Tuesday, April 23, 2019

மீண்டும் அபூ தர் ... IV

மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்

அத்தியாயம் 4

மூன்று முட்டாள் சிலைகள், உயர்வு மனப்பான்மை என்னும் ஷைத்தானிய வேட்கையை தங்கள் ‘சிற்பி-வழிபாட்டாளர்க’ளுக்கு உத்தரவாதப்படுத்தியிருந்தன. இதுபோன்ற ஒன்றை அப்பொழுதுதான் முதல் முதலாகப் பார்க்கும் அபூ தர், வியப்பிலும் கோபத்திலும், தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறார், ‘பல தெய்வக் கொள்கையின் குறியீடான இந்த முன்னூற்றுச் சொச்சம் சிலைகள் ஓரிறைக் கொள்கையின் குறியீடான ஆபிரகாமின் வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கின்றன?’

ஓர் வந்தேரியான அவர், தனிமையில், கொந்தளிப்போடும் தீர்மானத்தோடும் அவசரம்அவசரமாக ஸஃபாவிலிருந்து இறங்குகிறார். குகையைவிட்டு வெளியில் வந்து, ஹிராவிலிருந்து இறங்கி, இறை வெளிப்பாட்டின் முதல் சுடரின் தாக்கத்தால் அன்றைய இரவு கொந்தளிப்போடு எழுந்துவந்த முஹம்மதைப் பார்ப்பதுபோல இருக்கிறது இவரைப் பார்ப்பதற்கு; அல்லது, நிலநடுக்கமானது மலை ஒன்றிலிருந்து அரைத்து வெளிதள்ளும், மக்காவின் ஆழமான பள்ளத்தாக்கின் மீதும் பல தெய்வக் கொள்கை, நயவஞ்சகத்தனம், பாசாங்கு, இழிவு, உறக்கம் ஆகியவற்றின் மீதும் வந்து விழும் ஒரு கல்லைப்போலத் தெரிகிறார் இவர்.

இஸ்லாம் என்பது இன்னமும் மறைந்துதான் இருந்தது அர்கமின் வீட்டில். இஸ்லாத்தின் முழு உலகமும் இந்த வீடுதான். மேலும், அபூ தர்ரின் வருகையோடு உம்மத்தின் நபர்கள் நான்காக ஆகியிருந்தனர். மறைந்து வாழ்தல் – தஃகிய்யா - எனும் நிபந்தனைதான் போராட்டத்தின் இயக்க விசை. கிஃபாருக்குத் திரும்பிச் செல்வதற்காக, எந்தத் தயக்கமுமின்றி, மக்காவிலிருந்து வெளியேறிவிடும்படியும் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருக்கும்படியும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், இந்த ‘வனாந்தரத்தின் குழந்தை’யின் எலும்பும்தோலுமான நெஞ்சம் அத்தகைய தீப்பிழம்பு ஒன்றைத் தன்னுள் மறைத்துவைக்கும் செயலில் மிகவும் பலவீனமாக இருந்தது. தனது விசுவாசத்தின் கோயிலுக்கான ஒரு ஸ்தூபியாகத் திகழ்ந்த உயரமான, ஒல்லியான உடலுடையவராக, உரக்கச் சத்தமிடும் தொண்டையுடையவராக அன்றி வேறெதுவாகவும் இல்லாத அபூ தர்ருக்கு, கிளர்ச்சியைப் பறைசாற்றிய உருவத்தோடும் எரியும் இதயத்தோடும் அகண்ட பாலைவனத்துக்குக் கீழ்ப்படிந்தவராய், சட்டென்று உறைந்துபோய் அபூ தர்ராக மாறியிருந்த அவருக்கு பாசாங்கு செய்வதோ மறைந்து வாழ்வதோ இயலாத காரியம்; தெரிந்ததெல்லாம் கிளர்ச்சி ஒன்றுதான். இப்படிப்பட்ட ஒரு சூழலில் செயலாற்றுவதற்கான திறன் வேண்டும், அவரோ திறனற்றவராக இருந்தார். “இறைவன் எந்த ஒரு ஆன்மாவின் மீதும் அதன் திறனை மீறிப் பொறுப்புச் சாட்டுவது இல்லை” (2:286).

கஅபாவுக்கு முன்னால், பயங்கரமான சிலைகளை நேருக்கு நேர் பார்த்தவராக, குறைஷி நிர்வாகச் சபை இருந்த தார் அல்-நதூஹுக்கு அருகாமையில் நின்றுகொண்டு ஓரிறைக் கொள்கையின் முழக்கத்தை அவர் கூச்சல்போட்டு வெளிப்படுத்துகிறார்; முஹம்மதின் இலட்சியப் பாதையில் தனது விசுவாசத்தை அவர் பிரகடனம் செய்கிறார்; ‘மனிதர்களால் செதுக்கப்பட்டிருக்கும் பேச்சுமூச்சற்ற கற்கள்.’ என்று அந்தச் சிலைகளை அவர் அழைக்கிறார்.

இஸ்லாம் வெளிப்படுத்திய முதல் முழக்கம் இதுதான்; பல தெய்வக் கொள்கைக்கு எதிராக முதல் முறையாக ஒரு முஸ்லிம் கிளர்ச்சி செய்கிறார். பல தெய்வக் கொள்கையின் பதில் தெளிவாக இருந்தது, மரணம்! மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையப்போகும் ஒரு மரணம். முழக்கமிடும் இந்த முதல் குரல்வளைத் துண்டிக்கப்பட வேண்டும். சிறிதும் தயங்காமல் அவர் மீது பாய்ந்த அவர்கள் அவரது தலை, முகம், மார்பு, பக்கவாட்டுப் பகுதி ஆகியவற்றில் ஆக்ரோஷத்துடன் குத்தினர். அவரது “குஃப்ருக்குச் சமமான” முழக்கங்கள் துண்டிக்கப்படும்வரை குத்துகள் தொடர்ந்தன.

அப்பாஸ் வந்தார். நபிகளாரின் சிறிய தந்தையும் குறைஷி உயர்தட்டு மக்கள் மற்றும் பல தெய்வக் கொள்கையாளர்களான முதலாளிகளின் வகுப்பைச் சேர்ந்தவருமான அவர் அவர்களை பயமுறுத்தும்படி பேசினார், “இந்த ஆள் கிஃபாரைச் சேர்ந்தவர். நீங்கள் இவரைக் கொன்றால், உங்கள் கேரவான்களுக்கு எதிராக கிஃபாரின் வாள்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்ளும்!”

தங்கள் மதத்துக்கும் வாழ்வுக்கும் இடையே அவர்கள் முடிவெடுக்க வேண்டும், கடவுளா சரக்குகளா? அன்பைச் சொரியும் கிப்லாவா பணம் பெருகச் செய்யும் கேரவானா, எது வேண்டும்?

அவர்கள் தயக்கமில்லாமல் பின்வாங்கினர். அபூ தர், ஒரு சிலைபோல, இரத்தத்தால் மாசுபடுத்தப்பட்டு நொடிந்துபோனவராய், வட்டமான ஒரு கும்பலுக்கு நடுவே நின்றிருந்தார். இந்தக் கும்பல், சிரமப்பட்டு எழ முயன்ற, தங்களிடம் சிறைபிடிக்கப்பட்டிருந்த அந்த ஒற்றை மனிதரை அச்சத்துடன் பார்க்கிறது. வட்டத்தின் விட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவர் எழுகிறார். தனது இரு கால்களின் பிடிமானத்தைக் கொண்டு தன்னை வலுப்படுத்திக்கொள்கிறார். கும்பலின் அடர்த்தி மேலும் அதிகரிக்கிறது; ஏதோ தங்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடைக்கலம் தேடுவதுபோல் இருந்தது அது. இங்குதான் வற்புறுத்தல் விசுவாசத்தை அஞ்சுகிறது. அவர் ஒரே முகம்; அவர்களோ முகமற்றவர்கள், ஆளுமையற்றவர்கள். அவர் ஒண்டி ஆள்; அவர்களோ அடையாளமற்றவர்கள். எக்கச்சக்கமான மந்தைகளை எதிர்த்து நிற்பதோ ஒரே ஒரு மனிதர்; ஒரு தனி ஆள். அர்த்தம், முக்கியத்துவம், குறிக்கோள்கள், சுய நிர்ணய உரிமை ஆகியவற்றையும் விசுவாசி ஒருவருக்கு வீரமரணம் கொடையளிக்கும் அற்புதமான, அதிசயம்-போன்ற, தோல்வியற்ற ஓர் வல்லமையையும் விசுவாசத்தால் ஈட்டிய ஒரு தனி ஆள்.

அவர் அவசரமாகப் புறப்பட்டார். ஜம் ஜம் கிணற்றுக்குத் தன்னை இட்டுச்சென்றார். தனது காயங்களை எல்லாம் கழுவினார். தனது இரத்தத்தைச் சுத்தப்படுத்தினார். அடுத்த நாள் மீண்டும் அவர் சம்பவ இடத்துக்கு வருகிறார்; மறுபடியும் மரணத்தின் விளிம்புவரைச் செல்கிறார். அப்பாஸ் வந்து அவரை அறிமுகப்படுத்துகிறார், ‘இவர் கிஃபார் கோத்திரத்தைச் சேர்ந்தவர் ...”. மீண்டும் அடுத்த நாள் அதேபோல். அறுதியாக நபிகளாரே இதில் தலையிட வேண்டி வருகிறது. இம்முறை அபூ தர்ரின் உயிரைக் காப்பாற்றுவது என்று இல்லாமல், கட்டளை ஒன்றின் வாயிலாக, திணறடிப்பும் அபாயமும் சூழ்ந்திருக்கும் இந்த நகரத்திலிருந்து ஓய்வற்ற இந்தக் கலகக்காரரை அகற்றி (இஸ்லாத்தை நோக்கி) கிஃபார் கோத்திரத்துக்கு  அழைப்பு விடுக்கும் பணியில் ஈடுபடுத்துகிறார். அபூ தர் தனது குடும்பத்தையும், சிறுகச்சிறுக, தனது முழுக் கோத்திரத்தையும் இஸ்லாத்தில் பிணைத்துவிடுகிறார். மக்காவில் போராட்ட வாழ்வின் சிரமங்களை முஸ்லிம்கள் அனுபவித்துவந்த நேரத்திலும், அவர்கள் இடம்பெயர்ந்து சென்ற நேரத்திலும், மேலும் மதீனாவில் தனிநபர்மயம் எனும் நிலையிலிருந்து சமூக அமைப்பு ஒன்றை நிறுவும் நிலைக்கு அவர்கள் உயர்ந்த நேரத்திலும், அதன் விளைவாக யுத்தங்கள் மூள ஆரம்பித்த நேரத்திலும் அவர் கிஃபாருடனேயே இருந்தார்.

இந்தத் தருணத்தில்தான் அபூ தர் சம்பவ இடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்கிறார். மதீனாவுக்குச் செல்கிறார். அங்கே, அவருக்கென்று உறைவிடமோ வேலையோ இல்லாத காரணத்தால், அந்தக் காலத்தில் மக்களின் வீடாக இருந்த நபிப் பள்ளிவாசலையே தனது வீடாகவும் அவர் ஆக்கி ஸஃப்ஃபா (திண்ணை) தோழர்களுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். வாழ்வைச் சித்தாந்தத்துக்காக அர்ப்பணிக்கிறார். அமைதி, சிந்தனை, கல்வித் தேட்டம், வழிபாடு ஆகிய தருணங்களிலும், யுத்த தருணத்திலும், யுத்தங்களிலும் இந்த இயக்கத்துக்காக அவர் சேவையாற்றுகிறார்.

நபிகளாரின் தலைமைத்துவத்தின் கீழ் இஸ்லாம், அபூ தர்ரின் எல்லா மானுடத் தேவைகள், சமூக வேட்கைகளையும் பூர்த்திசெய்கிறது; ஒரு புறம் கடவுள், சமத்துவம், மதம், உணவுத் தன்னிறைவு, அன்பு, ஆற்றல் ஆகியவற்றுக்கும், மறுபுறம் இறுமாப்பு, யதேச்சதிகாரக் கொடுங்கோன்மை, ஏற்றத்தாழ்வு, குஃப்ர், பட்டினி, பலவீனத்தையும் இழிநிலையையும் வேண்டிநிற்கும் அவற்றின் மதம் ஆகியவற்றுக்கும் இடையில் ஓரிரைக் கொள்கையை அடித்தளமாகக் கொண்ட இஸ்லாம் போராட்டத்துக்கான கதவைத் திறந்துவிட்டது. சூறையாடும் ஒடுக்குமுறையாளர்களின் மாயக் கதைகளுக்கெல்லாம் இஸ்லாம் முதல் முறையாக ஓர் முடிவு கட்டியது. இவர்கள்தாம், ‘இவ்வுலக வாழ்க்கை வேண்டுமா மறுமை வேண்டுமா ...’ போன்ற கோஷங்கள் மீது மக்களுக்கு விசுவாசத்தை ஏற்படுத்தியிருந்தனர். இதனால், ‘மறுமை’ மக்களுக்கானதாகவும் ‘இவ்வுலகம்’ தங்களுக்கானதாகவும் இருக்கும். இவ்வழியில் அவர்கள் வறுமைக்கு ஓர் தெய்வீகப் புனிதத்துவத்தைக் கற்பித்திருந்தனர்.

இந்த மனிதத் தன்மையற்ற பார்வையில், “வறுமை என்பது குஃப்ர்” என்று சொன்ன ஓர் உண்மைப் புரட்சியை இஸ்லாம் சாத்தியப்படுத்தியது. “வாழ்வாதாரம் இல்லாதவர்கள் பிழைத்திருக்க மாட்டார்கள்.”, “தெய்வீக அருள், (சமூகத் தேவைக்கான) அபரிமிதமான செல்வம், சுபிட்சமான நிலை, நற்குணம் எல்லாம் உலகாயத வாழ்க்கையின் ஓர் அங்கமாகும், மேலும் ‘உணவு’ என்பது கடவுளை வழிபடுவதற்குத் தேவையான ஓர் உள்கட்டமைப்பு.” “வறுமை, இழிநிலை, பலவீனத்துடன் இணைந்து மதம், ஆன்மிகம், இறையச்சம் எல்லாம் ஒரே சமூகத்தில் கலந்திருப்பதா?” அது ஒரு பொய்! இதன் காரணத்தால்தான் அபூ தர்ரின் இறைத்தூதர் ஓர் ஆயுதம் தரித்த இறைத்தூதராக இருந்தார்: அவரது ஓரிறைக் கொள்கை ஓர் தற்சாய்வான, ஆன்மிகம் சார்ந்த, தனிப்பட்ட தத்துவம் கிடையாது. அது இனங்களின் ஒற்றுமை, வகுப்புகளின் ஒற்றுமை, அனைத்து மனிதருக்கும் அவரவர் பங்குக்கும் உரிமைக்கும் ஏற்றார்போல் கிடைக்கும் சம வாய்ப்பு ஆகியவற்றுக்கான இணைபிரியாத உறுதுணையாக இருந்தது. அதாவது, ஓரிறைக் கொள்கையின் உறுதிமிக்க அனைத்துக்கும் அப்பாற்பட்ட அமைப்பு என்பது வெறுமனே வார்த்தைகளினூடாகச் செயல் வடிவம் பெற்றுவிடாது; தூதுச் செய்திக்குப் போர்வாள் பக்கபலமாக இருத்தல் அவசியம்.

இதற்காகத்தான் அபூ தர் தனது தனிப்பட்ட லெளகீக வாழ்வைத் துறக்கிறார். ஏனெனில், பிறரது வறுமைக்காகப் போராடுகிற ஒரு நபர் தனது வறுமையை ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும், மேலும் தனது விடுதலையை உத்தரவாதப்படுத்தியிருக்கும் ஒரு நபரால் மட்டுமே தனது சமூகத்துக்கான விடுதலையைப் பெற்றுத்தரவும் முடியும். கிறிஸ்தவத்தையோ புத்தரையோ ஒத்திருக்கும் ஒரு சூஃபி கட்டுப்பாடாக அல்லாத, இஸ்லாமியக் கட்டுப்பாடான ‘புரட்சிகரமான விசுவாசத்துக்கு’ அழைப்பு விடுப்பவர் அவர். இதனூடாக உலகாயத நலன்களும் பொருளாதாரச் சமத்துவமும் மக்கள் எல்லோருக்கும் கிடைக்கப்பெறும்.

அதனால்தான் இந்தப் புரட்சிகர மதம், ‘இம்மை மறுமை இரண்டையும் சார்ந்த’ இந்த மதம், பலவீனத்தையோ துறவறத்தையோ வயிற்றிலடிப்பதையோ இயற்கையிடமிருந்து அந்நியப்படுவதையோ இயற்கை குறித்து மனிதர்கள் கொண்டிருக்கும்‘இறுதி-நாள்-மயக்க’த்தையோ ஆதரிக்காத இந்த மதம், ‘சுபாவத்தில் புனிதம்மிக்கவர்களாக’, ‘பொருள்முதல்வாத உலகில் இறைவனின் பிரதிநிதியாக’ மனிதர்களை ஆக்கும் ஒரு மதமாக இருக்கிறது! அபூ தர்ரின் தலைவர், அவரது இறைத்தூதர், ஏனைய எல்லோருக்கும் முன்பிருந்தே கடவுளின்/மக்களின் வீடான மசூதியில் வசித்துவருகிறார்; அது முஹம்மது, அலீ, ஸஃப்ஃபா தோழர்களான சல்மான்கள், அபூ தர்கள் போன்றோரின் வீடு.

அபூ தர்ரேகூட மசூதியின் மூலையில் இருந்த ஓர் கூரை வேய்ந்த திண்ணையின் (ஸஃப்ஃபா) கீழ்தான் காணக்கிடைத்தார், தனது வெற்றியின் உச்சத்திலும்; புனித நபிக்கு மிகவும் நெருக்கமான தோழர்களுள் ஒருவராக அவர் ஆகிவிட்டிருந்தார். ஏதேனும் குழாமில் அவர் இல்லையென்றால் நபிகளார் அவரைப் பற்றி விசாரிப்பார்; ஏதேனும் குழாமில் அவர் இருந்தாரெனில் பேச்சுகளுக்கிடையிலும் அவரைத் திரும்பிப் பார்ப்பார். தபூக் போரில், நபிகளாரின் தலைமைத்துவத்தின் கீழ், வீரர்கள் சுட்டெரிக்கும் வடக்குப் பாலைவனத்தைக் கடந்து (கிழக்கு) ரோமாபுரியின் எல்லைகளைச் சிரமத்தினூடாகச் சென்றடைய வேண்டியிருந்த சூழலில், அபூ தர் அவர்களை விட்டும் தூரப்பட்டிருந்தார். அவரது நோஞ்சான் ஒட்டகம் நின்றுவிட்டது. பொழியும் நெருப்பு மழையில் அதை விடுவித்த அவர் தனியாக நடையைக்கட்டினார்! வழியில் சிறிதளவு தண்ணீரைக் கண்டார்; இதுபோன்ற பாலைவனம் ஒன்றில், சந்தேகத்துக்கு இடமின்றி, தாகத்தால் தவித்துக்கொண்டிருக்கும் தனது ‘நண்பரிடம்’ கொடுப்பதற்காக அதை எடுத்துச் சென்றார். மூர்க்கமான பாலைவனத்தின் ஆழத்திலிருந்து  முன்னோக்கி நகர்ந்துகொண்டிருந்த தெளிவற்ற புள்ளி ஒன்றை நபிகளாரும் முஜாஹிதுகளும் பார்க்கின்றனர். அது ஒரு மனிதர்தான் என்பதைச் சிறுகச்சிறுக அவர்கள் உணர்ந்துகொள்கின்றனர்! யார் அது? இந்தக் கனல் வீசும் பாலைவனத்தில் நடந்துவருவது, அதுவும் தனியாக? நபிகளார், பேராவல் ததும்பும் ஓர் உற்சாகத்தில், உரக்கக் கத்தினார், “அவர் அபூ தர்ராகத்தான் இருக்க வேண்டும்!”.  ஒரு மணி நேரம் கழிந்தது. அவர் அபூ தர்ரேதான். முஜாஹிதுகளை எட்டிய அவர் தாகத்தாலும் தளர்ச்சியாலும் மண்ணில் சாய்ந்தார்.

“தண்ணீர் உன்னிடம் இருக்கிறது, ஆனாலும் தாகத்துடன் இருக்கிறாய் அபூ தர்?” என்று நபிகளார் கேட்க அபூ தர் பின்வருமாறு பதில் அளிக்கிறார், “நான் நினைத்ததெல்லாம், இப்படி ஒரு பாலைவனத்தில், தழல் கக்கும் இந்தச் சூரியனின் கீழ், உங்களுக்கு ...”   

“அபூ தர் மீது இறைவன் அருள் பாலிப்பானாக! அவரது வாழ்வியக்கம் தனிமையில், மரணம் தனிமையில், அவர் உயிர்ப்பிக்கப்படுவதும் தனிமையில்!” நபிகளார் கூறினார்.  

தொடர்ச்சி ஐந்தாம் பாகத்தில் ...


Monday, April 8, 2019

மீண்டும் அபூ தர் ... III

மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்

அத்தியாயம் 3


திடுதிப்பென்று, ஒரே நேரத்தில், மக்காவின் குறுகிய சந்து ஒன்றில், முடிச்சு ஒன்றுக்குள் தங்களைப் பிணைத்துக்கொண்ட பெரும் கூட்டம் ஒன்றை ஒரு மூலையில் அனீஸ் பார்க்கிறார். தன்னை அங்கே இட்டுச்செல்கிறார்: விழிப்படைந்த முகத்துடன், தனது ஆன்மாவின் ஆழங்களை உயிர்த்தெழச் செய்த ஒரு பார்வையுடன், திறந்த, நிதானமான ஒரு புருவம், நடுத்தர-அளவு உடம்பு,மிரட்டுகிற ஒரு உருவம், அதே நேரத்தில், ஊக்கமளிக்கும் அன்பு மற்றும் நேசத்துடன், தீர்மானமும் உறுதியும் நிறைந்த ஆண்மைமிகு, கரகரப்பான ஒரு குரல் என்றாலும் அதில் தித்திப்புடன், நிறைந்த கனிவுடன், பயமும் நம்பிக்கையும் நிரம்பியிருந்த, கவிதையைவிட அழகான ஓர் இனிமையான தொனியில், ஆழ்ந்த வார்த்தைகளுடன் ஒரு நபர் மட்டும் அங்கு தனியாக நிற்கிறார். அனீஸ் அவர் முன்னால் நின்றார். அவரது வார்த்தைகளைக் கேட்பதா, அவரது வசீகரத்திடம் தனது உள்ளத்தை ஒப்படைப்பதா, அல்லது வெறுமனே அவரது உடல், பார்வை, நடத்தை, வார்த்தைகள் ஆகியவற்றின் முழு இனிமையையும் அழகையும் அவதானித்துக்கொண்டிருப்பதா? என்ன செய்வதென்று தெரியவில்லை அவருக்கு.

அமளியை உண்டுபண்ணியவாறு கோஷ்டி ஒன்று வந்தபோதும், இந்த மனிதரைப் பார்த்ததால் ஏற்பட்ட பிரமிப்பு நிலையிலேயே  அப்பொழுதும் அவர் இருந்தார். அவரது வார்த்தைகளைக் கேட்காமலும் அவருக்குப் பதில் அளிக்காமலும் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்த ஏச்சுகளையும் முன்-ஜோடிக்கப்பட்ட அவதூறுகளையும் அவரது தலைக்கும் முகத்துக்கும் நேராக அவர்கள் வீசி எறிந்தனர். ‘தூதுச் செய்தியின் வெளிச்ச’த்திலும், ‘இலட்சியத்தை நோக்கிய புரட்சி’யிலும் தங்களால் இழக்க முடியும் என்ற அளவுக்கு எதுவுமே இல்லாத, ஆட்சி அமைப்பாலும் சமூக-அரசியல் நடப்பின் முயற்சிகளாலும் பழிக்கப்பட்டிருந்த நடுநிலையாளர்கள், சிறுமைப்பட்ட மக்களின் அறியாமை அவர்களைக் கொடுங்கோன்மையின் கைகளில் பொம்மைகளாகவும் தங்கள் சொந்தச் சிறைகளுக்கான காவலர்களாகவும் ஆக்கிவிட்டது. பக்கசார்புடையோர் தங்கள் வாய்களில் வைத்திருந்ததை பிரசித்தமான வெகுஜனமோ, அருவருப்பூட்டும் ஆர்வம் மற்றும் கிளர்ச்சியினூடாக, கத்தி வெளியிடுகின்றனர்.

'தனிமைப்பட்டிருந்த தூதரை' கோபத்தில் அல்லது கடுப்பில் அவர்கள் விசையோடு தள்ளினர் அல்லது வசையுடனும் கேலியுடனும் அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அவரைத் தன்னந்தனியே விட்டனர். வான்வெளியின் அமைதியைப் போன்ற ஒரு அமைதியும், மலை ஒன்றின் பொறுமையையும் சமநிலையையும் போன்ற பொறுமையின் சமநிலையும் அவரிடம் இருந்ததால், (அவர் ஹிரா குகையிலிருந்து கீழே வந்திருந்ததுடன் வானிலிருந்து செய்தி ஒன்றையும் கொண்டுவந்திருந்ததால்)ஆத்திரத்தின் தாக்குதல்களும் அறியாமையின் இருள்களும் அவர் முகத்தில் எந்தத் தாக்கத்தையும் உண்டுபண்ணவில்லை, கோபத்துக்கான எந்தக் கீறல்களையும் ஏற்படுத்தவில்லை. அது கனிவாலும் நேசத்தாலும் ததும்பியிருந்தது. அவசர அவசரமாக அவர் மற்றொரு இடத்துக்குச் செல்வார், மற்றொரு கூட்டத்துக்கு மத்தியில் அவரது வார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும். மறுபடியும், கேட்கப்படாதது, புரியப்படாதது, வசைமொழிகள், குற்றச்சாட்டுகள், மறுபடியும், அவதூறுகள், பரிகாசம். பிறகும் அவர், மீண்டும், வேறு இடங்களுக்குச் செல்வார்; மீண்டும் அவரது வார்த்தைகளின் ஆரம்பம்!

         நகரின் அனைத்துப் பகுதிகளிலும் அவர் சுற்றித் திரிந்தார். தெருக்கள், கடைகண்ணிகளில், ஒன்றுகூடலுக்கான இடத்தில், மசூதிகளில்; மக்களைத் தேடி அவர் எல்லா இடங்களுக்கும் செல்வார். மக்களின் வழிப்பாதையில் அவர் நின்றுகொள்வார். அவர்களின் விடைகள் குறித்தெல்லாம் யோசிக்காமல், அவர்களை அச்சமூட்டுவார், அவர்களுக்கு நற்செய்தி வழங்குவார், அபாயம் ஒன்றைக் குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பார், மோட்சத்துக்கான வழியைக் காண்பிப்பார். ஏனெனில், அவரிடம் ஒரு செய்தி இருந்தது, அவருக்கு ஒரு இலட்சியம் இருந்தது. 'கண்ணியவான்களின் நண்ப'னும் 'தலைக்கனம் பிடித்தவர்களின் எதிரி'யுமான இறைவன் அவரிடம் உரக்கப் பேசினான், "(போர்வை) போர்த்திக்கொண்டிருப்பவரே! கிளம்பிச்சென்று எச்சரிக்கைச் செய்வீராக." (74:1-2); அறியாமையின் அமைதியிலும் கொடுங்கோன்மையின் பாதுகாப்பிலும் துயில்கொள்ளும் மக்களை, இன்னும், ஓநாய்க்கு இடையர்களாக இருப்பதனூடே வறுமையையும் இழிவையும் மேய்த்துக்கொண்டிருக்கும் மக்களை எச்சரிக்கைச் செய்வீராக! நியமிக்கப்பட்டிருக்கும் இடையரே!

         கராரித் பாலைவனத்தின் ஆட்டை அவிழ்த்துவிடு, ஏனெனில் கடவுளின் நகரத்தில் மனிதர்கள் ஆடுபோல் இருக்கும்படி ஆக்கப்பட்டிருக்கிறார்கள்! ஆபிரஹாமின் கடவுள் தனது வானவர்கள் எல்லோரையும் ஆதமின் காலடிக்கு முன்னால் சிரம் பணிய வைத்தான். ஆனால் இப்பொழுது, ஆபிரஹாமின் வீட்டில், ஆதமுடைய பிள்ளைகள் பூமி மீது - கோத்திரங்களுக்கும் வகுப்புகளுக்கும் பாதுகாவலர்களாக இருக்கும் - இப்லீஸின் மிச்சசொச்சங்களின் காலடிக்கு முன்னால் சிரம் பணியும்படி ஆக்கப்படுகிறார்கள்.

         அவர் வாயை அடைப்பதற்காகவும் அவரைப் பேச விடாமல் ஆக்குவதற்காகவும் கேடுகெட்ட உயர்குடிகள் தங்கள் அகெளரவமான, முட்டாள் கூட்டாளிகளைக் கொண்டு முடுக்கிவிட்ட சூறாவளி அவமதிப்புகள், சதித் திட்டம், அச்சுறுத்தல், பரிகாசம் எல்லாவற்றுக்கிடையிலும் அவர் பேசினார், "ஒடுக்கப்படுவோரின் இறைவன்" சொன்னான், "கூறுங்கள்!" கூறுங்கள், "இப்பூவுலகில் உள்ள  ஒடுக்கப்படுவோர் மீது நாம் அருள் பாலிக்க நாடினோம், இன்னும், அவர்களைத் தலைவர்களாகவும் வாரிசுகளாகவும் ஆக்கிவைக்க நாடினோம்." (28:3). அனீஸ் அம்மனிதரைப் பார்க்கிறார், அவரைப் பின்தொடர்கிறார், அவரது வார்த்தைகளைக் கேட்கிறார், அவரது வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கிறார், பிரமிப்பான, அற்புதமான ஒரு வாழ்க்கை. ஆனால், அம்மனிதருடைய வாழ்வின் அற்புதங்களும் அவரது பிரசன்னத்தின் ஈர்ப்பும் நடத்தையின் வசீகரமும் அழகும் அவரது வார்த்தைகளுக்குச் செவிமடுப்பவராக இருப்பதற்குப் பதிலாக அம்மனிதரின் பார்வையாளராக அவர் ஆகிவிடும் அளவுக்கு அவரை அதீதமாகக் கவர்ந்திழுக்கவும் வசப்படுத்தவும் செய்தது.

         அத்துணை அல்லல்களிலும் அவ்வளவு அன்பு; அத்துணை உறுதிப்பாட்டிலும் அவ்வளவு அழகு; அத்துணைச் சஞ்சலத்திலும் அவ்வளவு அமைதி; அத்துணைச் சிக்கல்களிலும் அவ்வளவு எளிமை; அத்துணைக் கலகத்திலும் அவ்வளவு சேவையாற்றல்; அத்துணை வேதனையிலும் அவ்வளவு உற்சாகம்; அத்துணைப் பலவீனத்திலும் அவ்வளவு பலம்; அத்துணை அவமானத்திலும் அவ்வளவு துணிச்சல்; அத்துணைப் பரபரப்பிலும் அவ்வளவு சாந்தம்; அத்துணைப் பொறுமையின்மையிலும் அவ்வளவு பொறுமை; அத்துணைப் பயபக்தியிலும் அவ்வளவு பணிவு; அத்துணை மதியூகம், தர்க்கம், கண்காணிப்பு, தீவிரத்தன்மை, இதிகாசங்கள், சிந்தனை ஆகியவற்றுக்கு மத்தியிலும் அவ்வளவு அன்பு, ஊக்குவிப்பு, உணர்ச்சிகள், நளினம், இதயபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் வெளிப்பட்ட பாக்கள்; இறுதியாக ‘பரலோகத்துக்கு அத்துணை நெருக்கமானவ’ராக இருந்தும் ‘இவ்வுலகுக்கு அவ்வளவு உரியவ’ராகக் காட்சியளித்தமை. கடவுளுக்கான எல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றியபோதும் உச்சந்தலை முதல்  உள்ளங்கால் வரை கடவுள் பற்றிய உறுதியான தன்னுணர்வில் ஆழ்ந்திருந்தபோதும் மக்களைப் பற்றி யோசிப்பதும் அவர்களுடனேயே முழுமையாக நேரத்தைச் செலவழிப்பதுமாக இருந்தமை எல்லாவற்றையும் நான் என்னவென்று சொல்வது? அத்துணை அதிரடித்தனம், அவ்வளவு உறுதிப்பாடு மேலும் அத்துணை ... எல்லாம் தனிமையில்.

 அப்படி ஒரு கூக்குரலையும் முழக்கத்தையும் அனீஸை நோக்கி எழுப்பிய அந்த மனிதரால், அவரது அற்புதத்தால் அவரது வார்த்தைகளை அனீஸ் கேட்கவில்லை, அல்லது கேட்டார், ஆனால் அவரது வார்த்தைகளின் விந்தையும் அவரது தொனியின் அற்புதமும் அவருக்குள் அப்படியொரு வியப்பை உண்டுபண்ணிற்று. ஏனெனில், கடவுளுடைய வார்த்தைகளை அவர் முதன்முதலாகக் கேட்கிறார் என்பதால் அவற்றின் அர்த்தங்களை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஜுன்துபின் சகோதரரரும் இளம் நாடோடியுமான அனீஸுக்கு அம்மனிதர் சொல்வது புரியவில்லை. என்றாலும் அவரது உறுதியான இயல்பூக்கங்கள் வாயிலாக, ‘நாடோடி ஆன்மா’ ஒன்றின் தெளிவான, இயற்கையான சுபாவத்தின் வாயிலாக அந்த மனிதர் ஓர் ‘நிகழ்வு’ என்பதை அவர் கண்டுகொள்கிறார். ‘தர்க்கம்’ என்பது ‘மனசாட்சி’யை இன்னமும் பதிலீடு செய்திருக்காத ‘ஓர் இயற்கையான மனிதர்’ அவர். இந்த வார்த்தைகளெல்லாம் மாற்று உலகிலிருந்து வந்தவை அல்ல என்பதை தனது புலன்களின் வாயிலாக அவர் உணர்ந்துகொள்கிறார். உண்மையை அவர் புரிந்துகொள்ளவில்லை; அந்த வார்த்தைகளின் அர்த்தங்களை அவர் கிரகித்துக்கொள்ளவில்லை; அந்த மனிதரைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை; என்றாலும், இறை வெளிப்பாட்டின் நறுமணத்தை அவர் முகர்ந்தார், உண்மையின் சுவையை அவர் சுவைத்தார், விசுவாசத்தின் விவரிக்க இயலாத கதகதப்பை அவர் அனுபவித்தார்.

பாலைவனத்தில் ஓய்வற்றவராக இருந்த அபூ தர்ரோ மக்காவுக்குச் செல்லும் பாதையில் பதற்றத்துடன் காத்திருக்கிறார். “அனீஸ், என் சகோதரா, அவரைப் பார்த்தாயா நீ? அவரது வார்த்தைகளைக் கேட்டாயா? அவர் என்ன சொல்கிறார்?”. “அவர் ஒரு தனி மனிதர். அவரது கோத்திரம் அவரை அலைக்கழித்து, அவர் மீது பகைமை பாராட்டியது. ஆனபோதும் பொறுமையாகவும் அன்பாகவும் அவர் நடந்துகொள்கிறார். ஒரு கூட்டம் அவரை நிராகரிக்கும்போதெல்லாம் அல்லது அவரை வசைபாடி, பரிகசித்துத் தீர்க்கும்போதெல்லாம் அவர் பிறிதொரு கோஷ்டியிடம் செல்வார், மறுபடியும் அவர் பேசத் தொடங்குவார்.”

“சொல் அனீஸ்! அவர் என்ன சொன்னார் என்பதைச் சொல். எதை நோக்கி அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்?”. “கடவுள் மீது சத்தியமாக, அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, எனினும் அவரது வார்த்தைகள் தேன்போல எனது ஆன்மாவின்வழி பாய்ந்தோடிச் சென்றன!”

 தகவலைத் தேடிக் கண்டடைவதில் அபூ தர்ரிடம் அறிஞருக்கான பேராவலோ அறிவுஜீவி ஒருவரின் திசைதிரும்பலோ இருக்கவில்லை. ஓய்வற்றவராகவும் நா வறண்டவராகவும் இருந்த அவருக்காக அந்த நீருற்றிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அனீஸ் கொண்டுவரவில்லை. அவசர அவசரமாக எழுந்த அவர் பயணம் குறித்தும் அதன் விளைவு குறித்தும் எழும் ஏன், எதற்காக, என்ன காரணம் உள்ளிட்ட கேள்விகள் குறித்தெல்லாம் ஒரு கணம்கூட உட்கார்ந்து யோசிக்காமல், கிஃபார் நிலத்திலிருந்து மக்கா நோக்கிய நெடும் பயணத்தைத் தொடங்கினார். வழி நெடுகிலும், பிரயாணி, பிரயாணம், பிரயாணத்துக்கான வழி, சென்று சேருமிடம் எல்லாம் ‘அவரே’.

 அவர் போகிறார் ஆனால் விசுவாசம் வருகிறது. ஆம். விசுவாசம் இந்த வழியில்தான் வருகிறது. ஒருவாராக அவர் மக்காவைச் சென்றடைந்தார். குறைஷி கேரவான் தலைவர்கள், முதலாளிகளுக்கு மத்தியில் கிஃபார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர்! தேடிக்கொண்டிருக்கிறார், எந்த நபரின் பெயரைக் குறிப்பிடுவதுகூட குற்றமாகக் கருதப்பட்டதோ இந்த நகரத்தில், அந்த ஆசாமியைத் தேடிக்கொண்டிருக்கிறார். மக்காவின் பள்ளத்தாக்குகள், கடைத்தெருக்கள், மஸ்ஜித் அல்-ஹராம் நெடுகிலும் அவர் நாள்முழுக்கத் தேடுகிறார். எதுவும் அவர் பார்வைக்குக் கிட்டவில்லை. அன்று இரவு தனிமையிலும் பசியோடும் அவர் மஸ்ஜித் அல்-ஹராமுக்கு உறங்கச் சென்றார். ஒவ்வொரு நாள் இரவு வீட்டுக்குச் செல்லும் முன்பும் பள்ளிவாசலுக்கு வந்து (ஆபிரஹாமின் மரபுகள் பிரகாரம்) அதைச் சுற்றி நடந்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழக்கம் கொண்ட அலீ, தன்னந்தனிமையில் புழுதிமேல் படுத்திருக்கும் அபூ தர்ரைப் பார்க்கிறார்.

“நீ ஒரு அந்நியனாகத் தெரிகிறாயே!”

தனது வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார். வேறு எவ்வித வார்த்தைப் பரிமாற்றங்களிலும் ஈடுபடாமல் அங்கு தூங்கிப்போய்விடுகிறார் அபூ தர். என்ன திட்டத்தை முன்னிறுத்துகிறது விதி! இந்த வீடு, இது நபிகளாரின் வீடு. ஏனெனில், இந்தச் சமயத்திலெல்லாம் வாலிபனாக இருந்த அலீ நபிகளாரின் வீட்டில்தான் வசித்துவந்தார்.  வனாந்தரத்திலிருந்து முதன்முறையாக இஸ்லாத்தை நோக்கி வரும் அபூ தர்ரின் தலையெழுத்தை நிர்ணயித்த இந்தப் பிரயாணத்தின் பூர்வாங்க நிகழ்வுகள் இவைதான்: மக்காவில் அவரிடம் பேசிய முதல் மனிதர் அலீ; அவர் உறங்கிய முதல் வீடு நபிகளாரின் வீடு; நகரில் அந்நியப்பட்டு, தனிமையில் இருந்த அவரை நபிகளாரின் வீட்டுக்குக் கூட்டிச்சென்ற முதல் மனிதர் மீண்டும் அதே அலீ. இந்த முதல் சந்திப்புகள், தொடக்க நிகழ்வுகளெல்லாம் அபூ தர்ரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் செதுக்குபவையாக இருந்ததுடன் அவரது வாழ்நாள் முழுக்க மரணம்வரை அவரை வலுப்படுத்தியவண்ணம் இருந்தன.

அடுத்த நாள் காலை, அவர் முஹம்மதைத் தேடி முஹம்மதின் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். பகல் எந்தப் பலனும் இல்லாமல் இரவாகிறது. இரவில், கஃபாவைச் சுற்றுவதற்காக வரும் அலீ மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். மறுபடியும், அடுத்த நாள் காலை, அந்த நாள் இரவு என்று நேரம் கழிகிறது. இம்முறை, அதாவது மூன்றாம் நாள் இரவில், ஒவ்வொரு இரவிலும் தான் சுருக்கமாகவும் வழக்கமாகவும் கேட்கும் கேள்வியுடன் கூடுதலாக ஒரு வாக்கியத்தைச் சேர்த்துக்கொள்கிறார் அலீ, “உனது பெயரைச் சொல்வதற்கும், இந்த நகரத்துக்கு நீ ஏன் வந்தாய் என்பதைத் தெரிவிப்பதற்குமான காலம் இன்னும் கனிந்துவிடவில்லையா?”

அபூ தர் முன்ஜாக்கிரதையுடன் அலீயிடம் தனது ரகசியத்தைச் சொல்கிறார், “இந்த நகரில் ஒரு மனிதர் தோன்றியிருப்பதாக நான் அறிந்தேன் ...” உற்சாகத்தாலும் சந்தோஷத்தாலும் பளிச்சிட்ட புன்னகையின் கீற்று ஒன்று இளம் அலீயின் முகத்தை ஒளிரச் செய்கிறது. அன்பும் பரிச்சயமும் நிறைந்த தொனியில் அவரிடம் அவர் முஹம்மதைப் பற்றிப் பேசுகிறார். தன்னுடன் வருவதற்கு ஏற்பாடுகள் செய்கிறார், “இன்று இரவு அவரது மறைவிடத்துக்கு உன்னை நான் அழைத்துச் செல்வேன். நான் முன்னே செல்வேன். நீ தூரத்தில் என்னைப் பின்தொடர வேண்டும். ஏதேனும் ஒற்றனை நான் பார்த்தால், சுவரோரமாக நகர்ந்து சென்று, எனது காலணிகளைச் சரிசெய்வதுபோல் கீழ் நோக்கிக் குனிந்திருப்பேன். நடப்பதை உணர்ந்துகொள்ளும் நீ, என் மீதெல்லாம் எந்தக் கவனமும் செலுத்தாமல், இயல்பாகக் கடந்து உன் வழியில் போய்க்கொண்டே இரு. அபாயம் நீங்கிய பிறகு, விறுவிறுவென்று நடந்து உன்னைப் பிடித்துக்கொள்கிறேன்.”

நபிகளாரைக் கடும் சோதனைக்கு உள்ளாக்கிய நாள்கள் இவை. நகரம் பூராவும் அச்சுறுத்தல்கள், ஆபத்துகள். எதிரிகள், ஓர் அணியாக இருந்தனர், நண்பர்களோ, வெறும் மூன்றே பேர்தான்! எனினும் இன்று இரவு, இஸ்லாம் தனது நான்காவது முஸ்லிமைக் கண்டுகொள்ளும்.

மஸாஅவுக்குப் பல அடிகள் தள்ளியிருந்த ஸஃபா மலையில் அமைந்திருந்த அர்கம் இப்னு அபீ அர்கம் என்பவர் வீட்டில் முஹம்மது இருக்கிறார். இரவின் அச்சமூட்டும் இருளில், அபீ தாலிபின் இளம் மகன் முன்னால் செல்பவராகவும், ஜுனாதா கிஃபாரியின் மகன் அவரைப் பின்தொடர்பவராகவும் முஹம்மதைப் பார்க்க ஸஃபா மீது ஏறுகின்றனர். இந்தக் காட்சி அவர்களது தலையெழுத்தை வடிவமைக்கும் ஓர் அழகான காட்சிபோலத் தெரிகிறது. இந்த விதி, விரைவிலேயே ஆரம்பமாக இருக்கிறது. ஒவ்வொரு அடியாக அவர் பக்கத்தில் நெருங்குகிறார். புடைக்கும் நெஞ்சம், இளைப்புக்கு மேல் இளைப்பு, மேலதிக பரபரப்பு; விசுவாசமும் நிச்சயத் தன்மையும் அவரை ஆட்கொண்டுவிட்டன. தன்னை நபி என்று பிரகடனம் செய்பவரைப் பார்க்காமல், அவரைத் தெரிந்துகொள்ளாமல், அவரைச் சோதனைசெய்யாமல் அவர் திரும்பிச் செல்ல மாட்டார். தனது இதயத்தின் ஆருயிராகவும் தனது விசுவாசத்தின் தேட்டமாகவும் இருப்பவரைச் சந்திப்பதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அர்கமின் வீட்டை அடைவதற்கோ இப்பொழுது ஒரு சில எட்டுகளே மீதமிருந்தன அவருக்கு.

 எவ்வளவு கடினமான கணங்கள்! சந்திப்பின் முதல் கணங்களை எதிர்நோக்கியிருப்பதன் பளு கனமானதுதான். ஜுன்துபைப் பேரன்பு பற்றிக்கொண்டது. ஜுனாதாவின் மகன் ‘அவரால்’  நிரம்பியிருந்தார். அவரைவிட முஹம்மதே அவருள் அதிகமாக இருந்தார். ஜுன்துபின் மனத்தினுள் ஜுனாதாவின் மகன் என்பவர் வெகு நாள்களுக்கு முந்தைய, காணாமல் போய்விட்ட ஒரு நினைவாகவே அன்றி வேறெதுவாகவும் இருக்கவில்லை.

ஓர் ஆற்றல்மிகு விசையின் காந்தப்புலத்தில் அவரது இதயம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் பரிச்சயமான நறுமணம் ஒன்று அவரது முகரும் புலனை முடுக்கிவிடுகிறது, மேலும் இந்தக் கணத்தில் முஹம்மதின் நெருக்கம் ஏற்படுத்தும் ஈர்ப்புச் சக்தியை தனது புலன்களால் அவர் முழுமையாக உணர்ந்துகொள்கிறார். முஹம்மதின் பிரசன்னம் ஸஃபாவைச் சுற்றி உள்ள பகுதியை நிரப்புகிறது. ஜுன்துபுக்கு முஹம்மது யார் என்று தெரியும். அவர் என்ன சொல்கிறார் என்பது தெரியும் ஆனால் ... அவர் எப்படி இருப்பார்? அவரது முகம்? அவரது அமைப்பு? அவர் பேசும் விதம்?அவரது பிரசன்னம்?அவரை இவர்  எப்படிப் பார்ப்பார்? அவரிடம் இவர் எப்படிப் பேசுவார்? அவரிடம் இவர் என்ன சொல்வார்? எப்படி ஆகப்போகிறது? என்ன நடக்கும்?

“சலாம் அலைக்.”

“அலைக்க சலாம் வ ரஹ்மதுல்லாஹ்.”

இஸ்லாத்தில் கூறப்படும் முதல் முகமன் வார்த்தைகள் இவை.

எவ்வளவு நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. வரலாறு நமக்குச் சொல்லியிருந்தால்கூட நமக்குத் தெரிந்திருக்காது, ஏனெனில் இந்தத் தருணங்களில் நேரமெல்லாம் கண்டுகொள்ளப்பட்டிருக்காது. நமக்குத் தெரிந்ததெல்லாம் அர்கமின் வீட்டினுள் இறங்கிய ஜுனாதாவின் மகன் அங்கேயே தொலைந்துபோய்விட்டார் என்பதுதான். அவர் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது. அர்கமின் வீட்டைவிட்டு அவர் திரும்பவே இல்லை. ஜூன்துப் இப்னு ஜுனாதா திரும்பிச் செல்கிறார். சட்டென்று, கஅபாவுக்குப் பக்கத்தில், ஸஃபா சிகரத்தின் மேல், இறைச் செய்தியின் மறைவிடத்திலிருந்து, இஸ்லாத்தின் அதிகாலை தொடுவானம் ஒன்று – ஓர் முகம் - மேலெழுகிறது, வைகறையால் கிளப்பிவிடப்பட்ட அது ஒரு கணம் நிற்கிறது. பாலைவனத்தின் நெருப்பு சுவாலையால் நிரம்பியிருந்த இரு கண்களைக்கொண்டு, மக்கா பள்ளத்தாக்கில் இருந்த மலைபோன்ற சுவர்களை நோக்கித் திரும்பிய அவர் கஅபாவின் சிலைகள் மீது தனது பார்வையை நிறுத்துகிறார் .

தொடர்ச்சி நான்காம் பாகத்தில் ...

Friday, April 5, 2019

குர்'ஆன் கூறும் அரசியல் - III

குர்'ஆன் கூறும் அரசியல்
பாகம்3

மொளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)


தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி



இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி ...

இஸ்லாமிய அரசின் சிறப்பம்சங்கள்

        மேற்கண்ட 16 தலைப்புகளின் கீழ் குர்'ஆன் இவ்வாறு விளக்கிய பிறகு இஸ்லாமிய அரசின் சிறப்புகளாக நம்முன் தோன்றுவன பின்வருமாறு:

1)       தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை விட 'ரப்புல் ஆலமீனுடைய' திருப்தியை முதன்மையானதாகக் கருதும் சுதந்திர சிந்தையுள்ள ஒரு சமூகத்தினால் இஸ்லாமிய அரசு தோற்றுவிக்கப்படுகின்றது. தன்னுடைய ஆட்சியை அமைக்காமல், அவ்விறைவனின் பிரதிநிதியாக (கலீஃபாவாக) அவனுடைய வழிகாட்டுதலின் கீழ் அது ஆட்சியை நடத்துகின்றது. இறைமறை, இறைத்தூதர் வழிமுறையிலிருந்து அவ்வழிகாட்டுதலை அது பெறுகின்றது.

2)       ஆட்சி, அதிகாரம் இறைவனுக்கே என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கின்ற வகையில் அது 'இறையியல்' (Theocracy) கருத்தாக்கத்தோடு ஒத்துப்போகின்றது. ஆனால் செயல்படுத்துகின்ற விதத்தில் அது மாறுபட்டு நிற்கின்றது. 'இறையியல்' அமைப்பில் சட்டங்களை வகுப்பதும், விலக்குவதும் ஒரு குறிப்பிட்ட மதகுருமார்களின் அதிகாரத்தில் தான் இருக்கும். ஆனால் இஸ்லாமிய அரசு தனது குடிமக்களில் யாரெல்லாம் இறைவனை ஏற்றுக்கொண்டு அவன் திருப்திக்காகவே தமது வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்களோ அந்த இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் அரசில் பங்கு பெறும், அரசை செயற்படுத்தும் உரிமையை வழங்குகின்றது.

3)       பொதுமக்கள் ஆட்சியில் பங்குபெறலாம், நிர்வாகிக்கலாம் என்ற தன்மையின் அடிப்படையில் இஸ்லாமிய அரசு ஜனநாயகத்தின் 'மக்களாட்சித்' (Democracy) தன்மையோடு ஒத்துப்போகின்றது. ஆயினும், இங்கு மக்கள் அரசின் சட்டதிட்டங்கள், வாழ்வுநெறி, உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள், வருமான வகைகள் அனைத்தையும் தமது எண்ணங்களின் அடிப்படையில் வகுத்துக் கொள்ளும் 'சுயநிர்ணய' உரிமை பெற்றவர்கள் அல்லர். தமது மனம்போல் இவற்றை மாற்றிக் கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி கிடையாது. இறைவனும், இறைத்தூதரும் எத்தகைய வழிகாட்டுதலை வழங்கியுள்ளனரோ அவ்வடிப்படையில் தான் ஆட்சி நடத்த வேண்டும். அரசு நிர்வாகத் துறையோ, சட்டத்துறையோ, நீதித்துறையோ, ஒட்டுமொத்த மக்கள் ஒன்று சேர்ந்தோ, இவற்றில் தலையிடவோ, மாற்றவோ முடியாது. அவ்வாறு மாற்ற விரும்பினால் தத்தமது நம்பிக்கைகளைத் துறந்து ஈமானைவிட்டு வெளியேறிவிடலாம்.

4)       இது ஒரு 'கருத்தியல் அரசு' ஆகும். ஆகவே இயல்பாகவே யார் யார் இக்கருத்துகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனரோ அவர்கள்தாம் ஆட்சி செலுத்த இயலும். இருப்பினும், இக்கருத்துக்கள் மீது நம்பிக்கை இல்லாதோரும் நாட்டில் எல்லாவகையான உரிமைகளும் தரப்பெற்று பிறகுடிமக்களுக்கு இணையாக நடத்தப்படுவர்.

5)       இவ்விஸ்லாமிய அரசு எந்தவித இன, நிற, மொழி அல்லது குறுகிய தேசியவாத நோக்கில் நிறுவப்படமாட்டாது. மாறாக சில அடிப்படை நெறிகள் மீது தோற்றுவிக்கப்படுவதாகும். உலகின் எந்த பகுதியை சார்ந்தவரும், இவ்வடிப்படை நெறிகளை ஏற்றுக்கொண்டால் எவ்வித மாச்சர்யமும் இல்லாமல் சம உரிமைகளோடு இவ்வமைப்பில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். இவ்விதமாக பூமியில் எப்பகுதியில் இவ்வரசு நிறுவப்பட்டாலும் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா அல்லது ஆசியா எதுவாக இருப்பினும் அது இஸ்லாமிய அரசாகவே கருதப்படும். அதன் ஆட்சியாளர்கள் வெள்ளையர்களாக, மஞ்சள் நிறத்தவர்களாக அல்லது கருப்பர்களாக இருக்கலாம். இவ்வகையில் இது உலகளாவிய அரசாக அமைவதில் எவ்வித தடையுமில்லை. இவ்விதமான அரசுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டாலும் இனவெறியில் புதைந்துபோகாது. அவற்றிற்கிடையே சகோதரத்துவம் இழையோடும். எந்நேரத்திலும் ஒன்றுசேர்ந்து ஒரு உலகளாவிய அமைப்பாக உருமாறும்.

6)       அரசியலை சுயலாபங்கள், உலக நலன்களுக்காக என்றில்லாமல் ஒழுக்க மாண்புகள் மற்றும் இறையம்சத்தோடு பின்னிப் பிணைந்ததாக ஆக்குவதே இவ்வரசின் உண்மையான நோக்கம்!. இங்கு உயர்வு மற்றும் கெளரவம் ஒழுக்க அடிப்படையில் தாம்! ஆட்சியாளர்கள் தேர்வின்போது, உடல்பலம், அறிவுபலம் ஆகியவற்றோடு ஒழுக்க நலன் அதிமுக்கியமாக கருதப்படும். உள்துறையின் அனைத்து அங்கங்களும் நேர்மை, நாணயம், உயர்ந்த நீதி, நியாயம் ஆகியவற்றின் சின்னங்களாக விளங்கும். வெளிவிவகாரத் துறையிலோ நேர்வழியும், சொல் செயல் ஒற்றுமை, சமாதானநோக்கு, நாடுகளுக்கிடையேயான நீதுயும், நன்னடத்தையும் வியாபித்து நிற்கும்.

7)       இவ்வரசு சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது, நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது போன்ற காவல்துறைப் பணிகளுக்கானது அல்ல. மாறாக இதற்கென ஓர் உன்னத நோக்கம் உண்டு. சமூக நீதியை நிலைநாட்டுவது, நன்மையான காரியங்களைப் பரவலாக்குவது, தீமையை இல்லாதொழிப்பது போன்றவையாகும்.

8)       உரிமைகள், அந்தஸ்து போன்றவற்றில் சமத்துவம்; சட்டங்களுக்கு முற்றிலும் அடிபணிதல்; நன்மையானவற்றில் உறுதுணையாய் இருத்தல்; தீமைகளுக்கு உதவாமல் விலகியிருத்தல்; இறைவனுக்கு முன்னால் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு; பொறுப்பினைக் கட்டாயக் கடமையாக கருதுதல்; குடிமக்களுக்கும் (தனிமனிதர்களுக்கும்), அரசுக்கும் ஒரே பொதுவான இலக்கு; சமூகத்தில் எந்த ஒரு தனிமனிதனும் வாழ்க்கைத் தேவையான அடிப்படை வசதிகளை பெறாமலிருக்கக்கூடாது எனும் அக்கறை..... இவை இவ்வமைப்பின் அடிப்படை அம்சங்கள்.

9)       இவ்வமைப்பில் தனிமனிதனுக்கும், அரசுக்கும் இடையே ஓர் அற்புதமான இணைப்பு காணப்படுகின்றது. அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து தனிமனிதனை அடிமைபடுத்திடவும் முடியாது. தனிமனிதன் எல்லாவகையான சுதந்திரம் படைத்தவனாய் தான்தோன்றித் தனமாக சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கவும் முடியாது, ஒரு புறம் தனிமனிதனுக்கு உரிமைகள் கொடுத்தும், அரசினை இறைச்சட்டங்களின் மேலாண்மை, ஷூரா அமைப்பு என்ற வரையறைக்குள் வைத்தும் தனிமனித உரிமை வளர வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. தேவையற்ற அரசாங்க தலையீட்டிலிருந்து அவனைப் பாதுகாக்கின்றது.


அதே சமயம் தனிமனிதனுக்கென்று அத்யாவசியமான ஒழுக்க நெறிகளையும் முறைபடுத்தியுள்ளது. இறைச்சட்டங்களை வழிமுறையாகக் கொண்டியங்கும் அரசினை மனதார நேசிப்பது, கீழ்படிந்து நடப்பது, நன்மையான காரியங்களில் முன்சென்று உறுதுணையாய் இருப்பது, அமைப்பில் சீர்குலைவை ஏற்படுத்துவதை விட்டும் விலகியிருப்பது, அமைப்பைக் காக்க உயிர், உடல், பொருள் அனைத்தையும் அர்ப்பணிப்பது ஆகியவை.