Sunday, June 19, 2016

ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம் - பாகம்: 2

ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம்

பாகம் - 2

-    கலாநிதி ஸஃபர் பங்காஷ்

தமிழில்: உவைஸ் அஹ்மது




ஹரமின் புனிதத்துவமும் பாதுகாப்பும்:

ஹஜ் என்பது உம்மத்தின் வருடாந்திர சம்மேளனம். கஅபாவை இலட்சோபலட்ச முஸ்லிம்கள் வலம் வருவதே (தவாஃப்) ஒரு மாபெரும் பேரணிதான். அதில் அவர்கள், ஒரே அதிகாரச்சக்தியான அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலாவைத் தவிர்த்த மற்றெல்லா சக்திகளையும் மறுத்து உரைக்கின்றனர். உண்மையில், ஹஜ்ஜின் கிரியைகள் அனைத்துமே உம்மத்தின் பேரணிதான் என வகைப்படுத்தலாம். சஃபா-மர்வா குன்றுகளுக்கு இடையிலான ஓட்டத்தை (சயீ) வேறெப்படி வருணிப்பது? உயர்ந்து நிற்கும் ஜபலுர் ரஹ்மாவின் கீழே அரஃபா பெருவெளியில் ஒன்று கூடுவது, ஒரு பேரணியே அன்றி வேறென்ன?

இறைநம்பிக்கையின் அடிப்படைத் தூண்களுள் ஒன்றுதான் ஹஜ். அதை வாழ்நாளில் ஒரு முறையேனும் நிறைவேற்ற வேண்டுமென்பது சகல முஸ்லிம்கள் மீதும் கடமையாகும். அப்பயணத்தை மேற்கொள்ள வசதியற்றோருக்கு மாத்திரமே விதிவிலக்கு உண்டு. இதுபற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

"மேலும், ஹஜ் செய்யுமாறு மக்களுக்கு பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் பயணம் செய்து உம்மிடம் வருவார்கள்; அவர்கள் ஒவ்வொரு ஆழமான கணவாயிலிருந்தும் வருவார்கள். அங்கு தங்களுக்கு நன்மையளிப்பவற்றை அவர்கள் காணட்டும். மேலும், அல்லாஹ் அவர்களுக்கு அருளிய கால்நடைகள் மீது அந்தக் குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயரைக் கூறட்டும் (மற்றும் அறுக்கட்டும்)."
(அல் குர்ஆன்: 27:28)

இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ள கருத்துச் சூழலானது, புனித இல்லத்துக்கு யாத்திரை செல்வோருக்காக அதைப் பாதுகாப்பான இடமாக ஆக்கும் நடவடிக்கையை ஒட்டியே அமைந்துள்ளது. என்வே, அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா கூறுகிறான்:

"மேலும் நினைவுகூறுங்கள், நாம் இந்த (இறை) இல்லத்தை மக்களுக்கு ஒரு ஒன்று கூடும் மையமாகவும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்....." 
(அல் குர்ஆன்: 2:125)

மற்றொரு வசனத்தில் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

"திண்ணமாக, மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் சரணாலயம் பக்காவில் (மக்கா) உள்ளதேயாகும், அருள்நலம் வழங்கப்பட்டதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டுதலாகவும் அது இருக்கிறது."
 (அல் குர்ஆன்: 3:96)

ஹஜ்ஜுக் காலத்தில் பாதுகாப்பும், அபயமும் அதிமுக்கியமானவை; அத்தியாவசியமானவை. எனவேதான் அல்லாஹ், தன் அளவிலா ஞானத்தாலும் கருணையாலும், அவற்றைப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கூட நீட்டித்திருக்கிறான். ஆம், புனித யாத்திரையின் போது பறவைகளையோ, பிற விலங்குகளையோ வேட்டையாடுதலை (அல்லது காயப்படுத்தலை) தடுத்து குர்ஆன் திட்டவட்டமான போதனையை வழங்குகிறது:

"இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் ஹஜ் மேற்கொள்ளும் நிலையில் வனவிலங்குகளைக் கொல்லாதீர்........."  
(அல் குர்ஆன்: 5:95)

அடுத்த வசனத்திலேயே இது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது:

"நீங்கள் ஹஜ் மேற்கொள்ளும் நிலையில் இருக்கும்வரை, நிலத்தில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது"  
(அல் குர்ஆன்: 5:96)

ஹஜ்ஜின் பாதுகாப்பு மற்றும் அபய அம்சங்கள் குர்ஆனில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகின்றன. அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா மீண்டும் அத்தியாயம் அல்-மாயிதாவில், இறை நம்பிக்கையாளர்களுக்கு பின்வருமாறு கட்டளையிடுகிறான்:

"இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் சின்னங்களையோ, சங்கைக்குறிய மாதத்தையோ, பலிப் பிராணிகளையோ, (அவற்றின்) அடையாள மாலைகளையோ அவமதிக்காதீர். இன்னும், இறைவனின் கிருபையையும் திருப்பொருத்தத்தையும் நாடிப் புனித இல்லம் (கஅபா) நோக்கிச் செல்வோரையும் (அவமதிக்காதீர்)...." 
(அல் குர்ஆன்: 5:2)

பாதுகாப்பு-அபயம் எனும் இரட்டை அம்சங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுவதற்குக் காரணம், ஹஜ்ஜானது உம்மத்தின் ஒற்றுமையையும், வேற்றுமையையும் குறித்து நிற்கிறது. இந்த உம்மத், ஆன்மீக வாழ்வை நோக்கிய தந்து பயணத்தில் இறைநம்பிக்கையின் மெய் வெளிப்பாடுகளை உணர்ந்துகொள்வதற்கு, பாதுகாப்பும் அபயமும் மிக்கதொரு சூழல் முதன்மை முக்கியத்துவம் கொண்டது. அத்தகையதொரு சூழலில்தான் உம்மத்தின் மொழியியல், கலாச்சார மற்றும் புவியியல் வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமை இணக்கத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த சிந்தனை இணக்கம் வளர்ந்து செயல் இணக்கத்துக்கு வழி வகுக்கும். இத்தகு குர்ஆனிய அடிப்படையிலேயே உலகில் சமத்துவத்தையும், நீதியையும் நிலை நாட்ட முடியும்.

ஆயிரக்கணக்கான இறைத்தூதர்களின் தூதுத்துவப் பணியைப் பொறுத்தவரை, அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலாவின் ஏக ஒருமையைப் பிரகடனஞ்செய்வதே அவர்கள் அனைவருக்கும் முதன்மைக் கடமையாக இருந்திருக்கிறது. மற்றெல்லா கடந்தகால, நிகழ்கால அதிகாரமும் தீர்க்கமாக, ஆணித்தரமாக நிராகரிக்கப்பட்டது. இதன் இயல்பான விளைவாக, ஷிர்க் என்பது (அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது) அல்லாஹ்வினால் மன்னிக்கப்படாத ஒரே பாவமாகி விடுகிறது. எனவே, ஒரு முஸ்லிம் இவ்வுலக விவகாரங்களிலிருந்து விலகி அல்லாஹ்வின் இல்லத்தை (கஅபா) நோக்கிச் செல்லும் புலம்பெயர்வாக (ஹிஜ்ரா) விளங்கும் ஹஜ்ஜானது, தெள்ளத் தெளிவாக இணைவைப்பவர்களை விட்டுப் பொறுப்புவிலகல் பிரகடனம் செய்யப்படும் சூழலிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இதுகுறித்து எவ்வித சந்தேகத்திற்கும் இடந்தராத வகையில் குர்ஆனியக் கட்டளைகள் அமைந்துள்ளன:

"மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சார்பாக மனிதர்கள் யாவருக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வும், அவனது தூதரும் இணை வைப்போரை (முஷ்ரிகீன்) விட்டுப் பொறுப்பு விலகி விட்டார்கள்.........."
(அல் குர்ஆன்: 9:3)

அல்லாஹ் பின்வருமாறு கட்டளையிடும் போது இந்தக் கருத்துப் பொருள் மேலும் ஆழமாக எடுத்துச் செல்லப்படுகிறது:

"இணை வைப்பவர்கள் அசுத்தமானவர்களே (நஜஸ்). எனவே, இந்த ஆண்டுக்குப் பிறகு அவர்கள் மஸ்தித் அல்-ஹரமை நெருங்க வேண்டாம்........"
(அல் குர்ஆன்: 9:28)

அன்று முதலே, இவ்வாறு மக்காவின் எல்லைகளுக்குள் இணை வைப்பவர்களுக்கு நுழைவு மறுக்கும் தடை தொடர்ந்து வருகிறது. இவ்வாறிருக்க, சவூதுக் குடும்பமோ, இந்தக் குர்ஆனிய விதியையும் அப்பட்டமாக மீறியுள்ளது. மக்காவுக்கான மாநகர வடிவமைப்புப் பெருந்திட்டம் அமெரிக்காவின் போர்ட்லாந்தில் (ஆரிகான்) உள்ள போர்ட்லாந்து மாகாண பல்கலைக் கழகத்தின் நகர்ப்புறத் திட்டமிடல் துறையிடமே ஒப்பந்தத்துக்கு விடப்பட்டுள்ளது. அத்துறைக்கு எகிப்திய முஸ்லிம் ஒருவரே தலைமை வகிக்கிற போதிலும், அவரது சகாக்களுள் பெரும்பாலானோர் முஸ்லிம் அல்லாதவர்களே. ஸியோனிஸ்டும், இணைப் பேராசிரியருமான ஒருவரும் அதில் அடக்கம். அந்த ஸியோனிஸ்டுப் பேராசிரியர், கடந்த சில வருடங்களில் பலமுறை சவூதி அரேபியாவுக்கு வந்து சென்றிருக்கிறார். அவர் 'கெளரவ முஸ்லிம்' பட்டம் கொடுக்கப்பட்டு மக்காவினுள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. மேலும், மெல்லிய 'இஸ்லாமியப்' போர்வையின் கீழ், அமெரிக்க-பிரிட்டிஷ் கட்டுமான கம்பெனிகளையும் தொழில்துறை ஆலோசனை நிறுவனங்களையும் மக்கா-மதீனாவில், ஏன் மஸ்ஜித் அல்-ஹரமிலேயே கூட, செயல்பட சவூதிகள் அனுமதித்திருப்பது மூலம், குர்ஆனியப் போதனைகளை அப்பட்டமாக அவமதித்துள்ளனர்.

சவூதுக் குடும்பம் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஹரமைனைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தது முதல், இரு புனிதத் தளங்களின் சேவகன் (ஃகாதிமுல் ஹரமைன்) எனும் பட்டத்தை தனக்குத் தானே வழங்கிக் கொண்டது. தற்போதைய மன்னர் ஃபஹது(8) சமீபத்தில் சூட்டிக்கொண்டது தான் இந்த 'சேவகன்' பட்டம். அவரது இஸ்லாத்துக்கு முரணான வாழ்க்கைப் பாணி - மது அருந்துதல், சூதாட்டம், விபச்சாரம் எனப் பலவும் வெளிச்சத்துக்கு வந்தன - பற்றிய விமர்சனம் அதிகரிப்பதாலும், அதன் விளைவாக அவரைச் சூழ்ந்துள்ள எதிர்மறை விளம்பரத்தாலுமே அவர் இதைச் செய்தார். கடந்த காலத்தில், 'ஹரமைனின் காப்பாளர்கள்' (ஹாஃபிழுல் ஹரமைன்) என்றே அடுத்தடுத்து வந்த சவூதி மன்னர்கள் தங்களை அழைத்துக் கொண்டிருந்தனர். யார் புனிதத் தலங்களைக் காத்துப் பராமரிக்கவேண்டும் என்பதுபற்றி திருக்குர்ஆன் தெளிவுபடக் கூறுகிறது:

"எவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு முறையாகத் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்சாமல் இருக்கின்றாரோ அத்தகையவரே இறை இல்லங்களைப் பராமரிப்பவராய் (அவற்றின் ஊழியர்களாய்) இருக்க முடியும்! அத்தகையோரே நேர்வழி நிற்பார்கள் என எதிர்பார்க்க முடியும்."
(அல் குர்ஆன்: 9:18)

தற்போதைய மன்னர் உட்பட சவூதி மன்னர்கள் அனைவருமே நியமமாகத் தொழுகையைப் பேணி, ஸ்கத்தை வழங்கி இன்னபிற வழிபாடுகளைச் செய்து வருகிறார்களென்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் 'அல்லாஹ்வைத் தவிர வெறெவருக்கும் அஞ்சாதிருத்தல்' என்ற நிபந்தனையைப் பூர்த்தி செய்வதில்லை.

பாகிஸ்தானியர், பங்களாதேஷியர், ஜோர்டானியர், மொராக்கோ நாட்டவர், இப்போது எகிப்தியர் என சவூதுக் குடும்பம் எப்போதும் தனது பாதுகாப்புக்கு வெளிநாட்டுக் கூலிப்படைச் சிப்பாய்களையே சார்ந்திருக்கிறது. (9) அதிலும் குறிப்பாக, மக்காவில் நிகழ்த்தப்பெற்ற படுகொலைக்குப் பிறகு, சவூதுக் குடும்பம் தனது பாதுகாப்புக்காக பெரும் படைப்பிரிவுகள் அடங்கிய எகிப்து மற்றும் மொராக்கோ துருப்புகளைக் கூலிக்கு அமர்த்தியுள்ளது. (10)
இந்த சவூது குடும்பம், இன்று இஸ்லாத்தின் இரண்டு மிகப்பெரும் எதிரிகளான அமெரிக்கா மற்றும் ஸியோனிஸ்டுகளின் நலங்களுக்கு முழுமையாக அடிபணிந்து சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. இதனால், ஹரமைனை நிர்வகிப்பதற்குச் சிறிதும் அருகதையற்றதாய் ஆகிவிட்டுள்ளது. அமெரிக்காவும், அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலும் தான் இன்று குஃப்ரு சக்திகளின் பிரதிநிதிகளாய் விளங்குகின்றன. அவையிரண்டும் தான், உலக அரங்கில் இஸ்லாமிய மீளெழுச்சியின் எவ்வித வெளிப்பாட்டையும் முறியடிக்கப் போவதாய் பகிரங்கமாக சூளுரைத்திருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொன்னால், உலக அளவில் அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், பிரான்சு, சோவியத் யூனியன், இந்தியா, சீனா முதலான குஃப்ரு சக்தியின் பிரதிநிதிகள் தங்களது இஸ்லாமிய எதிர்ப்புச் சிலுவை யுத்தத்தை நடத்துவதற்குக் கூட்டாளிகளாக சவூதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், மொராக்கோ, குவைத், ஈராக், பாகிஸ்தான், இந்தோனீசியா போன்ற முஸ்லிம் உலக அரசுகளுடன் கைகோர்த்துள்ளன. இந்த இஸ்லாமிய எதிர்ப்புச் சிலுவை யுத்தத்தில் சவூதுக் குடும்பமே முன்னணியில் நிற்கிறது - தனது பொருளாதார வளங்களைப் பயன்படுத்துவதிலும் சரி; அமெரிக்காவின் இராணுவ, அரசியல், பொருளாதார நலங்களுக்கு முழுமையாக அடிபணிந்து சேவையாற்றுவதிலும் சரி சவூதுக் குடும்பம் வெளிப்படுத்திவரும் இத்தகு நடத்தை குறித்த குர்ஆனின் கண்டனம் மிகத் தெளிவாக உள்ளது:

"அவர்களிடம் கூறுவீராக, 'அல்லாஹ்வை விடுத்து, உங்களுக்கு இழப்பையோ, லாபத்தையோ அளிப்பதற்குச் சக்தியற்றதற்கா நீங்கள் பணிவிடை செய்கிறீர்கள்?'"
(அல் குர்ஆன் 5:76)

முஸ்லிம்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் தங்களது பாதுகாப்பு நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டாம் எனக் கூறி அதை குர்ஆன் மிகத் தெளிவாகத் தடைசெய்துள்ளது (அல் குர்ஆன் 5:51). மேலும், "உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்கள் மற்றும் நிராகரிப்பவர்களுள் (காஃபிரூன்) எவர்கள் உங்களுடைய மார்க்கத்தைக் கேலிக்கும், விளையாட்டுக்கும் உட்படுத்துகிறார்களோ அவர்களை" உங்களது உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அது முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது (அல் குர்ஆன் 5:57). ஏன்?... ஏனெனில், அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

"திண்ணமாக, மர்யமுடைய குமாரர் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறுபவர்கள் சந்தேகமின்றி நிராகரித்தவர்களாகி விட்டார்கள். உண்மையில் மஸீஹ் இப்படித்தான் கூறியிருந்தார்: 'இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!' எவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறாரோ, திண்ணமாக அல்லாஹ் அவருக்குச் சுவனத்தைத் தடைசெய்திருக்கிறான். அவருடைய இருப்பிடம் நரகமாகும். ஆம், அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை. 'நிச்சயமாக, அல்லாஹ் மூவரில் மூன்றாமவன்' என்று கூறியவர்களும் திண்ணமாக நிராகரிப்பவர்களாகி விட்டார்கள். உண்மையில் ஒரே இறைவனைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை."

(அல் குர்ஆன்: 5:72, 73)

மேற்கண்ட வசனங்களிலிருந்து, எவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறார்களோ அவர்கள் ஷிர்க் வைக்கின்றனர் என்பதையும், அதனால் நிராகரிப்பவர்களாகி விடுகின்றனர் என்பதையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று தங்களை யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் பெரும்பாலான மக்கள் இந்த வகைப்பாட்டிலேயே அடங்குவர். அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கின்றனர்; அல்லாஹ்வின் தீனை (இஸ்லாம்) கேலிக்குரியதாக ஆக்குகின்றனர்; அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எதிராகக் கலகம் செய்து முஸ்லிம்கள் மீது கடும் பகைமை காட்டுகின்றனர். எனினும், இதுவெல்லாம் எதிர்பார்க்க வேண்டிய விடயம்தான். ஏனெனில், அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலாவே இறை நம்பிக்கையாளர்களுக்குப் பின்வரும் எச்சரிக்கையை குர்ஆனில் வழங்கியிருக்கின்றான்: "திண்ண்மாக மனிதர்களிலே யூதர்கள் (என்பதாக தங்களை நம்பிக்கொள்பவர்கள்) மற்றும் இணைவைப்பவர்கள் தான் இறைநம்பிக்கையாளர்களுக்கு மிகக் கடும் பகைவர்களாக இருப்பதை நீர் காண்பீர்....." (5:82). உண்மையில், அவர்களது பகைமை முஸ்லிம்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அல்லாஹ்வுக்கும் அவர்கள் பகைவர்தான். காரணம், அவர்கள் அல்லாஹ்வை நம்ப மறுக்கின்றனர்; பூமியில் சீர்கேட்டைப் பரப்புகின்றனர்; மற்றும், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றனர். ஆதலாலேயே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: "இறைநம்பிக்கை கொண்டோரே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்......" (60:1).

இவ்வாறிருக்க, நாம் சவூதுக் குடும்பத்தின் - குறிப்பாக, தற்போதைய ஆட்சியாளர் ஃபஹதின் தலைமையிலுள்ள அக்குடும்பத்தின் - சரித்திரப் பதிவேட்டை ஆய்வு செய்யும்போது, அது குஃப்ரு சக்திகளோடு நெருங்கி அணி சேர்ந்திருப்பதையும் அல்லாஹ்வின் எதிரகளுக்காக உழைத்து வருவதையும் காண்கிறோம். இன்று மேற்கத்திய ஊடகத்தில் இஸ்லாமும், முஸ்லிம்களும் வழமையாகவே ஏளனஞ் செய்யப்பட்டு வருகின்றனர். இஸ்லாத்தின் உயர்வுக்காகவும், அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கஸ் செய்வதற்காகவும் உழைக்கின்ற முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது விரோதம் குறித்து வெள்ளை மாளிகைத் தலைவரும் அவரது நிர்வாகமும் இரகசியங் காப்பதில்லை. எனினும், 'ஹரமைனின் பாதுகாவலர்கள்' என சுய பட்டம் சூட்டுக்கொண்டுள்ள இவர்களுக்கு அதில் தவறேதும் தெரிவதில்லை. அது மட்டுமல்ல, அமெரிக்க அங்கீகாரம் பெற்ற இஸ்லாத்தை முன்னிறுத்தவும் இவர்கள் கடினமாக உழைக்கின்றனர். மேலும், ஹஜ்ஜை அதன் அசல்நிலைக்கு மீட்டுக்காண விரும்பும் முஸ்லிம்களை - ஹஜ் என்பது உம்மத்தின் வருடாந்திர சம்மேளனமாக விளங்கி, அங்கு நிர்ப்பந்தமோ, அச்சமோ அற்றதொரு சூழலில் அனைத்துப் பிரச்சினைகளும் விவாதிக்கப்பட வேண்டும் என விரும்பும் முஸ்லிம்களை - தாக்கவும், கொலை செய்யவும் முனைந்துள்ளனர்.

'ஹரமைனின் பாதுகாவலர்கள்' என்ற தங்களது பட்டம் குறித்துத் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் மீதான அல்லாஹ்வின் கண்டனம், அன்று இறைத்தூதர் - அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - காலத்துக் குறைஷியர்களுக்குப் பொருந்துவது போன்றே, இன்று சவூதுக் குடும்பத்துக்கும் பொருந்தும். சவூதுக் குடும்பம், குறிப்பிட்ட சில இடங்களில் யாத்திரிகர்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்கி வருவதைப் பெரிதாக விளம்பரம் செய்கிறது. ஆனால், வழங்கப்படாத பல சேவைகளுக்காகத் தாங்கள் யானை விலை கட்டணம் வசூலிப்பது பற்றி மூச்சும் விடுவதில்லை. அந்தக் காலத்தில் யாத்திரிகர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வந்தது குறித்து குறைஷிகள் மிகுந்த கர்வம் கொண்டிருந்தனர். இவர்களை நோக்கி பின்வரும் குர்ஆனிய வசனங்கள் கூறுவதைக் கேளுங்கள்:

"ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவதையும், மஸ்ஜித் அல்-ஹராமை நிர்வகித்துப் பராமரிப்பதையும், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போராடும் ஒருவருக்கு (அவரது அந்தஸ்துக்கு) சமமாகக் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் பார்வையில் இவையிரண்டும் சமமாகமாட்டா. அல்லாஹ் அநியாயக்கார சமூகத்துக்கு (ழாலிமீன்) நேர்வழி காட்டுவதில்லை. எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி, தங்களது உடமைகளைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடியுள்ளார்களோ அவர்களே அல்லாஹ்வின் பார்வையில் மிக்க மேலானவர்கள்......."

(அல் குர்ஆன்: 9:19-20)

இது குறைஷிய கர்வத்துக்குப் பொருந்தும் அளவே சவூதுக் குடும்பத்தின் நடத்தைக்கும் பொருந்தும். ஆக, சவூதிகளும் அவர்களது உலகளாவிய அனுதாபிகளின் வலை பின்னலும், ஹரமைனின் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சவூதுக் குடும்பத்துக்கு அங்கீகார நியாயம் வழங்க முனைந்துள்ள அதேவேளை, அல்லாஹ்வின் தீர்ப்போ முற்றிலும் வேறுவிதமாக அமைந்துள்ளது.
சவூதுக் குடும்பம் மக்காவில் வைத்து ஹாஜிகளைப் படுகொலை செய்த விதமே, அறிந்து செய்த ஒரு புனிதக்கேடு தான். அவர்கள் அதனை செய்தது மூலம் ஹாஜிகளின் பாதுகாப்பான சூழலை நாசமாக்கியது மட்டுமின்றி, ஹரமின் புனிதத்தையும் இழிவுபடுத்தி விட்டனர். பாதுகாப்பு, புனிதத்துவம் இரண்டும் குர்ஆனியக் கட்டளைகளாகும். சவூதுக் குடும்பம் கடந்த காலத்தில் மக்கா, மதீனாவிலிருந்த புனிதத் தலங்களை இழிவுபடுத்திய மற்றும் இடித்துத் தரைமட்டமாக்கிய கொடுஞ்செயல்களுக்குப் பின்பும் குற்றச்சாட்டின்றி தப்பித்துக்கொண்டது போலவே, இம்முறையும் தப்பித்துக் கொள்ளுமா? ஒரு விதத்தில், சென்ற ஆண்டு ஹஜ்ஜின் போது சவூதுக் குடும்பம் இழைத்த கொடுங்குற்றத்திற்கான(11)  பொறுப்பில் உம்மத்துக்கும் பங்கு உண்டு. இந்த உம்மத் ஹரமைன் மீதான சவூதுக் கட்டுப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியும்; வரலாற்றுத் தலங்களின் புனிதத்துக்கு அவர்கள் ஏற்படுத்திய இழிவை எதிர்த்தும்; 1979 நவம்பர்-டிசம்பரில் மஸ்ஜித் அல்-ஹராம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் போராடியிருந்தால், அநேகமாக சவூதுக் குடும்பத்துக்கு இத்தகையதொரு கொடுங்குற்றத்தைப் புரிந்திடத் துணிவு பிறந்திருக்காது. சவூதுக் குடும்பத்தின் நடவடிக்கைகளும் கொள்கைகளும் உம்மத்துக்கு விடப்படும் பகிரங்கச் சவால்களாக விளங்குகின்றன. அவர்களின் கரங்களிலிருந்து ஹரமைனின் கட்டுப்பாட்டைப் பறித்தெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், மஸ்ஜித் அல்-அக்ஸாவை ஒத்த பேரபாயம் காத்திருக்கிறது. அதாவது, இஸ்லாத்தின் இரு மேலான புனிதத்தலங்கள் மீதுள்ள நேரடிக் கட்டுப்பட்டையும் முஸ்லிம்கள் இழக்கும் சாத்தியம் இருக்கிறது.

குறிப்புகள்:

8.    இப்புத்தகம் சவூதி அரேபிய மன்னர் ஃபஹதுடைய ஆட்சிகாலத்திலே எழுதப்பட்டது.
9.    தி இண்டிபென்டன்ட் (ஆங்.), லண்டன், டிசம்பர் 12, 1987 & ஜனவரி 2, 1988.
10.   கிரசண்ட் இன்டர்நேஷனல் (ஆங்.), தொ.16, எண்.14, டொராண்டோ, அக்டோபர் 1-15, 1987.
11.   சென்ற ஆண்டு என்பது, 1987 ஆம் ஆண்டு மக்காவில் வைத்து சவூதுப் படைகளால் ஹாஜிகள் படுகொலை செய்யப்பட்ட அச்சம்பவத்தைக் குறிக்கிறது.

Ø   "ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம்" எனும் இத்தலைப்பு டாக்டர் ஸஃபர் பங்காஷ் எழுதிய- "மக்கா படுகொலைகள் (1987): பின்னணியும் ஹரமைனின் எதிர்காலமும்" எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இக்கட்டுரையில் முதலில் கூறப்பட்டுள்ள அல்குர்ஆன் வசனத்தின் அத்தியாய எண் தவறானது(28).சரியானது 22:27என்பதே....திருத்திக்கொள்ளவும்.

    ReplyDelete