Tuesday, June 14, 2016

தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும் - பாகம்: 3

தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும்

பாகம்: 3

-     கலாநிதி யூஸுஃப் அல்-கர்ளாவி

- தமிழில்: அ. ஜ. முஹம்மது ஜனீர்




3.   தீவிரவாதத்தின் வெளிப்படையான அம்சங்கள்:

தீவிரவாதத்தின் முதலாவது வெளிப்படையான அம்சம், 'கண்மூடித்தனமான மத வைராக்கிய மனப்பான்மையாகும்'. இந்த மனப்பான்மை, ஒருவரைத் தனது அபிப்பிராயங்கள், விருப்பு வெறுப்புகள் மீது பிறரால் சகிக்க முடியாத அளவு பிடிவாத குணத்தை வளர்த்து விடுகின்றது; ஏனைய மானிடர்தம் நலங்கள் குறித்த தெளிவான பார்வையைக் கொண்டிருத்தலிலிருந்தும் நீதிநெறி, ஒழுங்கு முறைகளுக்கான அவசியத்தைப் புரிந்து கொள்வதிலிருந்தும் காலச் சூழல் பதிக்கும் செல்வாக்கினை விளங்கிக் கொள்வதிலிருந்தும், அவர்களைத் தடுத்து விடுகின்றது. இவ்வாறான மனிதர், தனது அபிப்பிராயங்களை பிறரது அபிப்பிராயங்களுடன் ஒப்பீடு செய்து காணும் வகையில் உரையாட மாட்டார். பல்வேறு அபிப்பிராயங்களுள் சிறந்தது எது எனக்கண்டு அதனைப் பின்பற்றக் கூடியதொரு சூழலை உருவாக்கிக் கொள்ளவும் மாட்டார். இவ்வாறானோர் மீது குற்றங்கள் சுமத்தும் இவர்களது எதிர் தரப்பாரைக் கணடனம் செய்வது போலவே, ஏனையோரின் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து அடக்கி ஒடுக்க முனையும் இவர்களது முனைவுகளையும் நாம் கண்டிக்கிறோம்.

உண்மையில் தான் மட்டுமே சரியானவர், பிறர் அனைவரும் தவறுகள் இழைப்போர் என்றும், மாற்றுக் கருத்துகளுடையோர் அறிவிலாதார், சுயநல விரும்பிகள் என்றும், மாற்று நடைமுறைகள் உடையோர் பணிவிலாதார், பாவம் செய்வோர் என்றும் ஆனால் நாங்களோ, தவறுகள் ஏதும் இழைக்காத தேவதூதர்கள், எங்களது வார்த்தைகள் தெய்வானுக்கிரகத்தால் எழுவன என்ற எண்ணத்துடன் உரையாடுவோரையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். நபிகளாரின் வார்த்தைகள், ஹதீஸ் என்பன தவிர்த்து, மனிதர்கள் கூறுவனவற்றில் ஏதும் ஒரு பகுதியை ஏற்கலாம்; ஏற்காது விடலாம் என முஸ்லிம் சமூகம் ஏற்றுள்ள முடிவுக்கு மாறாக இவர்களது போக்கு அமைந்துள்ளது. இவர்களுள் சிலர், மிகவும் சிக்கலான விவகாரங்களிலும் பிரச்சினைகளிலும் இஜ்திஹாதை ஆச்சரியமூட்டும் வகையில் முழு சுதந்திரத்துடன் பிரயோகித்து, அவை குறித்து தத்தம் எண்ணப்படி விசித்திரமான தீர்வுகளை அளிக்கவும் தயங்க மாட்டார்கள். என்றாலும் கூட, சமகால சிறந்த அறிஞர்கள், தனியாக அல்லது கூட்டமாக, அங்கீகாரம் பெற்ற மூலங்களிலிருந்து, அங்கீகாரம் பெற்ற முறைகளில் இஜ்திஹாத் பிரயோகம் மூலமாக தீர்மானங்கள் எடுப்பதை அவர்கள் மறுத்துரைப்பர். குர்ஆன், சுன்னாஹ் என்பனவற்றின் மீதும், அவற்றின் விளக்கங்கள் மீதும் கேலிக்கிடமான அபிப்பிராயங்களை வெளியிடவும் அவர்கள் தயங்குவதில்லை. அவர்கள் வெளியிடும் சில கருத்துகள், வழிவழியாக நமது முன்னோராலும், பின்னைய கால, சமகால அறிஞர்களாலும் ஆராய்ந்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு முரண்பட்டவையாகவும், எதிரானவையாகவும் கூட அமைந்துள்ளன. இவ்வாரான பொறுப்பிலா தன்மைக்குக் காரணம் அவர்கள், தம்மைத் தாம் அபூ பக்கர், உமர், அலீ, இப்னு அப்பாஸ் ஆகியோரின் தரத்துக்கு உயர்த்திக் கொண்டுள்ளதால் விளைந்துள்ள ஆணவமும், அகந்தையுமாகும். தமது சம காலத்தவர்களுடன் மட்டும் இவர்கள் தம்மை இணைத்துக் காண முடியுமாயின் இவர்களது அகம்பாவ நிலையினால் விளையும் பாதகங்கள் தாக்கம் குறைந்தவையாய் இருக்கும்.

கண்மூடித்தனமான மத வைராக்கிய மனப்பான்மையானது தீவிரவாதத்தின் மிகத் தெளிவான ஓர் அம்சமாகும். ஒரு தீவிரவாதி, பிறரை நோக்கி பின்வருமாறு தான் பேசுவார் போலத் தோன்றுகிறது: "பேசும் உரிமை எனக்குரியது; உங்களது கடமை எனக்குச் செவி சாய்ப்பது. தலைமை தாங்கும் உரிமை எனக்குரியது; உங்களது கடமை என்னைத் தொடர்வது. என்னுடைய அபிப்பிராயங்கள் சரியானவை; அவை தவறாக முடியாது. உங்கள் அபிப்பிராயங்கள் தவறானவை; அவை சரியாக இருத்தல் முடியாது". மத வைராக்கியம் கொண்ட ஒருவர் பிறரது அபிப்பிராயங்களுடன் ஒருபோதும் உடன்பாடு காண மாட்டார். மிதமான நிலையில் உள்ளோரே இணக்கம் காணக்குடியோராயிருப்பர். வைராக்கிய மனம் படைத்தோர் மிதவாதம் பற்றி அறியவும் மாட்டார்கள்; அதனை நம்பவும் மாட்டார்கள். மக்களுடனான அவர்களது நிலைமையானது, மேற்குடனான கிழக்கின் நிலையை ஒத்தது. ஒன்றை நெருங்கும் போது மற்றதிலிருந்தும் விலகிச் செல்வதே அவர்கள் செய்வதாகும்.

விவகாரம் மேலும் முற்றுவது எப்போதென்றால், பிறரை அவர்கள் பலவந்தங்களுக்கு உள்ளாக்கும் போதாகும். அவர்களது தாக்குதல்கள் உடல்ரீதியானவை அல்ல. புதியன புகுத்தல், நம்பிக்கையின்மை, வழி தவறிவிட்டமை, பித்துப் பிடித்துள்ளமை முதலிய குற்றச்சாட்டுகள் மூலமாகவே அவர்களது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான அறிவியல் பயங்கரவாதமானது, உடல் ரீதியான பயங்கரவாதத்தைவிட அபாயம் மிக்கது.

'மிதமிஞ்சிச் செல்லும் தன்மையின் மீது கொள்ளும் அபரிமித ஈடுபாடு', தீவிரவாதப் போக்கின் இரண்டாவது வெளிப்படையான அம்சமாகும். அது மட்டுமின்றி, ஏனையோரையும் அவ்வாறே செய்யும்படி வற்புறுத்தும்போது பிரச்சனை மேலும் பெரிதாகி விடுகிறது. இறைவன் அவற்றை கட்டளையிட்டிராத நிலையிலும், செயல்களை எளிதாக்கி அமைத்துக் கொள்ளப் போதிய சந்தர்ப்பம் இருக்கும் போதும் கூட, இவ்வாறே இவர்கள் செயலாற்றுவர். இறைபக்தி காரணமாகவும், முன்னெச்சரிக்கையாகவும், குறிப்பிட்ட சில அம்சங்களில் சில சமயம் ஒருவர் கடினமானதொரு போக்கைக் கொண்டிருக்கலாம். ஆனால் செயல்களை இலகுவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையுள்ள சந்தர்ப்பங்களிலும் கூட, இக்கடினப் போக்கையே கடைப்பிடிக்குமளவு அவை அன்றாட வழக்கத்துக்குள்ளாகி விடக் கூடாது. அவ்வாறு செய்தல் குர்ஆனின் போதனைகளுடனோ, சுன்னாஹ்வுடனோ இயைந்ததல்ல. பின்வரும் வசனம் அதனைத் தெளிவுபடுத்துகிறது.

"அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை விரும்புகிறானே தவிர, உங்களுக்கு ச் சிரமத்தை (கொடுக்க) விரும்பவில்லை......" 
(அல் குர்ஆன் 2:185)

ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டியுள்ளபடி, இறைத்தூதர் அவர்கள் கூறியுள்ளார்கள்:

"(மக்களுக்கு விவகாரங்களை) இலகுவாக்குங்கள். (காரியங்களைக்) கடினமாக்கி விடாதீர்கள். (12)
அவன் அனுமதித்தவை ஏற்றுக் கொள்ளப்படுவதை இறைவன் விரும்புகிறான். (மக்கள்) அடிபணியாமையை (காண்பதை) வெறுக்கிறான். (13)"

மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது:

"இரண்டு விடயங்களில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளும்படி இறைதூதர் அவர்களிடம் கூறப்பெற்ற வேளைகளில், அவற்றுள் இலகுவானதையே தேர்ந்து கொண்டார்கள் - அது பாவமான காரியமாக இல்லாவிடின்."
(புகாரி, திர்மிதீ)

மக்களைக் குழப்பங்களுள் ஆழ்த்தி விடுவதும், அவர்களது வாழ்க்கையில் சிரமங்களை அதிகரிக்கச் செய்வதும் முஹம்மது (ஸல்) அவர்களது உன்னதமான குணாதிசயங்களுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். வேதங்களில் கூறப்பட்ட இது பின்னர் குர்ஆன் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது:

"(இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களை (செய்யும் படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவர்ராஈ அவர்களுக்குத் தடுத்து விடுவார். அன்றி, அவர்களுடைய பளுவை அவர்களை விட்டுப் போக்கி, அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (பல கடினமான கட்டளைகளையும் இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கி விடுவார்."
(அல் குர்ஆன் 7:157)


இதனால் தான் இறைத்தூதர் அவர்கள், தனித்து தொழுகையில் ஈடுபட்ட வேளைகளில் மட்டும் நீட்டித் தொழுவார்கள். உண்மையில் அவர்கள் இரவு வேளைகள் முழுவதும், தம் கால்கள் வீங்கும் வரை நின்று தொழுவார்கள். எனினும், தாம் தொழுகையை முன் நின்று நடத்தும் வேளைகளில் அவர்கள், தம் பின்னால் தொழுவோரின் பல்வேறுபட்ட பின்னணிகளையும், அவர்களது சகிப்புத் தன்மையின் பல்வேறு தரங்களையும் கருத்தில்கொண்டு தொழுகையைச் சுருக்கி அமைப்பார்கள். இது தொடர்பாக இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் எவரும் தொழுகையை முன்நின்று நடத்தக் கூடுமாயின் அவர் அதனைச் சுருக்கி அமைத்துக் கொள்வாராக. ஏனெனில் அவர்களுள் பலவீனமுற்றோரும், சுகவீனமுற்றோரும், முதியோரும் இருப்பர். எனினும் உங்களில் எவரேனும் தனியே தொழுவாராயின், அவர் தாம் விரும்பிய அளவு நீட்டித் தொழுதுகொள்ளலாம்.
(புகாரி)

அபூ மஸ்ஊத் அல் அன்ஸாரீயின் ஓர் அறிவிப்பின்படி ஒரு மனிதர் இறைத்தூதர் அவர்களிடம் வந்து கூறினார்:

"இறைத்தூதரே! நான் ஃபஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வதிலிருந்து விலகி நிற்கிறேன். ஏனெனில், இன்னார் தொழுகையை மிகவும் நீட்டிச் செல்கிறார். இறைத்தூதர் அவர்கள் மிகக் கோபம் கொண்டவர்களாகக் கூறினார்கள்: 'மக்களே! உங்களில் சிலர், நற்கருமங்களை மக்கள் வெறுக்கும்படி செய்கின்றீர்கள். தொழுகையில் முன்நின்று நடத்துபவர்கள் அதனைச் சுருக்கி கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களுள் பலமில்லாதோரும், முதியோரும், வேறு கருமங்கள் ஆற்ற வேண்டியோரும் இருப்பர்".
(புகாரி)

முஆத் (ரழி) தொழுகையை நீட்டித் தொழுவிப்பது குறித்து இறைத்தூதரிடம் கூறப்பட்டபோது அவர்கள் அளித்த பதில் குறித்து நாம் ஏற்கனவே கண்டோம். இறைத்தூதர் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் அறிவிப்பதாவது:

"நான் தொழுகைக்காக நிற்கும்போது, அதனை நீட்டியமைக்கும் நோக்குடனேயே ஆரம்பிக்கிறேன். என்றாலும் குழந்தையொன்றின் அழுகுரல் கேட்டதும் நான் அதனைச் சுருக்கிக் கொள்கிறேன். அதன் தாய்க்குத் தொல்லை தர நான் விரும்பவில்லை".

இவ்வாறே, கடமைகளைச் செய்வது போலவே மேலதிகமான நற்செயல்களை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதும், விலக்கப்பட்டவை (முஹரமாத்) எனவே கொண்டு தவிர்க்கப்படவேண்டுமெனக் குறிக்கப்பட்டவற்றுக்கும் (மக்ரூஹாத்) அவர்களே பொறுப்பாவார்கள் என்பதும், மிதமிஞ்சிய அல்லது வரம்பு மீறிய தன்மையின் ஓர் அடையாளமாகும். உண்மையில், இறைவன் மிகவும் தெளிவாகக் கட்டளையிட்டுள்ளவற்றைக் கடைபிடித்தொழுகும்படி நாம் மக்களை வேண்டிக் கொள்ளலாம். அவற்றிற்கு மேலதிகமாகச் செய்யப்படும் வணக்கங்கள் அனைத்தும், ஒவ்வொருவரதும் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தவையே. இறைத்தூதர் அவர்களும் இவ்வாறான கருத்தையே கொண்டிருந்தார்கள் என்பதைச் சுட்டுகின்றது பின்வரும் சம்பவம்:

"ஒரு நாடோடி அரபி இறைத்தூதரிடம் வந்து, 'தான் கடமையெனக் கொண்டு ஆற்ற வேண்டியன யாவை' என வினவினார். இறைத்தூதர் அவர்கள் மூன்று அம்சங்களைக் கூறினார்கள்: 'தொழுகை, ஜகாத். நோன்பு'. ' அதற்கும் மேலாகத் தான் ஆற்ற வேண்டியவை ஏதும் உள்ளதா' என அந்த அரபி கேட்டபோது 'இல்லை' எனக் கூறிய இறைத்தூதர் அவர்கள், 'விரும்பினால் அதற்கு மேலதிகமாக நன்மைகளை அவர் செய்து கொள்ளலாம்' என்றார்கள். அந்த அரபி, அந்த இடத்தை விட்டுச் செல்லும் போது, 'இறைத்தூதர் அவர்கள் தனக்கு விதித்தவற்றிலிருந்து எதையும் கூட்டவோ, அவற்றிலிருந்து எதையும் குறைக்கவோ மாட்டேன்' எனச் சத்தியம் செய்து சென்றார். இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: 'அவர் கூறியபடியே செயல்படுவாராயின் அவர் வெற்றி பெற்றார்' அல்லது அவர் சுவனம் அளிக்கப் பெறுவார்' என்றார்கள்."
(புகாரி)

இன்றைய கால கட்டத்தில் வாழ்ந்து வரும் ஒரு முஸ்லிம், கடமைகளைப் பேணி, பாவங்களில் மிகக் கொடியனவற்றைக் கண்டித்து, இறைவனுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிந்தவராக விளங்குவாராயின், அவரை இஸ்லாத்துக்காகப் பரிந்து பேசுபவராகவே கொள்ள வேண்டும். அவர் விலக்கப்பட்டவைகளில் சிறிய சில தவறுகளை இழைக்கக் கூடுமாயினும்கூட, ஐவேளைத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை, நோன்பு முதலியன அவர் இழைக்கும் சிறு தவறுகளுக்குப் பரிகாரமாக அமைந்து விடும். குர்ஆன் கூறுகின்றது:

"நிச்சயமாக, நன்மைகள் பாவங்களைப் போக்கி விடும்"
(அல் குர்ஆன் 11:114)

மற்றொரு வசனம் கூறுகின்றது:

"உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற சிறிய) பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி, உங்களை (மன்னித்து, மிக்க) கண்ணியத்தின் வாயிலிலும் புகுத்துவோம்".
(அல் குர்ஆன் 4:31)

குர்ஆன், சுன்னாஹ் ஆகியவற்றிலிருந்து கிட்டும் ஆதாரங்கள் இவ்வாறு இருக்க, முஸ்லிம் ஒருவரை, பிரச்சனைக்குறிய சில விவகாரங்களில் அவர் கொண்டுள்ள கருத்துக்களுக்காக, அவை ஆகுமானதா விலக்கப்பட்டதா எனத் தீர்வு காணப்படாத நிலையில் எவ்வாறு நாம் இஸ்லாத்துக்கு வெளியே தள்ளலாம்? கடமையா (வாஜிப்) விரும்பத்தக்கதா (மன்தூப்) என நாமே தீர்மானம் செய்து கொள்ளாத சில விஷயங்களில் ஏதோ ஒன்றைக் கடைப் பிடிக்க வில்லை என்பதற்க்காக எவ்வாறு நாம் ஒருவரைத் தண்டிக்கலாம்? இதனால் தான், பக்திவான்களான சிலர் தமது தனிப்பட்ட நடைமுறைகளைப் பொறுத்தமட்டில் பிறரும் அவற்றை அவ்வாறே பின்பற்ற வேண்டும் என வற்புறுத்துவதில் காட்டும் மித மிஞ்சிய சிரத்தையை நான் எதிர்க்கிறேன். அவ்வாறே இவ்வாறான மக்கள், தமது கருத்துகளுக்கு இணங்காத அறிஞர்களைக் கண்டனம் செய்து வருவதையும் நான் எதிர்க்கிறேன். அந்த அறிஞர்களோ குர்ஆன், சுன்னாஹ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமது மார்க்கத்தைப் பின்பற்றுவதில் மக்கள் எதிர்நோக்கக்கூடிய தேவையில்லாத சிரமங்களை நீக்கி அல்லது குறைத்து, மக்களுக்கு அவர்களது மார்க்கத்தை எளிதாக்கி வைக்க முனைகின்றார்கள்.

தீவிரவாதத்தின் மூன்றாவது அம்சம் 'வரம்பு மீறிய வகையிலான கண்டிப்பான தன்மையாகும்'. அதன் காரணமாக, கால, இட பேதங்கள் எதுவும் கருத்தில் கொள்ளப்படாமல் விடப்படுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். முஸ்லிம் - முஸ்லிமல்லாத நாடுகள் என்ற பேதமின்றி, புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர் - ஏற்கனவே இஸ்லாத்தில் ஆழ்ந்துள்ளோர் என்ற வித்தியாசங்கள் இன்றி, எல்லா இடத்திலும், அனைவர் மீதும் இவ்வாறான கண்டிப்பான தன்மையைக் காட்டுவது நல்லதல்ல. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களைப் பொருத்தளவில், பொருட்படுத்தத் தேவையில்லாத, அல்லது பிரச்சினைக்கு உரிய விவகாரங்களைப் பெரிதுபடுத்தாமல், இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள் மீதே அவர்களது கவனத்தை ஈர்க்க முயல வேண்டும். ஏனைய எதனையும் விட மதம் பற்றிய குறிப்பாக இஸ்லாம் பற்றிய அவர்களது எண்ணங்களையும், புரிந்துணர்வையும் சீர்படுத்தி அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சரியான விசுவாசத்தின்பால் அவர்களது உள்ளம் உறுதி பெற்ற பின்னர், ஐம்பெருங்கடமைகள், விசுவாசத்தையும் பயிற்சியையும் ஒரு நெறிப்படுத்தும் அம்சங்கள், இறைவனின் மகிழ்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வாழ்வை அமைத்துக் கொள்ளும் வழிமுறைகள் முதலியனவற்றைப் படிப்படியாக வலியுறுத்தலாம். இறைத்தூதர் அவர்கள் இந்த உண்மையை நமக்கு உணர்த்தியுள்ளார்கள். யெமன் நோக்கி முஆதை(ரழி) அனுப்பியபோது இறைத்தூதர் அவர்கள் கூறிய அறிவுரையின் படித்தரங்களை சற்றே அவதானித்துப் பாருங்கள்:

"வேதங்கள் அளிக்கப்பட்ட மக்களிடையே நீர் செல்கின்றீர். அவர்களை நீர் அடைந்ததும் இறைவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன் என்றும், முஹம்மது அவனது தூதர் என்றும் சாட்சி கூறும்படி அவர்களை அழையும். உமது அழைப்புக்கு அவர்கள் இணங்குவார்களாயின், இரவிலும் பகலிலுமாக ஐந்து வேளைகள் தன்னைத் தொழும்படி இறைவன் கட்டளையிட்டுள்ளதாகக் கூறும். அதையும் அவர்கள் ஏற்பார்களாயின் இறைவன் அவர்கள் மீது ஸதகாவை (ஸகாத்) விதியாக்கி, செல்வம் படைத்தோரிடமிருந்து பெற்று, அவர்கள் மத்தியிலுள்ள வறியோர்க்கு வழங்கும்படி கட்டளையிட்டுள்ளதாகக் கூறும்......" (14)

வட அமெரிக்க பயணம் ஒன்றின் போது என்னை அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கிய சம்பவங்கள் பல நிகழ்ந்தன. முஸ்லிம் இயக்கங்கள் சிலவற்றைச் சார்ந்த நேர்மையுள்ளம் படைத்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், பெரும் பிரச்சனைகள் சிலவற்றைக் கிளறி விட்டார்கள். சனி, ஞாயிறு தினங்களில் நடத்தப்படும் இஸ்லாமிய விரிவுரைகளைக் கேட்பதற்க்காக வரும் முஸ்லிம்கள், பள்ளிவாசல்களில் அமர்வது போல கஅபாவை முன்னோக்கித் தரையில் அமராமல் நாற்காலிகளில் அமர்வது; உடம்பில் தொங்கியதாக அமையும் மேலங்கிகளுக்குப் பதிலாக மேல் சட்டைகளும் கால் சராயும் அணிவது; தரையில் அமராமல், உணவு உட்கொள்ள மேசை, நாற்காலிகளைப் பயன்படுத்துவது முதலியவை அவர்கள் எழுப்பிய பிரச்சினைகள். வட அமெரிக்காவின் முக்கிய நகரொன்றில் வாழ்ந்து வருவோர் மத்தியில் இவ்வாறான சிந்தனை காணப்படுவது என்னுள் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மத்தியில் உரையாற்றும்போது நான் கூறினேன்:

"இவ்வாறான லோகாயுத சமூகமொன்றில் வாழ்ந்து வரும் நீங்கள், ஏகத்துவக் கோட்பாடு, இறை வணக்கங்களின் பக்கம் அழைப்பு விடுப்பதையும், மறுமை குறித்து மக்களுக்கு நினைவூட்டுவதையும், லோகாயுத அடிப்படையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள நாடுகள் மூழ்கியிருக்கும் தீங்கு நிறை நெறிகளின் ஆபத்துகள் குறித்து எச்சரிப்பதையும் உங்களது பெருங்கடமைகளாகக் கொள்வீர்களாயின், அதுவே உத்தமமானதாகும். பழக்க வழக்கங்கள் பற்றிய நியதிகள், சமய நடைமுறைகளின் அபிவிருத்தி என்பன கால-இட பரிமாணங்களுக்கு உட்பட்டவை. அவை அனைத்தும் அடிப்படைக் கோட்பாடுகள் நன்கு வேரூன்றப்பட்ட பின்னரே அறிமுகப் படுத்தப்பட வேண்டும்".

மற்றுமோர் இஸ்லாமிய நிலையத்தின் பள்ளிவாசல் ஒன்றில் வரலாறு கற்பிக்க அல்லது கல்வி புகட்டவெனப் பயன்படும் ஒரு திரைப்படம் காட்டப்படுவது குறித்து பெரும் பிரச்சினைகளைச் சிலர் எழுப்பி விட்டனர். 'பள்ளிவாசல்களெல்லாம் திரைப்பட மாளிகைகளாக மாற்றப்பட்டு விட்டன' என அவர்கள் கண்டன கோஷங்கள் இடலாயினர். மனிதர்களின் ஆன்மீகத் தேவைகளோடு உலகத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு தளமே பள்ளிவாசல் என்பதனை அவர்கள் மறந்து விடுகின்றார்கள். முஹம்மது(ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசல், சமூக நடவடிக்கைகளின், அரசின், அழைப்புப் பணியின் (தஃவா) மத்தியத்தளமாக விளங்கியது. அபிஸீனியாவிலிருந்து வந்த மக்கள் குழுவொன்றுக்குத் தமது பள்ளிவாசலின் மத்தியிலிருந்து அம்புகளுடனான நடனம் புரியவும், ஆயிஷா(ரழி) அதனைக் கண்டு களிக்கவும் இறைத்தூதர் அவர்கள் அனுமதியளித்ததை புஹாரியும் ஏனையோரும் அறிவித்ததன் வாயிலாக நாம் நன்கறிவோம்.

தீவிரவாதம் வெளிப்படையாகும் நான்காவது அமசத்துக்கு வருவோம். 'மக்களுடனான விவகாரங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளல், அணுகும் முறைகளில் பண்படாத தன்மை கொண்டிருத்தல், இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுக்கும்போது அநாகரிகமாக நடந்து கொள்ளல்' முதலியன இதில் அடங்குகின்றன. இவையனைத்தும் குர்ஆனின் போதனைகளுக்கும் இறைத்தூதர் அவர்களின் வழிமுறைகளுக்கும் முரண்பட்டவையாகும். இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்கும் போது, நாம் ஞானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இணக்கமான முறையில் உரையாட வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்:

"நீர் (மனிதர்களை) நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின் பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் தர்க்கிக்க நேரிட்டால் நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக!"
(அல் குர்ஆன் 16:125)

குர்ஆன், இறைத்தூதர் அவர்களைப் பின்வருமாறு சித்தரிக்கின்றது:

"உங்களிலிருந்து நிச்சயமாக (நம்முடைய) ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகிவிட்டால், (அது) அவருக்கு மிக்க வருத்தமாக இருக்கும், அன்றி உங்(கள் நன்மை)களைப் பெரிதும் விரும்புகிறவராகும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார்."

(அல் குர்ஆன் 9:128)

அல்-குர்ஆன் இறைத்தூதர் அவர்களை விளித்து, தமது தோழர்களுடனான தொடர்புகளில் அவர்கள் எத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை சுட்டுகின்றது:

"(நபியே!) இறைஅருளின் காரணமாகவே, நீர் அவர்கள் மீது இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பானவாராகவும் கடின சித்தமுள்ளவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடம் இருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்."
(அல் குர்ஆன் 3:159)

கடின சித்தமும், மிக்க உறுதியான தயை இல்லா உளப்பண்பும் இரண்டு விஷயங்களைப் பொறுத்தே குர்ஆனில் வலியுறுத்தப்பட்டு உள்ளன. ஒன்று, போர் விவகாரங்களோடு இணைந்தது. அதாவது, போர் முடிவுறும் வரை உறுதியான உள்ளத்தையும், இரக்கமில்லா சித்தத்தையும் கொண்டிருப்பது வெற்றிகரமான ஒரு போர் உபாயம் எனக் காட்டும் போது,

"நம்பிக்கையாளர்களே! உங்களை அடுத்திருக்கும் (விஷமிகளாகிய) நிராகரிப்போருடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காண வேண்டும்".
(அல் குர்ஆன் 9:123)

அடுத்து, அல்-ஷரீஆவின் விதிப்படியான தண்டனைகளை நிறைவேற்றும் போது இறைவனின் கட்டளைகளை அமுல் செய்வதில் எவ்வித தயையும் காட்டப்படக் கூடாது எனும் போது,

"விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியவர்களாக இருந்தால் அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில், அவ்விருவர் மீதும் இரக்கம் ஏற்பட வேண்டாம்".
(அல் குர்ஆன் 24:2)

அழைப்புப் பணியைப் (தஃவா) பொறுத்தளவில் முரட்டுத்தனத்துக்கோ, கடுமைக்கோ இடமில்லை. மின்வரும் ஹதீஸ்கள் இதனைத் தெளிவாக்குகின்றன:

'எல்லா விவகாரங்களிலும் இரக்க சிந்தயை அல்லாஹ் விரும்புகிறான்.
இரக்கம் அழகு படுத்துகின்றது; ஹிம்சை குறைபாடடையச் செய்கின்றது'.
(புகாரி)

நமது முன்னோரும் இதனையே வலியுறுத்தியுள்ளனர்:

'பொது நன்மையைக் கருதிச் செயலாற்றும் எவரும் உயர்பண்புகளுடன் செயல்படவும்'.

ஹிம்சையினால் ஏற்படும் பாதிப்புகள், இறை பாதையில் மேற்கொள்ளப்படும் அழைப்புப் பணியைவிட வேறு எதையும் மோசமாகப் பாதிக்க முடியாது. மனிதனது உள்ளுணர்வுகளின் அடித்தளத்தை ஊடுருவிச் சென்று அவனை உணர்விலும், நடத்தையிலும், கோட்பாடுகளிலும் உன்னத, தெய்வீக பண்புடையவனாக ஆக்குவதற்கும், அவனது சிந்தனையையும், விருப்பங்களையும் சீர்படுத்தி அவனைப் புதியதொரு பிறவியாக மாற்றியமைக்கவும் முனைவது அழைப்புப்பணி. மேலும், முழு சமூக அமைப்பையும் குலுக்கி, அதன் வழிவழி வந்த நம்பிக்கைகளையும், நன்கு வேரூன்றிய மரபுகளையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும், நடைமுறை ஒழுங்குகளையும் சீர்படுத்த அது முனைகின்றது.

மானிட இயல்புகளை, மனிதனின் சாதாரண பிடிவாத குணத்தை, மாற்றங்களை மறுத்துரைக்கும் எதிர்ப்புணர்வை, தர்க்கிக்கும் மனப்பாங்கை, ஞானமும் இணக்கமும் இன்றி புரிந்துகொள்வது சிரமம். மனித இதயத்தையும், சிந்தையையும் கவர்ந்து கொள்வதற்கும், மனிதனது கடுமையான போக்கையும் கர்வத்தையும் தளர்வுறச் செய்வதற்கும் கருணை, நற்பண்புகள் என்பன அத்தியாவசியமானவை. இறைவனின் பக்கம் அழைப்பு விடுத்த முந்தைய இறைத்தூதர்களும் நேர்மையான விசுவாசிகளும் இவ்வாறான ஒழுங்கு முறைகளையே கையாண்டனர் எனக் குர்ஆன் கூறுகின்றது. இதற்கான எடுத்துக்காட்டுகளை, தமது தந்தையாருக்கும், மக்களுக்கும் இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களும், தமது சொந்த மக்களுக்கு ஷுஐப் நபியவர்களும், ஃபிர்அவ்னுக்கு இறைத்தூதர் மூஸா அவர்களும், ஃபிர்அவ்னின் மக்களுக்கு விசுவாசிகளாக இருந்தோரும் விடுத்த அழைப்புகளில் கண்டு கொள்ளலாம். மக்களை சத்தியத்தின் மீதும், நல் வழிகளின் மீதும் செலுத்த முனைந்தவர்களது போதனைகளிலும் இவற்றை நாம் காண முடியும். ஃபிர்அவ்னின் மக்களில் இறைநம்பிக்கை மிகக் கொண்டிருந்த ஒரு மனிதர், தனது மக்களோடுள்ள இணக்கத்தின் காரணமாக, அவர்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, எத்துணை உரிமையுடன், அவர்களது ஆளுகையும் புகழும் நிலைபெற வேண்டுமென விரும்புகின்றார் என்பதைக் கண்டு, சற்றே அது குறித்துச் சிந்திபோம்:

"என்னுடைய மக்களே! இன்றைய தினம் ஆட்சி உங்களிடம்தான் இருக்கின்றது. இந்நாட்டில் (நீங்களே) மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்து விட்டால், (அதனை தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?"
(அல் குர்ஆன் 40:29)

பின்னர் அவர், இறைவனின் கட்டளைகளுக்குச் செவிசாய்க்க மறுத்த ஆரம்ப சமூகங்கள் குறித்து நினைவுறுத்துகின்றார்:

"என்னுடைய மக்களே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் (கெட்ட) நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமென்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆது (டைய மக்களு)க்கும் ஸமூது (டைய மக்களு)க்கும் அவர்களுக்குப் பின் வந்தவர்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்து) (உங்களுக்கும் நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகிறேன்). அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்.”
(அல் குர்ஆன் 40:30, 31)

பின்னர், நியாயத் தீர்ப்பு நாளின்போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்து விவரிக்கின்றார்:

"என்னுடைய மக்களே! (கூலி கொடுக்க) அழைக்கப்படும் (மறுமை) நாளைப் பற்றியும் உங்களுக்காக நிச்சயமாக நான் பயப்படுகிறேன். நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில் அல்லாஹ்வை விட்டு உங்களைக் காப்பாற்றக் கூடியவன் ஒருவனும் இல்லை. அல்லாஹ் எவனைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ அவனை, நேரான வழியில் செலுத்தக் கூடியவன் ஒருவனும் இல்லை.”
(அல் குர்ஆன் 40:32, 33)

அவர் தனது வேண்டுகோளை கருணையும், பண்பும் நிறைந்த முறையிலேயே விடுக்கின்றார். எச்சரிக்கை செய்யும் அவர், அம்மக்களுக்கு நம்பிக்கையும் ஊட்டுகின்றார்:

"என்னுடைய மக்களே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பேன். என்னுடைய மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் (நிலையற்ற) இன்பம்தான். நிச்சயமாக மறுமையோ - அதுதான் நிலையான (இன்பம்தரும்) வீடு. என்னுடைய மக்களே! எனக்கென்ன - (ஆச்சரியமாக இருக்கின்றது!) நானோ உங்களை ஈடேற்றத்திற்கு அழைக்கின்றேன். நீங்கள் என்னை நரகத்திற்கு அழைக்கின்றீர்கள். அன்றி, நான் அல்லாஹ்வை நிராகரிக்கவும் நான் அறியாததை அவனுக்கு இணை வைக்கவும் நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள்; நானோ, (யாவரையும்) மிகைத்தோனும் மிக்க மன்னிப்போனுமாகிய அவனிடம் உங்களை அழைக்கின்றேன்." 
(அல் குர்ஆன் 40:38, 42)

தன் அறிவுறுத்தலை முடிக்கும் அவர் கூறினார்:

"நான் உங்களுக்கு (உண்மையென) கூறுவதை நிச்சயமாக அதி சீக்கிரத்தில் நீங்கள் (அறிந்து) நினைத்துப் பார்ப்பீர்கள். என்னுடைய காரியத்தை அல்லாஹ்விடமே நான் ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.”
(அல் குர்ஆன் 40:44)

முரண்டு பிடிப்பவர்களுடனும், பிற மதத்தவர்களுடனும் சமகால இஸ்லாமிய அழைப்பாளர்கள் (துஆத்) கையாள வேண்டிய ஒழுங்கு முறைகள் இவ்வாறே அமைய வேண்டும். இறைவன், ஃபிர்அவ்னுக்குப் போதனை செய்ய அனுப்பிய தனது இரு தூதர்களான மூஸா(அலை) (15), அவர் சகோதரர் ஹாரூன்(அலை) ஆகியோருக்கு அளித்த அறிவுறுத்தலும் இதே தோரணையில் அமைந்ததே:

"நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்து விட்டான். நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்வு பெறலாம்; அல்லது நடுக்கமடையலாம்."
(அல் குர்ஆன் 20:43, 44)

இக்கட்டளையை ஏற்று மூஸா(அலை) ஃபிர்அவ்னுடன் மிக நளினமாகவே உரை செய்தார்கள்:

"(பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவான் ஆக உனக்கு விருப்பந்தானா? (அவ்வாறாயின்) உன் இறைவன் பால் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்." 
(அல் குர்ஆன் 79:18, 19)

எனவே தான் மாற்றுக் கருத்துக்கள் கொண்டோருடன் இன்றைய இளைஞர்கள் தர்க்கம் செய்யும் முறைகளை, அழைப்புப் பணியில் (தஃவா) போதிய பரிச்சயம் கொண்டுள்ள முதியோர்கள் கண்டிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மக்களை இறைவனின் பாதையின் பால் வினயமாக அழைப்பதற்குப் பதிலாக இளைஞர்களுள் பலர் முரட்டுத்தனமும், பண்பிலா முறைகளும், அநாகரிகமும் கொண்டவர்களாக நடந்து கொள்வது கவலைக்குரியது.
இளைஞர்களுக்கும் முதியோர்க்கும் இடையில் இருக்கக்கூடிய வேறுபாடுகளோ, மூப்பு, தகைமை முதலியன காரணமாக, சாதாரணமாகவே அளிக்கப்பட வேண்டிய மரியாதைகளோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. பெற்றோர்க்கு, ஆசிரியர்க்கு, அறிஞர்களுக்கு, அழைப்புப் பணி, இறை நெறிக்கான போராட்டம் (ஜிஹாத்) ஆகிய அம்சங்களில் அதிக அனுபவம் பெற்றவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கெளரவம் அளிக்கப்படுவது குறைவு. சமூகத்தார் மத்தியில் காணப்படக் கூடிய பல்வேறு சாரார்களிடையே காணப்படும் வேறுபாடுகளைக் கூட இவர்கள் பொருட்படுத்துவதில்லை.

பாமரர், கல்வியறிவில்லாதோர், வழி கெடுக்கப்பட்டோர், அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக அல்லல்களுக்கு உள்ளாவோர், குரோதமும் துரோகமும் காரணமாக இஸ்லாத்தை வன்மையாக எதிர்த்து நிற்போர் முதலிய பல தரப்பட்டவர்களை உள்ளடக்கியது சமூகம். ஆரம்பகால ஹதீஸ் வல்லுனர்கள் சமூகத்தின் பல்வேறு சாராரையும் பிரித்தறிவிக்கும் பல்வேறு வழிமுறைகளைக் காட்டிச் சென்றுள்ள நிலையிலும் கூட, இன்னமும் முஸ்லிம் சமூகத்தில் இத்துறை பற்றிய அறிவும் தெளிவும் குன்றியிருப்பது வருந்தத்தக்க ஒரு விஷயம். புதியன புகுத்தினாலும் அதன்பால் மக்களை அழைக்காத குழுவினர்க்கும், தாம் புகுத்திய புதிய அம்சங்களைச் சரியென நிறுவி, அவற்றை விளம்பரம் செய்து, மக்களைத் தம்பால் கவர முனைந்த குழுவினர்க்கும் இடையிலான வேறுபாடுகளைக்கூட ஹதீஸ் வல்லுனர்கள் மிகத் தெளிவாக நிறுவியுள்ளனர். முன்னைய சாரார் கூறியன ஏற்கப்பட்டன; பின்னைய சாரார் கூறியன நிராகரிக்கப்பட்டன.

தீவிரத்தன்மையின் மற்றுமோர் அம்சம் 'நம்பிக்கையின்மையும், சந்தேக நோக்கும்' ஆகும். மக்களைக் குற்றம் சாட்டுவதிலும், அவர்கள் மீதான தமது தீர்மானங்களைப் பகிரங்கப்படுத்துவதிலும் தீவிர தன்மை படைத்தோர் மிக வேகமாக இயங்குவர். 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றஞ் சுமத்தப்பட்டவர் நிரபராதியே' என்ற சாதாரண உலக வழக்கு எதுவும் அவர்கள் மத்தியில் எடுபடுவதில்லை. எவரேனும் ஒருவர் மீது சற்றேனும் சந்தேகம் தோன்றுமாயின் உடனேயே அவரை ஒரு குற்றவாளியெனத் தீர்மானம் செய்து விடுவர். விவரங்களோ, தெளிவோ பெற முனையாமல் திடீர் முடிவுகள் எடுப்பர். சிறியதொரு தவறைக் கூட, பென்னம் பெரியதாக மிகைப்படுத்தி விடுவர். தவறு பாவத்தின் தரத்துக்கும், பாவமென்று நிராகரிப்பின் (குஃப்ர்) தரத்துக்கும் மிகைப்படுத்தப்படுவதைக் காணலாம். இவ்வாறான நடவடிக்கைகள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கும், போதனைகளுக்கும் முற்றிலும் முரணானவை. பிற முஸ்லிம்கள் குறித்து நல்லவிதமாகவே சிந்திக்க வேண்டுமென்றும், அவர்கள் இழைக்கக் கூடிய சிறு தவறுகளுக்குச்சமாதானம் காட்டித் திருப்தியுற வேண்டுமென்றும், அவர்களது சொல், செயல் ஆகியனவற்றைச் சீர்படுத்தியமைக்க வேண்டும் என்றும் இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

இவ்வாறான தீவிரத் தன்மை கொண்ட ஒருவருடன் யாரேனும் ஒருவர் முரண்படக் கூடுமாயின் அவரது சமய நேர்மை, தூய்மை என்பன உடனே கேள்விக்குள்ளாக்கப்பட்டு விடுகின்றன. விதிமுறைகளை மீறியவர்களாக, நவீன அம்சங்களைப் புகுத்த முனைபவர்களாக அவர்கள் சித்தரிக்கப்படுவர். இஸ்லாமிய மூலாதாரங்களின் அடிப்படையிலேயே அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும்கூட, நபிகளாரின் வழிமுறைக்குக் களங்கம் விளைவிக்க முனைபவர்களாக அவர்கள் குற்றம் சாட்டப்படுவார்கள். பல எடுத்துக்காட்டுகளை நாம் காணலாம். ஒரு தடியைக் கையிலெடுத்துச் செல்லுதல், நிலத்தில் அமர்ந்தவாறு உணவு உட்கொள்ளுதல் முதலியன சுன்னாஹ்வோடு சம்பந்தப்படாதவை என ஒருவர் வாதாடுவாராயின், அவர் நபிகளாரையே அவமதித்து விட்டதாகக் குற்றம் சுமத்தப் பெறுவார். இவ்வாறான குற்றச்சாட்டுகளிலிருந்து அறிவில் சிறந்த முஸ்லிம் கல்விமான்களோ பெரும் அறிஞர்களோ கூட தப்பித்துக் கொள்ள இயலாது. முஸ்லிம் சமூகத்தாரின் விவகாரங்களை இலகுபடுத்தி வைக்கும் வகையில் ஒரு சட்ட அறிஞர் (ஃபகீஹ்), சட்டவியல் அபிப்பிராயம் (ஃபத்வா) ஒன்றை அளிப்பாராயின் அவர் சமய விவகாரங்களை எளிமைப்படுத்த முனைகின்றார் எனக் கண்டிக்கப்படுவார். காலத்தின் பரிமாணத்தை அனுசரித்து அதற்கியைந்த வகையில் ஒரு முஸ்லிம் அழைப்பாளர் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்கக் கூடுமாயின் அவர், மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கி, அதனை உயர்த்திப் பிடிக்க முனைகின்றார் எனக் குற்றம் சாட்டப் பெறுவார். இவ்வாறான கண்டனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இலக்காவோர் இந்த உலகில் வாழ்ந்து வருவோர் மட்டுமல்ல, தம் மீது விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிக்க இயலாத, மரணித்து விட்டோரும் கூட இவற்றிற்குள்ளாவார். மாற்றுக் கருத்துக்கொண்டோர் எவரும், தாம் ஒரு ஃப்ரீமேஸன், அறிவீனர், பாவி என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டு கண்டனத்துக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்பார்க்கலாம்.

இஸ்லாமிய உலகில் வழங்கி வரும் சட்டவியல் கோவைகளை எவ்வளவோ சிரமங்களின் மத்தியில் கோர்வை செய்து பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் பெருமதிப்பினைப் பெற்று விளங்கும் இஸ்லாமிய சட்ட மேதைகள் நால்வரும் கூட, இத்தீவிர தன்மை கொண்டோரின் விஷமத்தனமான தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலவில்லை. உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் முழு வரலாற்றிலும், வியத்தகு பெருமையை ஈட்டித் தரும் வகையில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான நாகரிகத்தை உருவாக்கித் தந்த ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் பின்னரான காலப்பகுதி நியாயமில்லா கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இக்காலப் பகுதியே சம காலத்துத் தீவினைகள் அனைத்துக்கும், நமது பரிதாப நிலைக்கும் வித்தூன்றிய காலம் என இத்தீவிரவாதிகள் கூறுவர். அவர்களுள்ளும் சிலரது நோக்கில், அக்காலம் பூசல்களும், பிரிவினைகளும், தனியார் அதிகாரப் போட்டியும் நிறைந்த காலம்; மற்றும் சிலருடைய நோக்கில் அறியாமையும், நிராகரிப்பும் நிறைந்த காலம்.

அழிவையே ஊக்குவிக்கும் இவ்வாறான தன்மைகள் நவீனமானவையல்ல. நபி(ஸல்) அவர்களது காலத்திலும் தீவிரத் தன்மை கொண்டோர் இருக்கவே செய்தனர். ஒருமுறை அன்ஸாரிகளில் ஒருவர், போர்ப் பொருட்களின் பங்கீட்டில் சில சாரார்க்குச் சாதகமாக நபிகளார் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டினார். சமகால தீவிரத் தன்மை கொண்டோரின் மிகப்பெரிய குறைபாடு சந்தேகமாகும். இவர்கள் புனித குர்ஆனையும், சுன்னாஹ்வையும் நன்கு கற்றுப் போதிய தெளிவு பெற்றிருப்பார்களாயின் இவையிரண்டும், தனியாகவும் கூட்டாகவும், முஸ்லிம்கள் அனைவரது இதயங்களிலும் தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படுவதையும், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் பரஸ்பரம் நம்பிக்கை உடையவர்களாக வாழ வேண்டியதையும் வற்புறுத்துவதைக் காண்பார்கள். மற்றொருவரின் சிறு தவறுகள், பிழைகள் மீது தம் அதிகாரத்தைக் காட்ட முனைதலோ, அவர்களது நற்பண்புகளைக் கருத்தில் கொள்ளாதிருத்தலோ ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டவையல்ல.

"நீங்கள் உங்களைத் தூயவர்களென (பீற்றி) கொள்ளாதீர்கள். (உங்களில்) தூயவர்கள் எவரென்பதை அவனே நன்கறிவான்." 
(அல் குர்ஆன் 53: 32)

உண்மையில் இஸ்லாம், இரண்டு விஷயங்களை குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கின்றது: இறைவனின் கருணை மீது நம்பிக்கை இழத்தல்; சக மானிடர் மீது சந்தேகம் கொள்ளல்.

"நம்பிக்கையாளர்களே! சந்தேகங்களிலிருந்து அநேகமாக நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் சில விஷயங்களில் சந்தேகிப்பது பாவமாக இருக்கின்றது."
(அல் குர்ஆன் 49:12)

இது தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்:

"சந்தேகத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகமானது உரையாடலில் பொய்யான ஒரு விஷயமாகும்.” (16)

ஏமாற்றுதல், ஆணவம், ஏனையோரை இகழ்ந்துரைத்தல் என்பன சந்தேகத்தின் மூலங்களாக அமைந்துள்ளன. பணிவின்மையின் ஆரம்பமும் இதுவே. இதனை நாம் ஷைத்தானிடம் காணமுடிந்தது. ஆதம்(அலை) அவர்கள் முன்னால் சிரம் பணியும்படி பணிக்கப்பட்ட வேளை ஷைத்தான் மறுத்துரைத்தான்.

"அவரை விட நானே மேலானவன்……"
(அல் குர்ஆன் 38:76)

பின்வரும் ஹதீஸில் குறிக்கப்படும் எச்சரிக்கையை மனதில் கொள்வது நலம் பயக்கும்:

"மக்கள் அழிந்து பட்டார்கள் என யாரேனும் ஒருவர் கூறுவாராயின், செருக்கும் ஆணவமும் காரணமாக, அவ்வாறு கூறியவரே அழிந்து போவர்."
(முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பின்படி, "...அவ்வாறு கூறியவரே அவர்களை அழிவுக்குள்ளாக்குகின்றார்." தனது சந்தேகம், தற்பெருமை என்பன காரணமாகவும், இறைவனின் கருணை மீது அம்மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதன் மூலமும் அவர், இவ்வாறான ஓர் இழிநிலையை உருவாக்கி விடுகின்றார். தற்செருக்கானது, சீர் கேட்டைக் கொண்டு வரும் சாதாரண ஒரு மானிட இயல்பாகும். இதனையே முஸ்லிம் அறிஞர்கள் 'ஆன்மாவின் பாவங்கள்' எனச் சித்தரிப்பர். நபிகளார் இவ்வாறான பாவங்கள் குறித்து நம்மை எச்சரித்துள்ளார்கள்:

"மூன்று பெரும் பாவங்கள் இருக்கின்றன்: திருப்தியடையா பேராசை, அவா, செருக்கு."

உண்மையில்,ஒரு முஸ்லிம் தனது கருமங்கள், செய்கைகள் காரணமாக ஒரு போதும் பெருமை கொள்வதில்லை. ஏனெனில், அவை இறைவனால் ஏற்கப்படுவதற்குத் தகுதியானவையா என அவர் அறிய மாட்டார். தர்மங்கள் செய்வோர் குறித்துக் குர்ஆன் கூறுகின்றது:

"அவர்கள், தங்களுக்குச் சாத்தியமான வரையில் தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய இதயங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றன......"
(அல் குர்ஆன் 23:60)

நன்மையான கருமங்கள் செய்தும், அவற்றை அல்லாஹ் ஏற்காது விட்டுவிடுவானோ என்று அஞ்சுபவர்களைக் குறித்தே இந்த வசனம் என்று ஹதீஸ் தொகுப்புகளின் மூலம் அறிய முடிகின்றது. இப்னு அதாஅ கூறுவார்:

"பணிவுடைமையின் வாசல்களை அல்லாஹ் உங்களுக்குத் திறந்து வைக்கலாம்; ஆனால் ஏற்புடைமையின் வாசல்களை அவன் திறக்காது விடலாம். பணிவின்மையின் ஒரு தரத்தை அவன் உங்களுக்குக் கட்டளையிடலாம்; ஆனால் அதுவே, உங்களை நேர்வழியின் பால் செலுத்துவதாகவும் அமையக்கூடும். அடக்கத்தை உங்களுக்குக் கற்பிக்கும் பணிவின்மையானது, ஆணவத்தையும் செருக்கையும் வளர்க்கும் இறைபக்தியைவிடச் சிறந்தது."

அலீ இப்னு அபீதாலிப்(ரழி) அவர்கள் கூறினார்கள்:

தற்பெருமையை வளர்க்கும் ஒரு நற்செயலை விட, ஒரு மனிதனுக்கு ஏற்படும் பாதகமானது அல்லாஹ்வின் பார்வையில் சிறந்தது."

இப்னு மஸ்வூத்(ரழி) கூறினார்கள்:

"இரு விஷயங்கள் அழிவுக்கு வழியமைக்கின்றன: செருக்கும், நம்பிக்கையின்மையும். முயற்சியும், போராட்டமுமின்றி மகிழ்வை அடைய முடியாது. தற்பெருமை கொண்ட ஒரு மனிதன் முயற்சி செய்ய மாட்டான். ஏனெனில், தான் சிறந்தவன், பூரணமானவன் என்றே அவன் நம்பியிருப்பான். நம்பிக்கையீனனான ஒருவன் முயற்சி செய்ய மாட்டான்; ஏனெனில் அதனால் பயன் ஏதும் விளையப் போவதில்லையென்றே அவன் நம்பியிருப்பான்."

தீவிரத்தன்மையின் உச்ச கட்டமாக அமைவது குறிப்பிட்ட ஒரு குழுவினர், ஏனைய மக்கள் அனைவரதும் பாதுகாப்பு உரிமைகளை மறுப்பது மட்டுமல்லாது, அவர்களைக் கொல்லவும், அவர்களது உடைமைகளை அபகரிக்கவும் முனைவதாகும். அவ்வாறான ஒருவர், தமது குழுவினரைத் தவிர ஏனைய அனைவரையும் நிராகரிப்பாளர்கள் என்றே கருதுவார். இது, அவருக்கும் எஞ்சிய சமூகத்துக்கும் இடையிலான உறவுகள் அனைத்தையும் முறித்து விடுகின்றது. தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல் முதலிய அனைத்து அம்சங்களிலும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் எனப் பெயர் பெற்றிருந்தும் கூட, இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஃகவாரிஜ்கள் இவ்வாறான ஒரு சங்கடத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களது நம்பிக்கைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவர்களது சிந்தனையானது, பிறழ்வும், தீங்கும் கொண்டதாக இருந்தது. தமது நடவடிக்கைகள் அனைத்தும் தவறுகள் ஏதுமில்லாதவை; உன்னதமானவை எனத் தாமே ஒருவகை நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, தாம் நாடாமலேயே அவர்கள் வழி பிறழ்ந்து செல்லலாயினர். அவர்களது பக்திப்பூர்வ தன்மை குறித்து இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்:

"அவர்களது (ஃகவாரிஜ்களது) தொழுகையின் முன்னால் உங்களது தொழுகையும், அவர்களது இரவு வேளைகளிலான வணக்கத்தின் முன்னால் உங்களது இரவு வணக்கமும், அவர்களது குர்ஆன் ஓதுதலின் முன்னால் உங்களது குர்ஆன் ஓதுதலும் எவ்வித மதிப்பும் அற்றவை என்றே நீங்கள் கருதுவீர்கள். இருந்தும் என்ன? அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள்; என்றாலும் அது அவர்களது தொண்டைக் குழியின் கீழ் செல்லாது. மார்க்கத்தின் ஊடாக அவர்கள் செல்வார்கள்; எனினும் எவ்வித பயனும் அவர்களுக்குக் கிட்டாது.
(முஸ்லிம்)

இறைத்தூதர் அவர்கள் மேலும் கூறினார்கள்:

"இஸ்லாத்தைப் பின்பற்றுவோரை அழித்தலையும் சிலைவணங்கிகளைக் காப்பதையுமே தம் கடமையாக அவர்கள் கொள்வார்கள்."
(முஸ்லிம்)

இதன் காரணமாகத் தான், ஒரு முஸ்லிம் அவர்களிடம் அகப்பட்டு, தன்னை அடையாளம் காட்டும்படி வேண்டப்பட்டபோது, தான் ஒரு இணைவைப்பவர் (முஷ்ரிக்) என்றும், 'இறை வேதத்தையும் இறை போதனைகளையும் அறிய ஆவல் கொண்டுள்ளேன்' என்றும் அந்த முஸ்லிம் கூறினார். இதைக் கேட்டதும் ஃகவாரிஜ்கள், அவருக்குப் பாதுகாப்பளித்து, பிரச்சினையின்றி அவர்தம் பயணத்தைத் தொடர உதவுவதாகக் கூறினர். தமது முடிவுக்கு ஆதரமாக அவர்கள் குர்ஆன் வசனம் ஒன்றை ஓதலாயினர்:

"இணை வைத்து வணங்குவோரில் எவரும் உம்மிடம் பாதுகாப்பைக் கோரினால், இறைவனுடைய வசனங்களை அவர் செவியுறும் வரையில் அவருக்கு அபயமளியும். (அவர் அதைச் செவியுற்றும் நம்பிக்கை கொள்ளாவிட்டால்) அவரை அவருக்கு அபயமளிக்கும் (வேறு) இடத்துக்கு அனுப்பி வைப்பீராக! ஏனென்றால் நிச்சயமாக அவார்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றார்கள்."
(அல் குர்ஆன் 9:6)

இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த மனிதர் தான் ஒரு முஸ்லிம் என உண்மையைக் கூறியிருந்தால், அப்போதே அவர் கொல்லப்பட்டிருப்பார்.

வாய்ப்புக்கேடாக சில முஸ்லிம்கள் இன்னமும் இவற்றிலிருந்து படிப்பினையேதும் பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. ஃகவாரிஜ்களின் பாதையிலேயே இன்னமும் சிலர் வழி நடத்தப்படுகின்றனர் போலத் தோன்றுகின்றது. பாவமொன்றை செய்து உடன் பாவமன்னிப்புத் தேடாதவர் எவரையும் உடனேயே நிராகரிப்புக் (குஃப்ர்) குற்றஞ்சாட்டி நிராகரித்து விடுவர் இவர்கள். ஷரீஆவை அமுல்செய்யாத ஆட்சியாளரும், அவ்வாட்சியாளர்க்கு கட்டுப்பட்டு வாழும் மக்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பர். அவ்விரு சாராரையும் நிராகரிப்பாளர்கள் எனப் பிரகடனம் செய்யாத மார்க்க அறிஞர்கள் பெரும் பாதகர்கள்; இவர்களது கருத்தை நிராகரித்து, அங்கீகாரம் பெற்ற ஒழுங்குமுறைகளின் கீழ் சட்டகோவைகளை அமைத்துத் தந்த இஸ்லாமிய சட்டமேதைகளுள் பிரசித்தி பெற்ற நால்வரையும் பின்பற்றியொழுகுவோர் பிற்போக்குவாதிகள்; ஆரம்பத்தில் இவர்களது நோக்கங்களுக்கு ஆதரவாக இருந்து, பின்னர் ஏதோ ஒரு காரணம் கருதி இவர்களை விட்டும் நீங்கிச் சென்று விட்டோர் முர்தத்கள்(17); அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பர். இவர்களைப் பொறுத்த வரை நான்காம் நூற்றாண்டிற்குப் பிந்தய கால கட்டங்கள் அனைத்தும், அறியாமையும், நிராகரிப்பும் நிரம்பியவை; இறை வணக்கத்தைக் கைவிட்டு சம்பிரதாயச் சிலை வணக்கத்தையே ஊக்குவிப்பவை. (18)

வரம்பு மீறியவர்கள் என இறந்தோர், இருப்போர் அனைவரையுமே குற்றம் சுமத்துவதன் மூலம் இவர்கள் தம்மைத்தாமே பெரும் பாவத்திற்குள் ஆழ்த்திக் கொள்கின்றனர். முஸ்லிம் ஒருவரை நிராகரிப்புக் குற்றம்சாட்டுவது மிகவும் பாரியதொரு விவகாரம் மட்டுமல்ல; பெரும் பாதகங்களை விளைப்பதாகவும் உள்ளது. நிராகரிப்பு குற்றத்திற்கு உள்ளான ஒருவர் கொல்லப்படுவதும் நியாயமான கருமங்களாக அமைந்து விடுகின்றன. ஒரு நிராகரிப்பாளர் என்ற வகையில் அவர் தனது மனைவி பிள்ளைகளிலிருந்து பிரித்து வைக்கப்பட வேண்டியவர். அவருக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும் இடையில் எவ்வித நல்லுறவும் நிலவ முடியாது. வாரிசுரிமைகள் எதற்கும் அவர் தகுதியானவர் அல்லர். அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட இயலாது. அவருக்காக ஜனாஸா தொழுகை தொழ முடியாது. இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்:

"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை நிராகரிப்பாளர் (காஃபிர்) எனக் கூறுவாராயின் நிச்சயம் அவ்விருவரில் ஒருவர் அவ்வாறே ஆவார்." 
(புகாரி)

ஆக, இவ்வாறான குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் ஒழிய, அக்குற்றச்சாட்டை சுமத்தியவர் மீதே அது திரும்பி வந்து அவர் இம்மையிலும், மறுமையிலும் பெருந்துயர்களை அனுபவிக்கும்படி செய்யும். உஸாமா பின் ஸைத்(ரழி) கூறினார்:

"'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறிய நாயன் வேறு யாரும் இல்லை' என ஒருவர் சாட்சி கூறுவாராயின் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவராகின்றார். எனவே அவரது உயிரும், உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அச்சத்தின் காரணமாகவோ, அல்லது வாளில் நின்றும் தப்பிக் கொள்வதற்காகவோ அவர் அவ்வாறு கூறியிருப்பின், அவர் அதனை இறைவனுடன் தீர்த்துக் கொள்வார். வெளிப்படையானவற்றை நாம் தீர்மானிக்கலாம்."
(புகாரி)

தனது கோத்திரத்தார் யுத்தத்தில் தோல்வியுற்றமை தெரிய வந்ததும் ஷஹாதா(19) கூறிய மனிதரை உஸாமா கொன்று விட்டார். இது தெரிய வந்த வேளை நபிகளார் உஸாமாவை வெகுவாகக் கடிந்து கொண்டார்கள். அம்மனிதர் தனது உயிரைக் காத்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே ஷஹாதா கூறினார் எனத்தான் நினைத்ததாகச் சமாதானம் கற்பிக்க முனைந்தார் உஸாமா, இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்:

"'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறிய நாயன் வேறு யாரும் இல்லை' என அவர் சாட்சியம் கூறிய பின்னரும் நீர் அவரைக் கொன்று விட்டீரா? உஸாமா கூறினார்: அன்றைய தினத்திற்கு முன்னர், நான் இஸ்லாத்தில் இணைந்திருக்கக் கூடாது எனக் கருதுமளவு, நபிகளார் இதனை மீண்டும் மீண்டும் கூறலானார்கள்."

விருப்புடன் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட காரணங்களிருந்தால் மட்டுமே அதிலிருந்தும் வெளியேற்றப்படலாம் என அல்-ஷரீஆ கற்பிக்கின்றது. பெரும் பாவங்களான கொலை, பிறன் மனை விழைதல், மது அருந்துதல் என்பன கூட, நிராகரிப்பு (குஃப்ர்) குற்றம் சாட்டப்படுமளவு தீவிரமான பாவங்களல்ல. குற்றம் சுமத்தப் பட்ட அந்த மனிதர் அல்-ஷரீஆவை அவமதிக்க, நிராகரிக்க அல்லது ஏற்க மறுக்க முனையாதவரை நிராகரிப்புக்கு உள்ளானவராக மாட்டார். இதனால் தான் குர்ஆன், திட்டமிட்டுக் கொலை செய்தவன் ஒருவனுக்கும், கொலை செய்யப்பட்டவனது குடும்பத்தில் இறந்து விட்டவனை அடுத்து இருப்பவருக்கும் இடையில் சகோதர பந்தம் ஒன்றினை நிறுவ முனைகின்றது:

".....ஒரு சிறிதேனும் அ(க்கொலையுண்ட)வனுடைய சகோதர (பாத்தியஸ்த)ர்களால், எவரும் மன்னிக்கப்பட்டு விட்டால், மிகக் கண்ணியமான முறையைப் பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு)விட வேண்டும். (பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தால், அந்த நஷ்ட ஈட்டைத் தயக்கமின்றி) நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும்."
(அல் குர்ஆன் 2:178)

மதுபானம் அருந்தியதற்க்காக ஏற்கனவே பலமுறை தண்டிக்கப்பட்டுவிட்ட ஒருவரைக் கடிந்து கொண்டோர் சிலரை நோக்கி இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்:

"அவர் மீது சாபமிடாதீர்கள். அவர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றார்."
(புகாரி)

மேலும் அல்-ஷரீஆ கொலை, கற்பழிப்பு, மது அருந்துதல் முதலிய குற்றங்களுக்கு வெவ்வேறுபட்ட தண்டனைகளை நியமம் செய்துள்ளது. இக்குற்றங்கள் நிராகரிப்பு என்று கொள்ளப்பட்டிருந்தால் இவைகளுக்கான தண்டனைகள் ரித்தா விதிகளின் கீழேயே நியமம் பெற்றிருக்கும்.

தீவிரத் தன்மை கொண்டோர் தாம் சாட்டும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாகக் கொண்டுள்ள பிரபலமில்லாத, சந்தேகத்துக்குரிய சான்றுகள் அனைத்தையும், இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆனும் சுன்னாஹ்வும் பலமிழக்கச் செய்து விடுகின்றன, இவ்வாறான விவகாரங்களை முஸ்லிம் சமூகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் அவற்றைக் கிளறுதல் விரயம்.

முற்றும்.

குறிப்புகள்:

12.   அனைவராலும் ஏற்கப்பட்டது.
13.   இமாம் அஹ்மதும், அல்-பைஹகானீயும் இப்னு உமரின் ஆதாரத்தின் பேரிலும், தபரீ, இப்னு அப்பாஸின் ஆதாரத்தின் பேரிலும் அறிவித்தன.
14.   அனைவரும் ஏற்று அறிவித்தது.
15.   அலைஹ் அஸ்-ஸலாம் அல்லது அலைஹிம் அஸ்-ஸலாம்: அவர் அல்லது அவர்கள் மீது இறைவன் நல்லருள் பாலிப்பானாக. முஹம்மது(ஸல்) அவர்கள் தவிர்ந்த ஏனைய இறைத்தூதர்கள் பெயர் சுட்டப்படும்போது கூறப்படுவது.
16.   அனைவராலும் ஏற்கப்பட்டது.
17.   ரித்தா (முர்தத்): இறைவனுக்கான அடிபணிதலை மறுத்துரைத்தல்; தான் பிரஜையாயிருக்க்கும் இஸ்லாமிய அரசின் மேலாணையை மறுத்தல்.
18.   பார்க்க: அப்த் அல்-ரஹ்மான் அபூ அல்-ஃகைர்: திக்ரயாதீ மாஅ ஜமாஅத் அல்-முஸ்லிமீன். அல்-தக்ஃபீர் வஅல்-ஹிஜ்ரா.
19.   ஷஹாதா: இறைவனே வணக்கத்திற்குரியவன், முஹம்மது(ஸல்) அவனது தூதர் என்று சாட்சி கூறுதல்.


·          தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும்” எனும் இத்தலைப்பு "நிராகரிப்புக்கும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி" எனும் டாக்டர் யூசுப் அல்-கர்ளாவி எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment