Tuesday, April 23, 2019

மீண்டும் அபூ தர் ... IV

மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்

அத்தியாயம் 4

மூன்று முட்டாள் சிலைகள், உயர்வு மனப்பான்மை என்னும் ஷைத்தானிய வேட்கையை தங்கள் ‘சிற்பி-வழிபாட்டாளர்க’ளுக்கு உத்தரவாதப்படுத்தியிருந்தன. இதுபோன்ற ஒன்றை அப்பொழுதுதான் முதல் முதலாகப் பார்க்கும் அபூ தர், வியப்பிலும் கோபத்திலும், தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறார், ‘பல தெய்வக் கொள்கையின் குறியீடான இந்த முன்னூற்றுச் சொச்சம் சிலைகள் ஓரிறைக் கொள்கையின் குறியீடான ஆபிரகாமின் வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கின்றன?’

ஓர் வந்தேரியான அவர், தனிமையில், கொந்தளிப்போடும் தீர்மானத்தோடும் அவசரம்அவசரமாக ஸஃபாவிலிருந்து இறங்குகிறார். குகையைவிட்டு வெளியில் வந்து, ஹிராவிலிருந்து இறங்கி, இறை வெளிப்பாட்டின் முதல் சுடரின் தாக்கத்தால் அன்றைய இரவு கொந்தளிப்போடு எழுந்துவந்த முஹம்மதைப் பார்ப்பதுபோல இருக்கிறது இவரைப் பார்ப்பதற்கு; அல்லது, நிலநடுக்கமானது மலை ஒன்றிலிருந்து அரைத்து வெளிதள்ளும், மக்காவின் ஆழமான பள்ளத்தாக்கின் மீதும் பல தெய்வக் கொள்கை, நயவஞ்சகத்தனம், பாசாங்கு, இழிவு, உறக்கம் ஆகியவற்றின் மீதும் வந்து விழும் ஒரு கல்லைப்போலத் தெரிகிறார் இவர்.

இஸ்லாம் என்பது இன்னமும் மறைந்துதான் இருந்தது அர்கமின் வீட்டில். இஸ்லாத்தின் முழு உலகமும் இந்த வீடுதான். மேலும், அபூ தர்ரின் வருகையோடு உம்மத்தின் நபர்கள் நான்காக ஆகியிருந்தனர். மறைந்து வாழ்தல் – தஃகிய்யா - எனும் நிபந்தனைதான் போராட்டத்தின் இயக்க விசை. கிஃபாருக்குத் திரும்பிச் செல்வதற்காக, எந்தத் தயக்கமுமின்றி, மக்காவிலிருந்து வெளியேறிவிடும்படியும் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருக்கும்படியும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், இந்த ‘வனாந்தரத்தின் குழந்தை’யின் எலும்பும்தோலுமான நெஞ்சம் அத்தகைய தீப்பிழம்பு ஒன்றைத் தன்னுள் மறைத்துவைக்கும் செயலில் மிகவும் பலவீனமாக இருந்தது. தனது விசுவாசத்தின் கோயிலுக்கான ஒரு ஸ்தூபியாகத் திகழ்ந்த உயரமான, ஒல்லியான உடலுடையவராக, உரக்கச் சத்தமிடும் தொண்டையுடையவராக அன்றி வேறெதுவாகவும் இல்லாத அபூ தர்ருக்கு, கிளர்ச்சியைப் பறைசாற்றிய உருவத்தோடும் எரியும் இதயத்தோடும் அகண்ட பாலைவனத்துக்குக் கீழ்ப்படிந்தவராய், சட்டென்று உறைந்துபோய் அபூ தர்ராக மாறியிருந்த அவருக்கு பாசாங்கு செய்வதோ மறைந்து வாழ்வதோ இயலாத காரியம்; தெரிந்ததெல்லாம் கிளர்ச்சி ஒன்றுதான். இப்படிப்பட்ட ஒரு சூழலில் செயலாற்றுவதற்கான திறன் வேண்டும், அவரோ திறனற்றவராக இருந்தார். “இறைவன் எந்த ஒரு ஆன்மாவின் மீதும் அதன் திறனை மீறிப் பொறுப்புச் சாட்டுவது இல்லை” (2:286).

கஅபாவுக்கு முன்னால், பயங்கரமான சிலைகளை நேருக்கு நேர் பார்த்தவராக, குறைஷி நிர்வாகச் சபை இருந்த தார் அல்-நதூஹுக்கு அருகாமையில் நின்றுகொண்டு ஓரிறைக் கொள்கையின் முழக்கத்தை அவர் கூச்சல்போட்டு வெளிப்படுத்துகிறார்; முஹம்மதின் இலட்சியப் பாதையில் தனது விசுவாசத்தை அவர் பிரகடனம் செய்கிறார்; ‘மனிதர்களால் செதுக்கப்பட்டிருக்கும் பேச்சுமூச்சற்ற கற்கள்.’ என்று அந்தச் சிலைகளை அவர் அழைக்கிறார்.

இஸ்லாம் வெளிப்படுத்திய முதல் முழக்கம் இதுதான்; பல தெய்வக் கொள்கைக்கு எதிராக முதல் முறையாக ஒரு முஸ்லிம் கிளர்ச்சி செய்கிறார். பல தெய்வக் கொள்கையின் பதில் தெளிவாக இருந்தது, மரணம்! மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையப்போகும் ஒரு மரணம். முழக்கமிடும் இந்த முதல் குரல்வளைத் துண்டிக்கப்பட வேண்டும். சிறிதும் தயங்காமல் அவர் மீது பாய்ந்த அவர்கள் அவரது தலை, முகம், மார்பு, பக்கவாட்டுப் பகுதி ஆகியவற்றில் ஆக்ரோஷத்துடன் குத்தினர். அவரது “குஃப்ருக்குச் சமமான” முழக்கங்கள் துண்டிக்கப்படும்வரை குத்துகள் தொடர்ந்தன.

அப்பாஸ் வந்தார். நபிகளாரின் சிறிய தந்தையும் குறைஷி உயர்தட்டு மக்கள் மற்றும் பல தெய்வக் கொள்கையாளர்களான முதலாளிகளின் வகுப்பைச் சேர்ந்தவருமான அவர் அவர்களை பயமுறுத்தும்படி பேசினார், “இந்த ஆள் கிஃபாரைச் சேர்ந்தவர். நீங்கள் இவரைக் கொன்றால், உங்கள் கேரவான்களுக்கு எதிராக கிஃபாரின் வாள்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்ளும்!”

தங்கள் மதத்துக்கும் வாழ்வுக்கும் இடையே அவர்கள் முடிவெடுக்க வேண்டும், கடவுளா சரக்குகளா? அன்பைச் சொரியும் கிப்லாவா பணம் பெருகச் செய்யும் கேரவானா, எது வேண்டும்?

அவர்கள் தயக்கமில்லாமல் பின்வாங்கினர். அபூ தர், ஒரு சிலைபோல, இரத்தத்தால் மாசுபடுத்தப்பட்டு நொடிந்துபோனவராய், வட்டமான ஒரு கும்பலுக்கு நடுவே நின்றிருந்தார். இந்தக் கும்பல், சிரமப்பட்டு எழ முயன்ற, தங்களிடம் சிறைபிடிக்கப்பட்டிருந்த அந்த ஒற்றை மனிதரை அச்சத்துடன் பார்க்கிறது. வட்டத்தின் விட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவர் எழுகிறார். தனது இரு கால்களின் பிடிமானத்தைக் கொண்டு தன்னை வலுப்படுத்திக்கொள்கிறார். கும்பலின் அடர்த்தி மேலும் அதிகரிக்கிறது; ஏதோ தங்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடைக்கலம் தேடுவதுபோல் இருந்தது அது. இங்குதான் வற்புறுத்தல் விசுவாசத்தை அஞ்சுகிறது. அவர் ஒரே முகம்; அவர்களோ முகமற்றவர்கள், ஆளுமையற்றவர்கள். அவர் ஒண்டி ஆள்; அவர்களோ அடையாளமற்றவர்கள். எக்கச்சக்கமான மந்தைகளை எதிர்த்து நிற்பதோ ஒரே ஒரு மனிதர்; ஒரு தனி ஆள். அர்த்தம், முக்கியத்துவம், குறிக்கோள்கள், சுய நிர்ணய உரிமை ஆகியவற்றையும் விசுவாசி ஒருவருக்கு வீரமரணம் கொடையளிக்கும் அற்புதமான, அதிசயம்-போன்ற, தோல்வியற்ற ஓர் வல்லமையையும் விசுவாசத்தால் ஈட்டிய ஒரு தனி ஆள்.

அவர் அவசரமாகப் புறப்பட்டார். ஜம் ஜம் கிணற்றுக்குத் தன்னை இட்டுச்சென்றார். தனது காயங்களை எல்லாம் கழுவினார். தனது இரத்தத்தைச் சுத்தப்படுத்தினார். அடுத்த நாள் மீண்டும் அவர் சம்பவ இடத்துக்கு வருகிறார்; மறுபடியும் மரணத்தின் விளிம்புவரைச் செல்கிறார். அப்பாஸ் வந்து அவரை அறிமுகப்படுத்துகிறார், ‘இவர் கிஃபார் கோத்திரத்தைச் சேர்ந்தவர் ...”. மீண்டும் அடுத்த நாள் அதேபோல். அறுதியாக நபிகளாரே இதில் தலையிட வேண்டி வருகிறது. இம்முறை அபூ தர்ரின் உயிரைக் காப்பாற்றுவது என்று இல்லாமல், கட்டளை ஒன்றின் வாயிலாக, திணறடிப்பும் அபாயமும் சூழ்ந்திருக்கும் இந்த நகரத்திலிருந்து ஓய்வற்ற இந்தக் கலகக்காரரை அகற்றி (இஸ்லாத்தை நோக்கி) கிஃபார் கோத்திரத்துக்கு  அழைப்பு விடுக்கும் பணியில் ஈடுபடுத்துகிறார். அபூ தர் தனது குடும்பத்தையும், சிறுகச்சிறுக, தனது முழுக் கோத்திரத்தையும் இஸ்லாத்தில் பிணைத்துவிடுகிறார். மக்காவில் போராட்ட வாழ்வின் சிரமங்களை முஸ்லிம்கள் அனுபவித்துவந்த நேரத்திலும், அவர்கள் இடம்பெயர்ந்து சென்ற நேரத்திலும், மேலும் மதீனாவில் தனிநபர்மயம் எனும் நிலையிலிருந்து சமூக அமைப்பு ஒன்றை நிறுவும் நிலைக்கு அவர்கள் உயர்ந்த நேரத்திலும், அதன் விளைவாக யுத்தங்கள் மூள ஆரம்பித்த நேரத்திலும் அவர் கிஃபாருடனேயே இருந்தார்.

இந்தத் தருணத்தில்தான் அபூ தர் சம்பவ இடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்கிறார். மதீனாவுக்குச் செல்கிறார். அங்கே, அவருக்கென்று உறைவிடமோ வேலையோ இல்லாத காரணத்தால், அந்தக் காலத்தில் மக்களின் வீடாக இருந்த நபிப் பள்ளிவாசலையே தனது வீடாகவும் அவர் ஆக்கி ஸஃப்ஃபா (திண்ணை) தோழர்களுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். வாழ்வைச் சித்தாந்தத்துக்காக அர்ப்பணிக்கிறார். அமைதி, சிந்தனை, கல்வித் தேட்டம், வழிபாடு ஆகிய தருணங்களிலும், யுத்த தருணத்திலும், யுத்தங்களிலும் இந்த இயக்கத்துக்காக அவர் சேவையாற்றுகிறார்.

நபிகளாரின் தலைமைத்துவத்தின் கீழ் இஸ்லாம், அபூ தர்ரின் எல்லா மானுடத் தேவைகள், சமூக வேட்கைகளையும் பூர்த்திசெய்கிறது; ஒரு புறம் கடவுள், சமத்துவம், மதம், உணவுத் தன்னிறைவு, அன்பு, ஆற்றல் ஆகியவற்றுக்கும், மறுபுறம் இறுமாப்பு, யதேச்சதிகாரக் கொடுங்கோன்மை, ஏற்றத்தாழ்வு, குஃப்ர், பட்டினி, பலவீனத்தையும் இழிநிலையையும் வேண்டிநிற்கும் அவற்றின் மதம் ஆகியவற்றுக்கும் இடையில் ஓரிரைக் கொள்கையை அடித்தளமாகக் கொண்ட இஸ்லாம் போராட்டத்துக்கான கதவைத் திறந்துவிட்டது. சூறையாடும் ஒடுக்குமுறையாளர்களின் மாயக் கதைகளுக்கெல்லாம் இஸ்லாம் முதல் முறையாக ஓர் முடிவு கட்டியது. இவர்கள்தாம், ‘இவ்வுலக வாழ்க்கை வேண்டுமா மறுமை வேண்டுமா ...’ போன்ற கோஷங்கள் மீது மக்களுக்கு விசுவாசத்தை ஏற்படுத்தியிருந்தனர். இதனால், ‘மறுமை’ மக்களுக்கானதாகவும் ‘இவ்வுலகம்’ தங்களுக்கானதாகவும் இருக்கும். இவ்வழியில் அவர்கள் வறுமைக்கு ஓர் தெய்வீகப் புனிதத்துவத்தைக் கற்பித்திருந்தனர்.

இந்த மனிதத் தன்மையற்ற பார்வையில், “வறுமை என்பது குஃப்ர்” என்று சொன்ன ஓர் உண்மைப் புரட்சியை இஸ்லாம் சாத்தியப்படுத்தியது. “வாழ்வாதாரம் இல்லாதவர்கள் பிழைத்திருக்க மாட்டார்கள்.”, “தெய்வீக அருள், (சமூகத் தேவைக்கான) அபரிமிதமான செல்வம், சுபிட்சமான நிலை, நற்குணம் எல்லாம் உலகாயத வாழ்க்கையின் ஓர் அங்கமாகும், மேலும் ‘உணவு’ என்பது கடவுளை வழிபடுவதற்குத் தேவையான ஓர் உள்கட்டமைப்பு.” “வறுமை, இழிநிலை, பலவீனத்துடன் இணைந்து மதம், ஆன்மிகம், இறையச்சம் எல்லாம் ஒரே சமூகத்தில் கலந்திருப்பதா?” அது ஒரு பொய்! இதன் காரணத்தால்தான் அபூ தர்ரின் இறைத்தூதர் ஓர் ஆயுதம் தரித்த இறைத்தூதராக இருந்தார்: அவரது ஓரிறைக் கொள்கை ஓர் தற்சாய்வான, ஆன்மிகம் சார்ந்த, தனிப்பட்ட தத்துவம் கிடையாது. அது இனங்களின் ஒற்றுமை, வகுப்புகளின் ஒற்றுமை, அனைத்து மனிதருக்கும் அவரவர் பங்குக்கும் உரிமைக்கும் ஏற்றார்போல் கிடைக்கும் சம வாய்ப்பு ஆகியவற்றுக்கான இணைபிரியாத உறுதுணையாக இருந்தது. அதாவது, ஓரிறைக் கொள்கையின் உறுதிமிக்க அனைத்துக்கும் அப்பாற்பட்ட அமைப்பு என்பது வெறுமனே வார்த்தைகளினூடாகச் செயல் வடிவம் பெற்றுவிடாது; தூதுச் செய்திக்குப் போர்வாள் பக்கபலமாக இருத்தல் அவசியம்.

இதற்காகத்தான் அபூ தர் தனது தனிப்பட்ட லெளகீக வாழ்வைத் துறக்கிறார். ஏனெனில், பிறரது வறுமைக்காகப் போராடுகிற ஒரு நபர் தனது வறுமையை ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும், மேலும் தனது விடுதலையை உத்தரவாதப்படுத்தியிருக்கும் ஒரு நபரால் மட்டுமே தனது சமூகத்துக்கான விடுதலையைப் பெற்றுத்தரவும் முடியும். கிறிஸ்தவத்தையோ புத்தரையோ ஒத்திருக்கும் ஒரு சூஃபி கட்டுப்பாடாக அல்லாத, இஸ்லாமியக் கட்டுப்பாடான ‘புரட்சிகரமான விசுவாசத்துக்கு’ அழைப்பு விடுப்பவர் அவர். இதனூடாக உலகாயத நலன்களும் பொருளாதாரச் சமத்துவமும் மக்கள் எல்லோருக்கும் கிடைக்கப்பெறும்.

அதனால்தான் இந்தப் புரட்சிகர மதம், ‘இம்மை மறுமை இரண்டையும் சார்ந்த’ இந்த மதம், பலவீனத்தையோ துறவறத்தையோ வயிற்றிலடிப்பதையோ இயற்கையிடமிருந்து அந்நியப்படுவதையோ இயற்கை குறித்து மனிதர்கள் கொண்டிருக்கும்‘இறுதி-நாள்-மயக்க’த்தையோ ஆதரிக்காத இந்த மதம், ‘சுபாவத்தில் புனிதம்மிக்கவர்களாக’, ‘பொருள்முதல்வாத உலகில் இறைவனின் பிரதிநிதியாக’ மனிதர்களை ஆக்கும் ஒரு மதமாக இருக்கிறது! அபூ தர்ரின் தலைவர், அவரது இறைத்தூதர், ஏனைய எல்லோருக்கும் முன்பிருந்தே கடவுளின்/மக்களின் வீடான மசூதியில் வசித்துவருகிறார்; அது முஹம்மது, அலீ, ஸஃப்ஃபா தோழர்களான சல்மான்கள், அபூ தர்கள் போன்றோரின் வீடு.

அபூ தர்ரேகூட மசூதியின் மூலையில் இருந்த ஓர் கூரை வேய்ந்த திண்ணையின் (ஸஃப்ஃபா) கீழ்தான் காணக்கிடைத்தார், தனது வெற்றியின் உச்சத்திலும்; புனித நபிக்கு மிகவும் நெருக்கமான தோழர்களுள் ஒருவராக அவர் ஆகிவிட்டிருந்தார். ஏதேனும் குழாமில் அவர் இல்லையென்றால் நபிகளார் அவரைப் பற்றி விசாரிப்பார்; ஏதேனும் குழாமில் அவர் இருந்தாரெனில் பேச்சுகளுக்கிடையிலும் அவரைத் திரும்பிப் பார்ப்பார். தபூக் போரில், நபிகளாரின் தலைமைத்துவத்தின் கீழ், வீரர்கள் சுட்டெரிக்கும் வடக்குப் பாலைவனத்தைக் கடந்து (கிழக்கு) ரோமாபுரியின் எல்லைகளைச் சிரமத்தினூடாகச் சென்றடைய வேண்டியிருந்த சூழலில், அபூ தர் அவர்களை விட்டும் தூரப்பட்டிருந்தார். அவரது நோஞ்சான் ஒட்டகம் நின்றுவிட்டது. பொழியும் நெருப்பு மழையில் அதை விடுவித்த அவர் தனியாக நடையைக்கட்டினார்! வழியில் சிறிதளவு தண்ணீரைக் கண்டார்; இதுபோன்ற பாலைவனம் ஒன்றில், சந்தேகத்துக்கு இடமின்றி, தாகத்தால் தவித்துக்கொண்டிருக்கும் தனது ‘நண்பரிடம்’ கொடுப்பதற்காக அதை எடுத்துச் சென்றார். மூர்க்கமான பாலைவனத்தின் ஆழத்திலிருந்து  முன்னோக்கி நகர்ந்துகொண்டிருந்த தெளிவற்ற புள்ளி ஒன்றை நபிகளாரும் முஜாஹிதுகளும் பார்க்கின்றனர். அது ஒரு மனிதர்தான் என்பதைச் சிறுகச்சிறுக அவர்கள் உணர்ந்துகொள்கின்றனர்! யார் அது? இந்தக் கனல் வீசும் பாலைவனத்தில் நடந்துவருவது, அதுவும் தனியாக? நபிகளார், பேராவல் ததும்பும் ஓர் உற்சாகத்தில், உரக்கக் கத்தினார், “அவர் அபூ தர்ராகத்தான் இருக்க வேண்டும்!”.  ஒரு மணி நேரம் கழிந்தது. அவர் அபூ தர்ரேதான். முஜாஹிதுகளை எட்டிய அவர் தாகத்தாலும் தளர்ச்சியாலும் மண்ணில் சாய்ந்தார்.

“தண்ணீர் உன்னிடம் இருக்கிறது, ஆனாலும் தாகத்துடன் இருக்கிறாய் அபூ தர்?” என்று நபிகளார் கேட்க அபூ தர் பின்வருமாறு பதில் அளிக்கிறார், “நான் நினைத்ததெல்லாம், இப்படி ஒரு பாலைவனத்தில், தழல் கக்கும் இந்தச் சூரியனின் கீழ், உங்களுக்கு ...”   

“அபூ தர் மீது இறைவன் அருள் பாலிப்பானாக! அவரது வாழ்வியக்கம் தனிமையில், மரணம் தனிமையில், அவர் உயிர்ப்பிக்கப்படுவதும் தனிமையில்!” நபிகளார் கூறினார்.  

தொடர்ச்சி ஐந்தாம் பாகத்தில் ...


No comments:

Post a Comment