Friday, April 5, 2019

குர்'ஆன் கூறும் அரசியல் - II

குர்'ஆன் கூறும் அரசியல்

பாகம் - 2

மொளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)


மிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி




9. அரசாங்கத்தைப் பின்பற்றுவதன் விதிகள்

'கிலாஃபத்' அமைப்பின் கீழ் செயற்படும் அரசாங்கத்திற்கு நல்ல விஷயங்களில் மட்டும் பொதுமக்கள் கீழ்படிந்தால் போதும், அரசாங்கம் இறை நியதிகளுக்கு மாற்றமாக இயங்கும்போது கட்டுப்படவும் தேவையில்லை; உதவிகரமாக இருக்கவும் அவசியமில்லை.

"நபியே!, அல்லாஹ்விற்கு எப்பொருளையும் அவர்கள் இணைவைப்பதில்லை என்றும்.........நன்மையானவற்றில் உமக்கு மாறு செய்வதுமில்லை என்றும் உம்மிடம் வாக்குறுதி(பைஅத்) செய்ய விசுவாசிகளான பெண்கள் உம்மிடம் வந்தால், அவர்களுடைய (பைஅத்தை) நீர் ஏற்றுக்கொள்வீராக!"  
(அல் குர்ஆன் 60:12)

"இன்னும், நன்மையிலும், இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்; பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்; இன்னும், அல்லாஹ்வை நீங்கள் பயந்துகொள்ளுங்கள்; (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடினமானவன்."  
(அல் குர்ஆன் 5:2)

'அவர்களிலுள்ள (யாதொரு) பாவிக்கோ, அல்லது நன்றி கெட்டவனுக்கோ நீர் கீழ்படியாதீர்." 

(அல் குர்ஆன் 76:24)

10. ஆலோசனை (ஷூறா)

அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் - அமைப்பு, வடிவமைப்பிலிருந்து, அரசு நிர்வாகம், ஆட்சியாளர்கள் தேர்வு, சட்ட வடிவம், நிர்வாக செலவினங்கள் வரை - இறை நம்பிக்கையாளர்களின் பரஸ்பர ஆலோசனைகளின் அடிப்படையிலேயே நடைபெறும். இவ்வாலோசனை நேரிடையாகவோ, பிரதிநிதிகளின் வாயிலாக மறைமுகமாக அமையும்!

"இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் இரட்சகனின் கட்டளைகளை ஏற்று தொழுகையையும் நிறைவேற்றுவார்கள்; இவர்களின் காரியமோ தங்களுக்குள் கலந்தாலோசித்தலாக இருக்கும்;"(1)
(அல் குர்ஆன் 42:38)


11. ஆட்சியாளரின் தன்மை

ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படும்போது கீழ்வரும் நெறிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

() எந்த அடிப்படை விதிகளின் அடிப்படையில் 'கிலாஃபத்' செயற்படவேண்டுமோ அவற்றின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அடிப்படை விதிகளை மறுப்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படமாட்டாது!
"விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள்; (அவனது) தூதருக்கும் கீழ்படியுங்கள். இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலை)வர்களுக்கும் கீழ்படியுங்கள்
(அல் குர்ஆன் 4:59)

"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்களைச் சார்ந்தோரை தவிர (வேறெவர்களையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்!" (1)
(அல் குர்ஆன் 3:118)

"(விசுவாசிகளே!) உங்களில் யுத்தம் செய்தோரையும் அல்லஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசிகளையும் தவிர, (வேறு எவரையும் தங்களுடைய) அந்தரங்க நண்பர்களாக உங்களின் எவரும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ்  (சோதித்து) அறியாத நிலையில் நீங்கள் விட்டுவிடப்படுவீர்களென்று எண்ணிக்கொண்டீர்களா? அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன்."(2)
(அல் குர்ஆன் 9:16)

() அவர் இறைநம்பிக்கை உள்ளவராக, நேர்மையானவராக, இறை அடியாராக இருக்க வேண்டும். கொடூரமானவராக, பாவியாக, அநீதியாளனாக, இறை நியதிகளை விட்டும் வரம்பு மீறுபவராக இருக்கக்கூடாது.

அத்தகையவன் தலைமைக்கு வந்தால் அது இஸ்லாமியப் பார்வையில் 'பாதிலாக' (அசத்தியமாகக்) கருதப்படும்.
இன்னும், இப்றாஹீமை அவருடைய இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில், அவற்றை அவர் நிறைவு செய்தார், (என்பதையும் நினைவு கூறுங்கள்), 'நிச்சயமாக மனிதர்களுக்கு நான் உம்மை தலைவராக ஆக்குகிறேன்' என அவன் கூறினான். அதற்கு (இப்றாஹீம்) 'என்னுடைய சந்ததியினரிலிருந்தும் (தலைவர்களை) ஆக்கு வாயா?' எனக் கேட்டார். (அதற்கு 'அவர்களிலுள்ள) அநியாயக்காரர்களை என்னுடைய (இவ்)வாக்குறுதி சாராது' எனக்கூறினான்" (3)
(அல் குர்ஆன் 2:124)


"அல்லது விசுவாசங்கொண்டு, நற்செயல்களும் செய்தார்களே அத்தகையோரை, பூமியில் குழப்பம் செய்கிறவர்களைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது இறையச்சமுடையவர்களை (குற்றம் புரியும்) பாவிகளைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா?" 

(அல் குர்ஆன் 38:28)

"(நபியே!)... இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நீர் நாடி (த்தகைய)வர்களை விட்டு உம் கண்களை திருப்பியும் விடாதீர்; மேலும் எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் மறக்கச் செய்து விட்டோமோ, அவன் தன் மனோ இச்சையைப் பின்பற்றி விட்டான். அவனுடைய காரியமும் வரம்பு கடந்ததாகிவிட்டது. அவனுக்கு கீழ்ப்படியாதீர்!"
(அல் குர்ஆன் 18:28)

"மேலும், வரம்பு மீறுவோரின் கட்டளைக்கு நீங்கள் கீழ்படியாதீர். அவர்கள் எத்தகையோரென்றால், பூமியில் குழப்பம் செய்வார்கள்; இன்னும் சீர்திருத்தம் செய்யமாட்டார்கள்!"
(அல் குர்ஆன் 26:151, 152)

"உங்களில் யார் அதிகமாக இறைவனுக்கு பயப்படுகிறாரோ, அவரே இறைவனிடத்தில் கண்ணியமானவர் ஆவார்!" 
(அல் குர்ஆன் 49:13)


() அறிவற்றவனாக, ஜாஹிலாக இருக்கக்கூடாது. தீர்க்கமான அறிவுடையவராக, கூர்ந்த மதி படைத்தவராக, 'கிலாஃபத்' தை செயற்படுத்தத் தேவையான அறிவு பலம், உடற்பலம் பொருந்தியவராக இருக்கவேண்டும்.

"(அநாதைகளின் பொருளுக்கு பொருப்பாளராக ஏற்பட்ட நீங்கள், அவர்களின்) வாழ்க்கைக்கு ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமிருக்கும் (அவர்களுடைய) பொருட்களை, புத்திக் குறைவானவர்க(ளாக அவர்கள் இருந்தால் அவர்க)ளிடம் கொடுத்துவிடவேண்டாம்!"

(அல் குர்ஆன் 4:5)

"மேலும், அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அல்லாஹ் 'தாலூத்'தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார். (தற்க)வர்கள், 'நாங்களே அவரைவிட அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்களாக இருக்க, எங்கள் மீது அவருக்கு எவ்வாறு அரசுரிமை ஏற்படும்? (அரசுப் புரியத் தேவையான) செல்வ வளத்தையும் அவர் கொடுக்கப்படவுமில்லை' என்று கூறினர். (அதற்கு) 'நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (அரசாட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்; அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் உங்களைவிட அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான். என்று அவர் கூறினார்.
(அல் குர்ஆன் 2:247)

"இன்னும், அவருடைய ஆட்சியை நாம் வலுப்படுத்தினோம், அவருக்கு (ஆழ்ந்து சிந்தித்து செயல்படும் உறுதியான) அறிவையும், (விவகாரங்களைத் தீர்க்கும்) தெளிவான சொல்லாற்றலையும் கொடுத்தோம்."
(அல் குர்ஆன் 38:20)

"(தற்க)வர், "இந்தப் பூமியின் களஞ்சியங்களின் மீது (நிர்வாகியாக) என்னை ஆக்கிவிடும்; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்கக் கூடியவன்; நன்கறிந்தவன்' என்று கூறினார்"
 (அல் குர்ஆன் 12:55)

"மேலும் (யுத்த) அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால் (உடனே) அவர்கள் அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள்". 
(அல் குர்ஆன் 4:83)

"அறிந்தவர்களும், அறியாதோரும் சமமாவார்களா?"
(அல் குர்ஆன் 39:6)

"(விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்!" (4)  
(அல் குர்ஆன் 4:58)

12. அரசியல் சாசன அடிப்படை விதிகள்

இவ்வரசாங்கத்தின் அரசியல் சாசனத்தின் அடிப்படை விதிகள் பின்வருமாறு:

() "விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள்; (அவனது) தூதருக்கும் கீழ்படியுங்கள். இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலை)வர்களுக்கும் கீழ்படியுங்கள்; ஆனால், யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால், அதனை அல்லாஹ்விடமும் (அவனது) தூதரிடம் திருப்பி (ஒப்படைத்து)விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்) மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்."  
(அல் குர்ஆன் 4:59)

இவ்வசனம் ஆறு அரசியல் சாசன விதிகளை விளக்குகின்றது:
1.    இறைவனின், இறைத்தூதரின் 'இதாஅத்' (பின்பற்றுதல், கீழ்படிதல்) மற்றெல்லாவற்றையும் விட முன்னுரிமை பெறும்!
2.    ஆட்சியாளார்களுக்கு கீழ்படிவது என்பது அல்லாஹ், அல்லாஹ்வின் தூதரின் இதாஅத்தை ஒட்டி அமையவேண்டும்.
3.    ஆட்சியாளார்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பர்.
4.    மக்கள் ஆட்சியாளர்களோடு, ஆட்சியோடு முரண்படலாம்.
5.    முரண்பாடு தோன்றும்போது அல்லாஹ், அவனுடைய தூதர் இருவரிடம் மட்டுமே தீர்ப்பினைத் தேடவேண்டும்.
6.  'கிலாஃபத்' அமைப்பின் கீழ் ஆட்சியாளர், பொதுமக்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க சுதந்திரமான அமைப்பொன்று தேவை!

() அல்லாஹ்(தா'ஆலா) விதித்துள்ள எல்லைகளுக்கு உட்பட்டு அரசு நிர்வாகம் (Executive) இயங்கவேண்டும். இறைவன் மற்றும் இறைதூதருடைய சட்டங்களை நிறைவேற்றுவதையே தனது தலையாய குறிக்கோளாக கொள்ளவேண்டும். அதற்கு மாற்றமான, இறை நிராகரிப்பின் கீழ் வரும் எதையும் செய்வதை தனது கொள்கையாகக் கொள்ளக்கூடாது. (அதைப்பற்றிய குர்ஆனிய விளக்கங்களை பிரிவு 3,5 மற்றும் 9ல் காணலாம்) அத்தோடு, உயர்மட்ட நிர்வாக அமைப்பு 'ஷூறா' அமைப்பைக் கலந்தாலோசித்தே எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். (பிரிவு 10ல் விளக்கியுள்ளது போல) எனினும் தேர்வு மற்றும் ஆலோசனை பற்றிய தெளிவான தீர்க்கமான விளக்கங்களை, குர்ஆன் கொடுக்கவில்லை. இது விஷயத்தில் சூழ்நிலைக்குத் தக்கவாறு விதிகளை அமைத்துக் கொள்ள அனுமதிக்கும் வகையில் சுதந்திரமாக விடப்பட்டுள்ளது.

() சட்டத்துறை (Legislature) 'ஷூறா' அடிப்படையிலானதாக (Consultative Body) அமையவேண்டும் (பார்க்க பிரிவு 10). ஆனால் சட்டமியற்றும் அதன் அதிகாரங்கள் பிரிவு 3 மற்றும் பிரிவு 5-இல் விளக்கப்பட்டுள்ளவற்றிற்கு உட்பட்டு அமைய வேண்டும். எந்தெந்த விஷயங்களில் இறைவனும், இறைத்தூதரும் தெளிவான சட்டங்களை வழங்கியுள்ளார்களோ அவற்றை 'சட்டத்துறை' விளக்கங்கள் அளித்து நிறைவேற்ற, அமல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும். அவற்றில் அணுவளவு கூட மாற்றம் செய்ய அனுமதியில்லை. தெளிவான சட்டங்கள் இல்லாத விஷயங்களில் இஸ்லாமிய மையக்குறிக்கோள் மற்றும் பொதுவான நெறிமுறைகளுக்கு முரண்படாத வகையில் சட்டமியற்றலாம். அவற்றிற்கான சட்டங்கள் தெளிவாக்கப் படாததே, சூழ்நிலை மற்றும், இறைநம்பிக்கையாளர்களின் நலன்களுக்கு உகந்தவாறு சட்டங்களை இயற்ற உள்ள அனுமதியை காட்டுகின்றது.

() நீதித்துறை (Judiciary) எந்த விதமான 'தலையீடுகளும்' இல்லாததாக இருக்க வேண்டும். ஏனெனில் குடிமக்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கிடையிலான பிரச்சனைகளையும் அது பாரபட்சமின்றி தீர்க்க வேண்டியுள்ளது. பிரிவு 3 மற்றும் பிரிவு 5-இல் விளக்கப்பட்டுள்ள விதிகளை அது அப்போது கவனமாக பின்பற்ற வேண்டியிருக்கும். எந்த வகையான 'சார்பும்' இல்லாமல் நடுநிலைமையோடு சத்தியம், நீதிக்கு ஒப்ப அது தீர்ப்புகளை வழங்க வேண்டும்.

"ஆகவே, அல்லாஹ் (உமக்கு) இறக்கிவைத்ததைக் கொண்டு அவர்களுக்கிடையில் (நபியே!) நீர் தீர்ப்பளிப்பீராக! இன்னும் உண்மையிலிருந்து உம்மிடம் வந்ததை புறக்கணித்துவிட்டு, அவர்களுடைய மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்!"
(அல் குர்ஆன் 5:48)

"ஆகவே நீர் மனிதர்களுக்கிடையில், சத்தியத்தைக் கொண்டு தீர்ப்புச் செய்வீராக! மனோ இச்சையைப் பின்பற்றவேண்டாம். (பின்பற்றினால்), அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் வழிதவறச் செய்துவிடும்". 
(அல் குர்ஆன் 38:26)

13. அரசாங்கத்தின் நோக்கம்

இவ்வரசாங்கம் இரண்டு உன்னதமான நோக்கங்களுக்காக நிறுவப்பட வேண்டும். முதலாவது மனித வாழ்வில் நீதி நிலை நிறுத்தப்படவேண்டும். அநீதி அக்கிரமம் இல்லாது ஒழிய வேண்டும்.

"நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களை தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்தோம்; அவர்களுடன் வேதத்தையும், தராசையும்(5) நாமே இறக்கினோம், மனிதர்கள் நீதியைக் கொண்டு நிலைத்திருப்பதற்க்காக; இன்னும், இரும்பையும்(6) இறக்கினோம்; அதில் (போருக்கு வேண்டிய) கடுமையான சக்தியும், மனிதர்களுக்குப் பயன்களும் இருக்கின்றன. இதன்மூலம் தனக்கும், தன்னுடைய தூதர்களுக்கும் மறைவான உதவி செய்வோர் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வதற்க்காகவும் (இவ்வாறு செய்துள்ளான்). நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்." 
(அல் குர்ஆன் 57:25)

இரண்டாவது, அரசினுடைய ஆற்றலைக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டவேண்டும். ஜக்காத்தினை முறைப்படுத்த வேண்டும். இவை இஸ்லாமிய வாழ்வின் ஆதாரங்களாகும். நன்மையை அதிகப்படுத்தவேண்டும். இது உலகில் இஸ்லாம் வந்ததற்க்கான முதல் நோக்கமாகும். தீமையை அடக்கி ஒடுக்க வேண்டும். இது இறைவனுக்கு மிகவும் வெறுப்பான ஒன்றாகும்.

"அவர்கள் எத்தகையோரென்றால், நாம் அவர்களுக்கு பூமியில் (காரியங்களை நிர்வகிக்கும்) ஆற்றலை ஏற்படுத்திக்கொடுத்தால், அவர்கள் தொழுகையை முறையாக நிறைவேற்றுவார்கள்; ஜக்காத்தையும் கொடுத்து வருவார்கள்; நன்மையை ஏவி தீமையை விட்டும் விலக்குவார்கள்; மேலும் சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது."
(அல் குர்ஆன் 22:41)

14. அடிப்படை உரிமைகள்

இவ்வரசின் கீழ் வாழும் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத மக்கள் ஆகியோரின் உரிமைகள் இவை! இவற்றில் வரம்புமீறாமல் கவனமாகப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். (7)

() உயிர் பாதுகாப்பு:
"மேலும், அல்லாஹ் துடுத்துள்ள எந்த உயிரையும் உரிமையின்றிக் கொலைசெய்யாதீர்கள்; எவரேனும் அநீதியிழைக்கப்பட்டவராக கொலை செய்யப்பட்டுவிட்டால், (பழிவாங்க) அவனுடைய வாரிசுக்கு நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம்; ஆகவே, (பழிவாங்க) கொலை செய்வதில் அவன் வரம்பு கடந்துவிட வேண்டாம்; நிச்சயமாக (கொலையுண்டவரின் வாரிசாகிய) அவர் (நீதியைக் கொண்டு) உதவி செய்யப்பட்டவராவார்".
(அல் குர்ஆன் 17:33)
() சொத்துக்கள் பாதுகாப்பு:
"மேலும், உங்களுடைய செல்வங்களை உங்களுக்கிடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள்; நீங்கள் அறிந்துகொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் உண்ணுவதற்க்காகநீங்கள் அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள்".
(அல் குர்ஆன் 2:188)

() மானம் மரியாதைக்குப் பாதுகாப்பு:
"விசுவாசிகளே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்யவேண்டாம்..... (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம்..... உங்களில் சிலர் சிலரை குறைக் கூறவும் வேண்டாம்; உங்களில் சிலர் சிலரைப் பட்டப் பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். (எவருடைய குறைகளையும்) நீங்கள் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருக்கவும் வேண்டாம்; உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம்".
(அல் குர்ஆன் 49:11, 12)

() தனிப்பட்ட வாழ்விற்குப் (Privacy) பாதுகாப்பு:
"விசுவாசங்கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத (வேறு) வீடுகளில் (நீங்கள் நுழையும் அவசியம் ஏற்பட்டால் அவ்வீடுகளில் உள்ளவர்களிடம்) நீங்கள் (மூன்று முறை) அனுமதி கோரி, அவ்வீடுகளில் உள்ளோருக்கு ஸலாம் கூறாதவரை (அவற்றில்) நுழையாதீர்கள்".


(அல் குர்ஆன் 24:27)

"பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்
(அல் குர்ஆன் 49:12)
() அநீதிக்கெதிராக குரல் கொடுக்கும் உரிமை:
"அநீதமிழைக்கப்பட்டவரைத் தவிர, வார்த்தையில் தீயதை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்கிறவனாக, நன்கறிந்தோனாக இருக்கின்றான்".
(அல் குர்ஆன் 4:148)

() நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் உரிமை; அதில் விமர்சனமும் அடங்கியுள்ளது:

"இஸ்ராயீலின் மக்களில் நிராகரித்தவர்கள், தாவூத், மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டுவிட்டனர். ஏனென்றால், அவர்கள் மாறுசெய்து கொண்டும், வரம்பு மீறுபவர்களாகவும் இருந்தார்கள்.
அவர்கள் தாம் செய்து கொண்டிருந்த வெறுக்கப்பட்ட (செயல்களை) விட்டும் ஒருவரையொருவர் தடுக்காதவர்களாக இருந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தது நிச்சயமாக மிகக் கெட்டதாகும்."
(அல் குர்ஆன் 5:78-79)

"பின்னர் அவர்களுக்கு எதுபற்றி நினைவுபடுத்தப்பட்டதோ அதை அவர்கள் மறந்து (மீன்பிடிக்க முற்பட்டு) விட்டபோது தீமைசெய்வதிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தோரை நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக்கொண்டோம்".
(அல் குர்ஆன் 7:165)

"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயங்களில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகின்றீர்கள்; தீயதை விட்டும் தடுக்கின்றீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளீர்கள்....!"  
(அல் குர்ஆன் 3:110)

() கூடும் உரிமை (Freedom of Association) ஆனால் அது நன்மையான காரியத்திற்க்காக இருக்க வேண்டும். சமூகத்தில் பிள்வு, அடிப்படை விஷயங்களில் வேறுபாட்டினை ஏற்படுத்துவதற்க்கான கருவியாக இருக்கக்கூடாது.

"இன்னும், (விசுவாசங்கொண்டோரே!) உங்கள் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும்; அவர்கள்தாம் வெற்றிபெற்றோர்.
மேலும், தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிக்கொண்டு, (கருத்து) வேறுபட்டுப் போனார்களே அத்தகையோரைப்போல நீங்களும் ஆகிவிட வேண்டாம்; அத்தகையோருக்கு மகத்தான வேதனை உண்டு."


(அல் குர்ஆன் 3: 104, 105)

() சுயவுரிமை (சொந்த விருப்பு, வெறுப்பு)க்கான சுதந்திரம்:
"(சத்திய இஸ்லாம்) மார்க்கத்தில் எத்தகைய நிர்பந்தமுமில்லை."
(அல் குர்ஆன் 2: 256)

"மேலும், உமதிரட்சகன் நாடியிருந்தால், பூமியிலுள்ள அனைவருமே முற்றிலும் ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே மனிதர்கள் அனைவரும் முஃமின்களாகிவிட வேண்டுமென்று நீர் நிர்ப்பந்திக்கிறீரா?" 
(அல் குர்ஆன் 10:99)

"இன்னும், சீர்குலைவு (விளைவிப்பது) கொலையைவிட மிகக் கொடியதாகும்!"(8)
(அல் குர்ஆன் 2:191)

() மார்க்கத்தில், தான் விரும்பியதை பின்பற்றும் உரிமை:
"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்!"
(அல் குர்ஆன் 6:108)

மார்க்க விஷயத்தில் நல்ல முறையில் அறிவு ரீதியான விவாதங்கள் நடத்தலாம் என்று குர்ஆன் தெளிவாக்குகின்றது.

"(விசுவாசிகளே!) நீங்கள் வேதத்தையுடையோர்களுடன் அழகிய முறையிலே அன்றி தர்க்கிக்க வேண்டாம்; (ஆயினும்) அவர்களில் அநியாயம் செய்தோர் தவிர; (அவர்களுடன் தர்க்கித்தால்), 'எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்புகின்றோம்; எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே; மேலும், நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்படிந்து நடப்பவர்கள்' என்று கூறுங்கள்."
(அல் குர்ஆன் 29:46)

() ஒவ்வொருவரும் தனது செயல்களுக்கே பொறுப்பாளியாவர். இன்னொருவரின் செயலிற்க்காக இவர் பிடிக்கப்படமாட்டார்.

"(அதாவது, குற்றம் செய்ததற்க்காக பாவச்சுமையை) சுமக்கக்கூடியது எதுவும் மற்றொரு (ஆத்மாவின் பாவச்) சுமையைச் சுமக்காது." (9) 
(அல் குர்ஆன் 53:38)

மேலும் பார்க்க (6:64, 17:15, 35:18, 39:7)

() எந்த வித காரணமும் இல்லாமல், யார்மீதும் நீதிக்குப் புறம்பாக சட்டநடவடிக்கை கூடாது:
விசுவாசிகளே!, (ஃபாஸிக் எனும்) தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டுவந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தார்க்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதிருப்பதற்க்காக (அதனைத் தீர்க்க விசாரணை செய்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால்) பின்னர் நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே கைசேதப்படக் கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள்." 
(அல் குர்ஆன் 49:6)

"(நபியே!) எதைப்பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! நிச்சயமாக, செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் அதனைப்பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கிறது." 
(அல் குர்ஆன் 17:36)

விசுவாசிகளே!... மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறு, நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்."
(அல் குர்ஆன் 4:58)

(ஒள) தேவையுடையோர், எளியோர்க்கு வாழ்விற்குத் தேவையான பொருள்கள் அளிக்கப்படவேண்டும்:
"இன்னும், அவர்களுடைய செல்வங்களில் கேட்போருக்கும், கேட்காதோருக்கும் உரிமையுண்டு"
(அல் குர்ஆன் 51:19)

() அரசு தனது குடிமக்களை வகுப்புவாரியாகப் பிரித்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளக்கூடாது:
"நிச்சயமாக ஃபிர்அவ்ன் பூமியில் (மிகவும்) பெருமை கொண்டு, அதிலுள்ளவர்களைப் பல பிரிவினர்களாக்கி, அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண்மக்களை அறுத்(துக் கொலை செய்)தான்; மேலும் அவர்களின் பெண் மக்களை (உயிருடன் வாழ) விட்டுவைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்பவர்களில் (ஒருவனாக) இருந்தான்."
(அல் குர்ஆன் 28:4)

15. குடிமக்கள் கடமைகள்

குடிமக்கள் மீது அரசுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.
() அரசுக்குக் கீழ்படிதல்:

"விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள்; (அவனது) தூதருக்கும் கீழ்படியுங்கள். இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலை)வர்களுக்கும் கீழ்படியுங்கள்."
(அல் குர்ஆன் 4:59)

() சட்டத்திற்கு முற்றிலும் அடிபணிதல், அமைப்பில் சீர்குலைவை ஏற்படுத்தாதிருத்தல்:

"பூமியில் (சமாதானம், அமைதி ஏற்பட்டு) அது சீர்திருத்தம் அடைந்த பின்னர், குழப்பத்தை உண்டு பண்ணாதீர்கள்!"
(அல் குர்ஆன் 7:85)

"அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் தொடுத்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிகின்றவர்களுடைய தண்டனையெல்லாம் (அவர்கள்) கொல்லப்பட வேண்டும்; அல்லது சிலுவையில் அறையப்படவேண்டும்; அல்லது அவர்களின் கைகளும் அவர்களின் கால்களும் மாறாக (மாறுகை மாறுகால்) துண்டிக்கப்படவேண்டும்; அல்லது நாடுகடத்தப் படுதல் வேண்டும்." (10)
(அல் குர்ஆன் 5:33)

() அரசுபுரியும் அனைத்து நன்மையான காரியங்களிலும் உறுதுணையாக இருக்க வேண்டும்:

"இன்னும், நன்மையிலும், இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்."

(அல் குர்ஆன் 5:2)

() தற்காப்புக்காக நடைபெரும் சண்டைகளில், உயிரைக்கொண்டும், பொருளாதாரத்தைக் கொண்டும் அனைத்து உதவியையும் வழங்க வேண்டும்:

"விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? 'அல்லாஹ்வுடைய பாதையில் (போர் செய்ய) நீங்கள் புறப்படுங்கள்' என்று உங்களுக்குக் கூறப்பட்டால், (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் பூமியின்பால் சாய்ந்துவிடுகிறீர்களே.
(அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்ய அழைக்கப்பட்டு) நீங்கள் புறப்படாவிடில், மிகத் துன்புறுத்தும் வேதனையால் அவன் உங்களை வேதனை செய்வான்; அன்றியும், உங்களைப் போக்கி உங்களிடத்தில் (வேறு) சமூகத்தாரை கொண்டுவருவான்.
நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு உங்களின் செல்வங்களாலும், உங்களின் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யுங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாகும்."
(அல் குர்ஆன் 9:38-41)

16. வெளிநாடுகளோடு உறவு

இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து குர்ஆனுடைய வழிகாட்டுதல்களாவன:

() ஒப்பந்தங்களை மதித்து நடக்க வேண்டும். முறித்துக் கொள்ள நாடினால் முன்கூட்டியே தகவல் தந்துவிடவேண்டும்:

"இன்னும், வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்; (ஏனெனில்) நிச்சயமாக வாக்குறுதி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கிறது."
(அல் குர்ஆன் 17:34)

"இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யப்பட்ட உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அவற்றை உறுதிப்படுத்திய பின்னர், நீங்கள் முறித்து விடாதீர்கள்.
(மனிதர்களே! சத்தியங்களை துண்டிக்கும் விஷயத்தில்), உறுதியாக நெய்தபின் தான் நெய்ததை பல துண்டுகளாக்கி விட்ட பெண்ணைப்போன்று நீங்களும் ஆகி விடவேண்டாம்; ஒரு வகுப்பாரை விட மற்றொரு வகுப்பார் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருக்கிறார்கள் எனும் காரணத்தால், உங்கள் சத்தியங்களை ஏமாற்றி மோசடியாக உங்களுக்கிடையில் எடுத்துக் கொள்கிறீர்கள்; அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதைக் கொண்டுதான்; இன்னும், எதில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதை மறுமைநாளில் நிச்சயமாக அவன் உங்களுக்குத் தெளிவாக்குவான்."
(அல் குர்ஆன் 16:91, 92)

"ஆகவே அவர்கள் (தங்களுடைய உடன்படிக்கையின்படி) உங்களுடன் உறுதியாக இருக்கும் வரையில், நீங்களும் அவர்களுடன் உறுதியாகவே இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையோரை நேசிக்கிறான்."
(அல் குர்ஆன் 9:7)

"(ஆயினும்) இணைவைத்துக் கொண்டிருப்போரோடு நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டு, பிறகு யாதொன்றையும் உங்களுக்குக் குறைவுசெய்யாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றனரோ அத்தகையோரைத்தவிர; அவர்களின் உடன்படிக்கையை அதன் தவணைவரையில் அவர்களுக்குப் பூர்த்தியாக்கி வையுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையோரை நேசிக்கிறான்."
(அல் குர்ஆன் 9:4)

"(எனினும்) அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ, (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும்; எந்த சமூகத்தாருக்கும், உங்களுக்குமிடையில் உடன்படிக்கை உள்ளதோ அந்த சமூகத்தாரைத் தவிர, (அவர்களுக்கு விரோதமாக உதவி செய்வது கூடாது) மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்க்கிறவன்."
(அல் குர்ஆன் 8:72)

"மேலும், ஏதாவது ஒரு கூட்டத்தினரிடமிருந்து துரோகத்தை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாக(வே அவ்வுடன்படிக்கையை) அவர்கள் பால் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் துரோகம் செய்வோரை நேசிக்கமாட்டான்."(11)
(அல் குர்ஆன் 8:58)

() நடவடிக்கைகளில் நேர்மை, நாணயம்:
"நீங்கள் உங்கள் சத்தியங்களை, உங்களுக்கிடையே (சதி, துரோகம்) ஆகியவற்றுக்கு காரணமாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்." (12)
(அல் குர்ஆன் 16:94)

() நாடுகளுக்கிடையே நீதி:
"முஃமின்களே!.... எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, உங்களை நீதி செய்யாமல் இருக்க தூண்டிவிட வேண்டாம்..."
(அல் குர்ஆன் 5:8)

() போரின்போது எத்தரப்பிலும் சேராத நாடுகளின் விஷயத்தில் கவனமுடன் இருத்தல்:
"அவர்கள் புறக்கணித்து விட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாக) பிடித்துக் கொள்ளுங்கள். (தப்பியோட முயன்றால்) கொல்லுங்கள்.
ஆனால், எவர்களுக்கும் உங்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ அவர்களைத் தவிர."
(அல் குர்ஆன் 4:89, 90)

() சமாதானப் போக்கு:
"அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக!"
(அல் குர்ஆன் 8:61)

() பூமியில் ஃபஸாது செய்வதைவிட்டும், அட்டூழியத்தை விட்டும் விலகியிருத்தல்:
"அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களை) பெருமைப்படுத்திக் கொள்ள விரும்பாதிருப்பவர்களுக்கும், சீர்குலைவை உண்டாக்க விரும்பாதிருப்பவர்களுக்குமே நாம் சொந்தமாக்கி வைப்போம். ஏனெனில், இறையச்சமுடையவர்களுக்கே மேலான முடிவு உண்டு."
(அல் குர்ஆன் 28:83)

() எதிராளியாக இல்லாதவர்களோடு நட்பு பேணல்:
"மார்க்க விஷயத்தில் உங்களோடு போராடாமலும், உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்வோரை நேசிக்கிறான்."
(அல் குர்ஆன் 60:8)

() நன்மை செய்வோரோடு நல்லவிதமான போக்கு:
"நன்மைக்கு நன்மையைத் தவிர வேறு கூலி உண்டா?"
(அல் குர்ஆன் 55:60)

() வரம்பு மீறி நடப்பவர்களோடு அதே அளவு வரம்பு மீறி நடத்தல்:
"எவரேனும் உங்களுக்கு எதிராக வரம்பு மீறி நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்புமீறியுள்ளானோ, அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்! அல்லாஹ் இறையச்சம் உடையோருடந்தான் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."
(அல் குர்ஆன் 2:194)

"நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அதே அளவிற்கே நீங்களும் தண்டியுங்கள், (அதனை பொறுத்துக் கொண்டு) பொறுமையாக இருந்தால், நிச்சயமாக அதுவே பொறுமையாளர்களுக்கு மிக்க மேன்மையுடையதாகும்."
(அல் குர்ஆன் 16:124)

"இன்னும், தீமைக்கு கூலி அதைப்போல் தீமையே ஆகும். ஆனால், எவர் மன்னித்து சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது.
எனவே, எவர்கள் அநியாயம் செய்து நீதி இன்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீதுதான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது."
(அல் குர்ஆன் 42:40-42)
தொடர்ச்சி மூன்றாம் பாகத்தில் ...

குறிப்புகள்

1.    'பிதானத்துன்' 'வலீஜத்துன்' என்பதுன்  பொருளாவது:
'நெருக்கமான, முக்கியமாகக் குறிப்பிடத்தகுந்த நண்பன், அவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அதிமுக்கிய காரியங்களையும் ஒப்படைக்கத் தகுந்தவன்'. அல்லாமா திமக்'ஷரி (கி. பி. 1144, ஹிஜ்ரி 538) அல்கஷ்ஷாஃப் பாகம்:1 பக்கம்: 162 பயிஹ்ஹா பதிப்பகம், எகிப்து, ஹிஜ்ரி 1343.

2.   'வலீஜத்துன்' என்பதன் பொருளை முன்பே கண்டோம். 'அர்ராகிப் அஸ்ஃபிஹானி' கூறும் பொருளாவது: தனது குடும்பத்தைச் சாராத ஒருவனை தனது முழு நம்பிக்கைக்கு உரியவனாக ஆக்கிக்கொண்டால், அவன் 'வலீஜா' எனப்படுவான். ஒரு குலத்தைச் சேராத ஒருவன் அக்குலத்தாரோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தால் 'ஃபுலானுன் வலீஜத்துன் ஃபில் கவ்ம்' என்று கூறப்படும்.
 "முஃப்ரதாது ஃபீ தரீபில் குர்ஆன்" கைரிய்யா பதிப்பகம், எகிப்து, ஹிஜ்ரி 1322.

3.    புகழ்பெற்ற ஹனஃபீ சட்டவல்லுனர் அபுபக்கர் அல்ஜஸ்ஸாஸ் (ஹி 370 கி. பி. 980) இவ்வசனத்திற்கு விளக்கம் கூறுவதாவது:

"அகராதியின் படி, யாரெல்லாம் பின்பற்றப்படுகிறாரோ அவர் சத்தியவழியில் இருந்தாலும், அசத்தியத்தின் வழியில் இருந்தாலும் இமாம் என அழைக்கப்படுவார். ஆனால் இவ்வசனத்தில், பின்பற்றுவதற்கு முழுத்தகுதி படைத்தவன் தான் 'இமாம்' என குறிப்பிடப்படுகின்றார். அப்படிப் பார்க்கையில் உயரிடத்தில் உள்ளோரான நபிமார்கள், பின்பு நேர்வழி நேர்வழி நடந்த கலீஃபாக்கள், ஸாலிஹான உலமாக்கள், நீதிபதிகள் போன்றோரை இது குறிக்கும்."

அதன் பின்பு அவர்கள் எழுதுகிறார்கள்.

"ஒரு அநியாயக்காரன் நபியாக முடியாது! நபியின் பிரதிநிதியான கலீஃபா அல்லது நீதிபதியாகவும் முடியாது. அதுபோன்றே அவன், பேச்சுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற அந்தஸ்தில் உள்ள ஆட்சிப்பொறுப்பிற்கும் வரவியலாது. ஒரு பாவியின் தலைமை 'பாதிலானது' அவன் கலீஃபாவாக முடியாது. தன்னைத்தானே அவன் கலீஃபாவாக பிரகடனப்படுத்திக் கொண்டாலும் அவனைப் பின்பற்றுவதோ, அவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதோ பொது மக்கள் மீது கடமையில்லை"

அஹ்காமுல் குர்ஆன், பக்கம்: 4, பக்கம்:80

பஹிய்யா பதிப்பகம், எகிப்து, ஹிஜ்ரி 1347.

4.   "பொருப்பான பதவிகளில் தகுதிவாய்ந்த ஆட்களே நியமிக்கப்படுவர்" – ஆலூஸி
றூஹுல் 'ஆனி பாகம்:5, பக்கம்:58
முனீரிய்யா பதிப்பக வெளியீடு, எகிப்து, ஹிஜ்ரி 1345.

5.   "மீஜான்" என்றால் "நீதி ஆகும்" என குர்ஆன் விரிவுரையாளர்களான முஜாஹித், கதாதா போன்றோர் கருத்து கூறியுள்ளனர். இப்னு கஸீர், தஃப்சீருல் குர்ஆனில் அழீம் பாகம்:4 பக்கம்:314.
முஸ்தஃபா முஹம்மது பதிப்பகம், எகிப்து, கி. பி. 1937.

6.   'இரும்பு' என்பது இங்கு அரசியல் வல்லமையைக் (ஆட்சிபலம்) குறிக்கும். மக்கள் சதி செய்யும்போது, இறைவழியை புறக்கணிக்கும் போது, அவர்களை ஒடுக்க 'வாள்' வலிமை பயன்படுத்தப்பட வேண்டும்.
இமாம் ராஜி மஃபாதீஹுல் கய்ப் - பாகம்:8, பக்கம்:101
ஷர்ஃபிய்யா பதிப்பகம்: எகிப்து, ஹிஜ்றி 1324.

7.   அடிப்படை உரிமைகள் பற்றி மேலும் அறிய பார்க்க: நூலாசிரியரின் 'தஃஹீமாத்" பாகம்: 3. தலைப்பு: மனிதனின் அடிப்படை உரிமைகள். (IFT வெளியீடாக தமிழிலும் வெளிவந்துள்ளது).

8.   'ஃபித்னா' என்றால் ஒருவனைக் கட்டாயப்படுத்தி தந்து கொள்கையை ஏற்கும்படி செய்தல்.
இப்னு ஜரீர் பாகம்:2, பக்கம்: 111.

9.   "அதாவது ஒரு மனிதன் எத்தகைய குற்றம் செய்கிறானோ, அதற்கு அவன் மட்டுமே பொறுப்பாவான். அவனுக்கு பதிலாக வேறொருவன் பிடிக்கப்படமாட்டான். ஒரு மனிதன் மீது அவன் செய்யாத (வேறொரு மனிதன் செய்த) குற்றம் சுமத்தப்படமாட்டாது".
இப்னு ஜரீர் பாகம்: 8, பக்கம்: 83.

10.  நாட்டில் கொள்ளை, களவு புரிவோர், ஆயுதந்தாங்கி அமைதிக்குப் பங்கம் விளைவிப்போரைக் குறிக்கும் என்பது ஃபுகஹாக்களின் கருத்து.
அல்ஜஸ்ஸாஸ் பாகம்: 2; பக்கம்: 493

11.   அவர்களுடனான ஒப்பந்தத்தை அல்லது உடன்படிக்கையை ரத்துசெய்துகொள்ள எண்ணினால் அவர்களுக்கு தகவல் தந்துவிடவும்; ஏனெனில் ஒப்பந்தம் இனி இல்லை என்பதை இருதரப்பாரும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு எதிராக நீங்கள் ஏதாவது செய்ய முற்படும்போது 'ஒப்பந்தம் உள்ளதே!" என்று அவர்கள் ஏமாந்து இருந்து விடக்கூடாது.
அல்ஜஸ்ஸாஸ் பாகம்: 3; பக்கம்: 83

12.  ஏமாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் உடன்படிக்கை செய்யாதீர்கள். ஒப்பந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டு அவர்கள் அமைதி காக்க அதனைத் தவறாகப்பயன்படுத்தி நீங்கள் தாக்குதல் தொடுக்கக்கூடாது.
அல்ஜஸ்ஸாஸ் பாகம்: 14; பக்கம்: 112

No comments:

Post a Comment