Brand Name/Brand logo), ஒப்பீட்டளவிலான அதன் சந்தை மதிப்பீடு, தனது சமூக அந்தஸ்தின் ஏறுமுகத்துக்கு அதன் பயன்பாடானது சாதகமாக அமையுமா அமையாதா போன்ற சிந்தனைகள் முதலியச் சடவாதக் காரணிகளை முன்னிறுத்தியே அப்பொருளை வாங்க முற்படுகிறார்.

நுகர்வியப் பொறியில் சிக்குண்டு கிடக்கும் இவர்களின் தொழிற்பாடுகள், நுகர்வியக் கலாசாரத்தை (Consumerist Culture) ஊக்குவிக்கும் பெருமுதலாளிகள் மற்றும் பகாசுர கார்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்குத்தான் உரமூட்டிக்கொண்டிருக்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சி, ஊடகத்துறையின் ஊடுருவல், சமூக வலைதளங்களின் எழுச்சி முதலான காரணிகள், 'நுகர்விய அடிமை' மனநிலையின் முன்னேற்றத்துக்குக் கூடுதல் அனுகூலமாக அமைந்துவிடுகின்றன. அப்படியென்றால், விரும்பியப் பொருளை தெரிவுசெய்யும் உரிமை எனக்கில்லையா? அதனை நான் விலைக்கு வாங்குவதில் என்ன தவறு? என்று சிலர் கேள்வியெழுப்பலாம்.

பிடித்தமான பொருளை தெரிவுசெய்வதில் அல்ல இங்கே பிரச்சினை. மாறாக, அதனை தெரிவுசெய்வதன் நோக்கம் என்ன? அப்பொருளை நோக்கிய உங்கள் கட்டுக்கடங்காத மையலின் பின்புலம் என்ன? அப்பொருளானது, உங்கள் இலட்சியப் பாதையிலே எவ்வகையில் உங்களுக்குப் பேருதவியாகவும் அனுகூலமாகவும் இருக்க முடியும்? உங்கள் அன்றாட பயன்பாட்டின் வீரியம், பொருளின் நம்பகத்தன்மை, வினைத்திறன் ஆகியக் கூறுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா அல்லது நவ-காலனியத்தைப் பறைசாற்றும் இன்னபிற சடவாத காரணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா? அப்பொருளானது, நவ-காலனியப் பொறியில் சிக்கித்தவிக்கும் உங்கள் மனத்தை அதிலிருந்து வெளிக்கொணர்வதில் உங்களுக்கு உதவிபுரிகிறதா அல்லது மீளவும் உங்களை அது நவ-காலனியப் பொறியை நோக்கியே நகர்த்துகிறதா? போன்ற கேள்விகளுக்குக் கூறப்படும் பதிலில்தான் விஷயத்தின் அடிநாதம் மறைந்திருக்கிறது. மனதைக் காலனித்துவ நீக்கம்செய்ய முற்படும் ஒவ்வொருவரும், மேற்படி கேள்விகளைத் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளார்கள்.

‘மனதைக் காலனித்துவ நீக்கம்செய்தல்’, பற்றுறுதிக்கு ஓர் இன்றியமையாத முன்தேவை

பரஸ்பர உரையாடல்களுக்கு இடையே அவ்வப்போது முகிழ்க்கும் ஆங்கில வாக்கியங்கள்; சரளமான மொழிநடையை பிறர் அறியச்செய்வதையிட்டு வெளிப்படுத்தப்படும் பகட்டுப்பேச்சு என்பவை மட்டுமே கேட்பவரிடத்தில் நமது கண்ணியத்தையும் மரியாதையையும் உயர்த்திவிடாது. மேட்டுக்குடியினர், தனவந்தர்களுடன் நாம் பேணிக்கொள்ளும் நட்பு வட்டாரம் மட்டுமே சமூகத்தில் நமக்குறிய நற்பேற்றைப் பெற்றுத்தராது. மத்தியக் கிழக்குக்கோ அல்லது பிற அயல்நாட்டுக்கோ சென்றுவருவதால் மட்டுமே கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழமுடியும் என்பதல்ல. சமுதாய மக்களுக்கு மத்தியிலே, அத்தகைய அயல்நாட்டுப் பயணங்கள் நம்மை ஓர் கதாநாயகனாகவும் முன்னிறுத்தப் போவதில்லை. ஆனால், இன்று பெரும்திரள் முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள், படித்தவர்கள்கூட இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

இது, தாழ்வு மனப்பான்மை, சுய-வெறுப்பு, நவ-அடிமைத்தனம் முதலியக் கீழறுப்புக் கூறுகளைப் பிரதிபலிக்கும் அடிமை-மனோபாவமே அன்றி வேறென்ன? இந்த மனோபாவத்தின் அறிகுறிகள் உங்களிடம் தென்படும்பட்சத்தில், மனத்தைக் காலனித்துவ நீக்கம்செய்யும் கட்டாயத்துக்கு நீங்கள் ஆளாகியுள்ளீர்கள் என்பதைத் திண்ணமாக அறிந்துகொள்ளுங்கள்.

காலனித்துவ நீக்கத்தின் பெருநீள செயல்முறையிலே பல்வேறு கேள்விகளின் முகிழ்ச்சியானது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது: ஒரு பணியை மேற்கொள்வதாக இருப்பின் அதனை ஏன், எவ்வாறு, எங்கே, எப்படி மேற்கொள்கிறோம்? அதன் விளைபலன் எப்படிப்பட்டதாக இருக்கும்? எத்தகைய பலனை அது நமக்குப் பெற்றுத்தரும்? நம்முடைய இலட்சிய வேட்கைக்கு அது எவ்வகையில் உறுதுணையாக இருக்க முடியும்? அதன் அறுதிப் பயனை அறுவடை செய்யப்போவது யார்? முதலான கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்வதும், தோதான விடைகளைக் கண்டறிய முற்படுவதும் சாலச் சிறந்தது.

புரட்சியாளர் ஒருவரின் புரட்சிகர வார்த்தைகள்

தலைப்பின் கருப்பொருள் தொடர்பிலே, அநீதிக்கெதிரான போராட்டத்தின் உத்வேகமூட்டும் குறியீடாக விளங்கிய நெல்சன் மண்டேலாவின் இரண்டொரு வார்த்தைகளை இவ்விடத்திலே பகிர்ந்துகொள்ள விளைகிறேன். அவர், "நன்றாக ஆங்கிலம் பேசுவது, மேட்டுக்குடி பாணியில் உடைகள் அணிவது, டை அணிந்துகொள்வது ஆகியவையே உன்னை மாமனிதராக மாற்றிவிடாது. நீ எத்துணை மெனக்கெட்டாலும், உன்னால் வெள்ளையனாக மாறமுடியாது. மாறவேண்டிய அவசியமும் இல்லை. பி.ஏ., எம்.ஏ., ஆகியவை காகிதப் பட்டயங்கள் மட்டுமே. அவற்றைப் பெற்றுக்கொள்வதன் மூலம் நீ மாறிவிடமாட்டாய். வேகமாகவும் விவேகமாகவும் மாற்றங்கள் உனக்குள் ஏற்படவேண்டும். உன் சிந்தனைகள் மாறவேண்டும். ஆப்பிரிக்காவை அப்போது நீ புரிந்துகொள்வாய்….. நமக்குள் இருக்கும் சில நச்சு எண்ணங்களை எதிர்க்க வேண்டும். நமக்குக் குற்றவுணர்வு இருக்கக்கூடாது. நாம் ஆங்கிலேயர்களைவிட தாழ்ந்தவர்கள்தான் என்னும் குற்றவுணர்வை அகற்ற வேண்டும். கறுப்பு என்பது ஆப்பிரிக்காவின் நிறம். நம் மண்ணின் நிறம். இதை நாம் பெருமையுடன் அறிவிக்க வேண்டும்; உணரவேண்டும்.... ஆங்கிலேயர்களைக் கடவுளாகப் பார்க்கும் வழக்கத்தை ஒழிக்கவேண்டும். அவ்வாறு செய்தால்தான் நம் போராட்டம் வெற்றிபெறும்." [8] என்பதாகக் கூறுகிறார். ஓரிரு வரிகளில் அவரது வார்த்தைகள் முற்றுபெற்றாலும், ஆழிய அர்த்தங்களை அவை உணர்த்திநிற்கின்றன. சிந்தனையைக் கிளர்ந்தெழுச் செய்யும் நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகளில், மனதைக் காலனித்துவ நீக்கம்செய்ய முற்படும் ஒவ்வொருவருக்கும் அதீத படிப்பினைகள் விரவிக்கிடக்கின்றன.

இஸ்லாமிய எண்ணக்கருக்கள் மீதான நவ-காலனியத்தின் செல்வாக்கு

அடுத்து, இஸ்லாமிய சொல்லாடல்கள்குறித்த முஸ்லிம் சமூகத்தின் புரிதலிலும், அதன் நிஜஉலகப் பிரயோகத்திலும் காலனித்துவம் மற்றும் நவ-காலனித்துவம் ஏற்படுத்திவிட்டிருக்கும் சித்தாந்தரீதியிலான தாக்கம் தொடர்பிலான எனது கருத்துகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். மானுடத்தின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான ஆக்கபூர்வ, நடைமுறைத் தீர்வுகளைத் தாங்கிநிற்கும் இஸ்லாம் என்னும் விசாலமான வாழ்வியல் நெறி பற்றிய முஸ்லிம்களின் புரிதலுக்கும் ஏனைய மதத்தினரின் சடவாதப் புரிதலுக்கும் மத்தியிலே இன்றெல்லாம் எவ்வித வேறுபாடுகளையும் என்னால் கண்டுகொள்ள இயலவில்லை. அனைத்துத் தளங்களையும் உள்ளடக்கும் இஸ்லாத்தின் பன்முகப் பரிமாணங்கள், பெரும்பான்மை முஸ்லிம்களின் சிந்தனைக்கு இன்றளவிலும் எட்டாக்கனியாகவே இருந்துகொண்டிருக்கிறது.

முஸ்லிம்களின் இத்தகு சிந்தனைச் சிதைவுக்கும் அறிவுசார் வீழ்ச்சிக்கும் வழியமைத்துக்கொடுத்ததில் காலனித்துவமும் நவ-காலனித்துவமும் அளப்பரிய பங்களிப்பினை நல்கியிருக்கின்றன. உதாரணமாக, இஸ்லாம் என்பது தீனா அல்லது மதமா? என்ற கேள்வியையே எடுத்துக்கொள்வோம். இஸ்லாத்தை, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அல்லது நேர்வழிநின்ற கலீஃபாக்கள் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் விளங்கிவைத்திருந்தது போன்றுதான் நாமும் இன்று விளங்கிவைத்திருக்கிறோமா என்றால், 'இல்லை' என்பதே இதற்கான கவலைக்குறிய பதில்.

ஆங்கிலத்தில், Religion என்ற சொல்லுக்குரிய சரிநிகர் இணைகளான வார்த்தைகளோ அல்லது தமிழில் 'மதம்' என்ற சொல்லுக்குரிய சரிநிகர் இணைகளான வார்த்தைகளோ திருக்குர்ஆனில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அதன் பல்வேறு இடங்களில், இஸ்லாத்தைச் சுட்டுவதையிட்டு, இறைவன் ‘தீன்’ என்ற பதத்தையே பிரயோகித்திருக்கிறான். தீன் எனும் அரபிச் சொல்லுக்கு, விசாலமான வாழ்க்கை வழிமுறைத் திட்டம் அல்லது பரந்துபட்ட வாழ்வியல் நெறி என்று பொருள்.

ஆக 'தீனுல் இஸ்லாம்' என்பதற்கு மானுடத்தின் சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் இஸ்லாம் வகுத்துத் தந்திருக்கும் வாழ்வியல் நெறி அல்லது வழிகாட்டுதல் என்பதாகப் பொருள்கொள்ளப்படுகிறது. மறுபுறத்தில், 'தீனுல் குஃப்ர்' என்பதற்கு, அன்றாட மனித அலுவல்களில் இறைவனின் அதிகாரப் பிரசன்னத்தை மறுதலிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஓர் வாழ்வியல் நெறி என்பதாகப் பொருள்கொள்ளப்படுகிறது.

ஆக, 'மதம்' அல்லது ‘Religion’ என்ற வார்த்தையே காலனியாதிக்க சக்திகளின் பிரத்தியேகப் புரிதல்கள், சுய வியாக்கியானங்கள், திருகிய வரைவிலக்கணங்கள் ஆகியவற்றைப் பறைசாற்றும் ஓர் புனைவு வார்த்தைதான். இதனை, சமகால வரலாற்றை நுண்ணாய்வுக்கு உட்படுத்தும் நம்மால் தெளிவாக இனம்கண்டுகொள்ள முடிகிறது. 'மதம்' என்பது கிறிஸ்தவத்தின் மதச்சார்பின்மைமயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட ஒரு பதமே அன்றி வேறில்லை. வரலாற்றுக்குள் பிரவேசிப்பது இவ்விடத்தில் தேவையற்றதுதான் என்றாலும், அதன் சுருக்கமான உள்ளீடை இவ்விடத்திலே பிரஸ்தாபிப்பது உகந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன், 'தேவாலயத்தையும் அரசாங்கத்தையும் பரஸ்பரம் தனிமைப்படுத்தியதன் வாயிலாக, கிறிஸ்தவம் என்பது நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவனால் இறக்கியருளப்பட்ட 'தீன்' எனும் விசாலமான வாழ்வியல் நெறியிலிருந்து, வெறுமனே (இயந்திரகதியிலான சடங்கு சம்பிரதாயங்களைப் பறைசாற்றும்) 'மதம்' எனும் குறுகிய வரம்புக்குள் சுருக்கப்பட்டது.

கிறிஸ்தவம்போலவே இஸ்லாத்தையும், வெறுமனே சாங்கியங்கள், சனாதனக் கொள்கைகளைத் தாங்கிநிற்கும் உள்ளீடற்ற வெற்று மரபாகவே முஸ்லிம்கள் விளஙகிக்கொள்ள வேண்டும் என்பதில் காலனியாதிக்க சூத்திரதாரிகள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டனர். தொலைதூர இலக்குகளை அநாயாசமாக எட்டுவதற்கு, இந்தக் கீழறுப்பு முயற்சிகள் அவர்களுக்கோர் இன்றியமையாத முன்தேவையாக இருந்தது. இம்முயற்சிகளில் தோராயமாக அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

இதுபோன்றுதான், ஜிஹாத்', 'ஷிர்க்', 'தக்வா' போன்ற இன்னபிற இஸ்லாமிய எண்ணக்கருக்களைப் பற்றிய முஸ்லிம்களின் புரிதல்கள், இதற்கு அவர்கள் வழங்கியிருக்கும் வரைவிலக்கணங்கள் ஆகியவை முஸ்லிம்கள்மீது காலனித்துவ சக்திகள் கட்டவிழ்த்துவிட்ட போலி சித்தாந்தத் திணிப்பின் உக்கிரத்தைப் பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கின்றன.

உதராணமாக, ‘ஜிஹாத்’ என்ற சொல்லாடலுக்கு 'புனிதப் போர்' என்பதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. இது துல்லியமான அர்த்தமன்று. இந்த அர்த்தத்தை நியாயப்படுத்துவதையிட்டு அவர்கள் முன்வைக்கும் வியாக்கியானமும் துலக்கமானதல்ல. எளிமையாகக் கூறுவதென்றால், ஜிஹாத் என்பதற்கு, ஒரு செயலை நிறைவேற்றுவதையிட்டு மேற்கொள்ளப்படும் பகீரதப் பிரயத்தனம் அல்லது போராட்டம் என்பதாகப் பொருள்கொள்ளலாம் [9]. கொள்கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையிலே தனது அன்றாட அலுவல்களை நேர்மையுடனும் ஆத்மசுத்தியுடனும் முன்னெடுப்பதையிட்டு ஒருவர் மேற்கொள்ளும் இடையறாத முயற்சிகூட ஜிஹாதின் ஓர் வடிவம்தான். யுத்தம் அல்லது சண்டைக்கு திருக்குர்ஆனில் 'ஃகிதால்' என்ற பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. அதற்கும்கூட 'புனிதப் போர்' என்பதாக அர்த்தம் கொள்ளமுடியாது. உண்மை யாதெனில், 'புனிதப் போர்' என்பது, இஸ்லாத்தை சர்வநாசத்துக்கு உட்படுத்துவதையிட்டு, சிலுவைப் போராளிகளால் பரவலாகக் கையாளப்பட்டுவந்த ஓர் சொல்லாடலே அன்றி வேறில்லை.

இப்படி, இஸ்லாமிய எண்ணக்கருக்கள் குறித்த புரட்டு வரைவிலக்கணங்களை முஸ்லிம் சமூகத்தின்மீது வலிந்து திணிப்பதில் தாங்கள் கிஞ்சிற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காலனியாதிக்க வரலாறு நெடுகிலும் அடிக்கொருதரம் காலனியவாதிகள் நிரூபித்துவந்திருக்கின்றனர். இவ்வாறு, இஸ்லாமிய கருத்தாக்கங்களைத் திரிபுபடுத்தும் காலனியவாதிகளின் பிரயாசைகள், அன்றுபோல் இன்றும்கூட வினையூக்கத்துடன் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தங்கள் சொந்த விளக்கங்கள் மற்றும் வியாக்கியானங்களை இஸ்லாமிய எண்ணக்கருக்கள்மீது திணிக்க முற்படும் மேற்குலகின் - மேற்குலக ஊடகங்களின் - வஞ்சகப் படலத்தை முஸ்லிம்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது [10].

செய்யவேண்டியது என்ன?

முஸ்லிம்கள் குர்ஆனிய சொல்லாடல்களின் ஆழிய அர்த்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய முறைப்படி புரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல அவற்றை நடைமுறைப்படுத்தவும் தலைப்பட்டால் தங்கள் விதியை தாங்களே கட்டுப்படுத்தும் ஆற்றலும், ஆளுமைத்திறனும் மிக்கவர்களாக அப்போது அவர்கள் பரிணமிக்கக்கூடும். அந்தப் பாதையில், மனதைக் காலனித்துவ நீக்கம்செய்யும் பெருநீள செயல்முறை நமக்கோர் இன்றியமையாத முன்தேவை!!

நபிகளார் (ஸல்), "ஜாஹிலிய்யத்தில் (மடமைக் காலகட்டத்தில்) சிறந்து விளங்கியவர்கள்தான் - இஸ்லாம் குறித்த துலக்கமான புரிதல் அமையப்பெற்றிருப்பின் - இஸ்லாத்திலும் சிறந்து விளங்குவார்கள்" என்பதாக நவின்றுள்ளார்கள். அத்தகையப் புரிதலுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த காரணத்தினால்தான், நபிகளாரின் (ஸல்) மறைவுக்குப் பின்னர், வெறும் முப்பதே ஆண்டுகளில் (நேர்வழிநின்ற கலீஃபாக்கள் ஆட்சிக்காலத்தின் இறுதிக் காண்டத்தில்) முஸ்லிம்கள் சற்றொப்ப உலகின் மூன்றில் ஒரு பகுதியை ஆட்சிசெய்யும் இறைநெறியின் பிரதிநிதிகளாக, பிற சமூகங்களுக்கு மத்தியில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். எனில், இதுபோன்று பிற மக்களுக்கோர் முன்னுதாரணமாக, சாட்சியாளர்களாக விளங்குவதையிட்டு நாமும் நமது தனிமனித, நிறுவனமயப்பட்ட வாழ்வமைப்பின் பல்துறை விவகாரங்களை இறைவனின் அதிகாரப் பிரசன்னம் பற்றிய பூரண பிரக்ஞையுடன் (தக்வாவுடன்) கையாண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இஸ்லாம் எனும் ஆதி இயற்கை வாழ்வியல் நெறி, இன்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்சிசெய்யும் ஓர் தன்னிகரற்ற சக்தியாக கோலோச்சியிருக்கக்கூடும்.

எனினும், நடப்புநிலையோ துரதிர்ஷ்டவசமாக இன்று தலைகீழாக மாறியிருக்கிறது. அப்படியென்றால், இஸ்லாம் குறித்த நமது புரிதலிலும் அளப்பரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்றுதானே பொருள். மனதைக் காலனித்துவ நீக்கம்செய்யும் செயல்முறையானது, இஸ்லாம் குறித்த நமது புரிதலைச் செப்பனிடுவதில், அதன் செயல்முறை இயக்கவியலுக்குள் நம்மை பிரவேசிக்கச் செய்வதில் அபரிமித பங்களிப்பினை நல்கும் என்று நம்புகிறேன்.

நவ-காலனியத்தின் விலங்கினை உடைக்கப் போராடிய பிறிதொரு புரட்சியாளர்

கருப்பின மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக அல்லது தங்கள் நித்திய அடிமைகளாக நிலைத்திருக்கச்செய்வதன் நிமித்தம், இனவெறிப்பிடித்த வெள்ளையர்கள் கலாசார, மனோவியல் காலனித்துவத்தின் பன்முக உத்திகளை பரவலாகப் பிரயோகித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. இப்படி, கலாசாரரீதியாகவும் மனோவியல்ரீதியாகவும் அடிமைப்பட்டுக் கிடந்தவர்களின் விலங்கினை உடைத்தெரியப் போராடிய அமெரிக்கப் புரட்சியாளர்தான் மால்கம் எக்ஸ் (அல்-ஹாஜ் மாலிக் எல்-ஷபாஸ்).

இவர், நவ-காலனியத்தின் பன்முகப் பரிமாணங்களை அக்காலகட்டத்திலேயே தோலுரித்துக் காட்டியிருக்கிறார். சமூக அநீதி, ஓரவஞ்சனை, ஒடுக்குமுறை முதலியவற்றுக்கு எதிரான இவரது போராட்ட வாழ்வு, நவ-காலனியத்தின் எதிர்திசையில் பயணப்பட எத்தனித்துக்கொண்டிருக்கும் நம்மை மெய்சிலிர்க்கவைக்கிறது. சமூக, கலாசார, அரசியல் மற்றும் கல்விசார் துறைகளில் ஆக்கபூர்வ-தர்க்கரீதியான மாற்றீடுகளை முன்வைத்தல், தன்னம்பிக்கை ஏற்படுத்தவல்ல புத்தாக்கச் செயல்பாடுகள் பக்கம் மக்களை ஈர்த்தல், சுய-சிந்தனைப் பிரயோகம், சுதந்திர முன்னெடுப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை முன்னிறுத்திப் போராடிய மால்கம் எக்ஸின் வரலாற்றில், மனதைக் காலனித்துவ நீக்கம்செய்ய பிரயத்தனப்படும் ஒவ்வொருவருக்கும் அதீத படிப்பினைகளும் முன்னுதாரணங்களும் பொதிந்துகிடக்கின்றன [11].

இவர்போன்று, இன்னும் எண்ணிறந்த புரட்சியாளர்கள் இப்பூவுலகின் வெவ்வேறு பகுதிகளில், தத்தம் கால-இட சூழமைவுகளுக்கு ஏற்றார்போல் காலனியம்/நவ-காலனியத்தின் பன்முகப் பரிமாணங்களை எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். அவர்களின் வீரமிகு வரலாற்றினூடாக நாம் மேற்கொள்ளும் பயணம் ஒன்றுதான், அத்தகைய போராட்ட வாழ்வின் பாடங்களையும் படிப்பினைகளையும் மானசீகரீதியில் உணர்ந்து செயலாற்றிட நமக்குப் பேருதவியாக இருக்கும்.

இறுதியாக...

வாசகர்களின் வரையறுக்கப்பட்ட கால சட்டகத்தைக் கருத்தில்கொண்டு, எனது நெடிய கட்டுரையை இத்துடன் நிறைவுசெய்கிறேன்.

நிலைபேறுடையதான அறுதி இலக்கைச் சென்றடைவதற்கும், கண்ணியம், சுதந்திரம், விடுதலையுணர்வு ஆகியவற்றைப் பறைசாற்றும் நமது போராட்ட வாழ்வுக்கும், கட்டுரையின் கருப்பொருள் குறித்த தெளிந்த அறிவும் அதற்குத் தோதான களச் செயல்பாடுகளும் இன்றியமையாத இரு அம்சங்கள்!

"..........வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து இறைவன்மீது பற்றுறுதி கொள்கிறாரோ அவர் அறுந்துவிடாத கயிற்றை கெட்டியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டார்......."   

(அல் குர்’ஆன் 2:257)

இறைவன் நன்கறிந்தவன்!

-    சம்மில்


குறிப்புகள்:

1.     ஆக்ஸிடென்டோஸிஸ்’ (‘மேற்கு மோகம்’) - மேற்கிலிருந்து பரவும் தொற்றுநோய் - ஜலால் ஆலே அஹ்மது.

2.    “Stages of Islamic Revoulition” – Dr. Kalim Siddiqui (The Other Press, Kuala Lumpur).

3.    ஊதிய உயர்வும் செயல்திறனும்!" - புலப்ரே பாலகிருஷ்ணன். ('தி இந்து' ஆகஸ்ட் 22, 2016).

4.    "'தாராளம்' தந்த உணவு மாற்றும்" - வணிக வீதி ('தி இந்து' ஆகஸ்ட் 1, 2016).

5.    "அடுத்த தலைமுறை தமிழ் இலக்கியம் படைக்குமா?" - தமிழ் எழுத்தாளர் ஆ.முத்துலிங்கம் அவர்களோடு 'தி இந்து' செய்தித்தாளின் பத்தி எழுத்தாளர் அரவிந்தன் அவர்களுடைய மின்னஞ்சல்வழி நேர்காணல்: ('தி இந்து' ஜூலை 24, 2016).

6.    மேலது.

7.    "மேற்கை வெட்டுதல்" - சமஸ் ('தி இந்து' ஆகஸ்ட் 5, 2016).

8.    "நெல்சன் மண்டேலா" - மருதன் (கிழக்குப் பதிப்பகம்).

9.    ஜிஹாதின் பன்முகப் பரிமாணம் பற்றிய குறைந்தபட்ச அறிமுகத்துக்கு கலாநிதி தாரிக் ரமழானின் "ஜிஹாத்: அர்த்தமும், புரிதலும்" மற்றும் "ஜிஹாதின் இரு வடிவங்கள்: போராட்டம் மற்றும் சீர்திருத்தம்" எனும் இருவேறு கட்டுரைகளை இவ்வலைதளத்தில் பதிவிட்டுள்ளேன். ஆர்வமுடையோர் அவற்றைப் படித்துப் பார்க்கலாம். ஜிஹாத் பற்றிய மேலதிகப் புரிதலுக்கு, மெளலானா மெளதூதி (ரஹ்) அவர்கள் எழுதிய "ஜிஹாத்: ஓர் இஸ்லாமியப் பார்வை" என்ற புத்தகத்தை வாசிக்கலாம்.

10.   முஸ்லிம் சமூகங்கள் மீதான பின்காலனித்துவ எதிர்மறை தாக்கம் குறித்த மேலதிகப் புரிதலுக்கு பார்க்க: கலாநிதி ஸஃபர் பங்காஷின் ஆங்கிலக் கட்டுரை: “Reviving Islamic vocabulary for socio-political discourse”. "ICIT மின் நூலகம்” வலைதளத்தில் இக்கட்டுரை வாசிக்கக் கிடைக்கிறது.

11.      “The Autobiography of Malcolm-X – as told to Alex Haley” (available as PDF File in Google)
“மால்கம்-X” - மு. குலாம் முஹம்மது.


No comments:

Post a Comment